"வெயிட் பண்ணுங்கண்ணா.. வருவாங்க".. அண்ணாமலை சொன்ன மாதிரியே நடக்குதே.. சிக்கிய செந்தில் பாலாஜி..ஷாக்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை முன்பே எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு உள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை குறி வைக்கும் என்று கடந்த வருடம் ஆகஸ்ட் மாதமே அண்ணாமலை பேட்டி அளித்து இருந்தார். அதன்படி செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், போக்குவரத்து துறை அமைச்சராக அதிமுக ஆட்சி காலத்தில் முறைகேடு செய்ததாக செந்தில் பாலாஜி மீது உள்ள வழக்கில் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று அண்ணாமலையிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, வெயிட் பண்ணுங்கண்ணா அமலாக்கத்துறை கொஞ்சம் பிஸியா இருக்காங்க. முடிச்சிட்டு இங்கதான் வருவாங்க. விரைவில் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்வார்கள், என்று கூறினார்.
செந்தில் பாலாஜி பதில்: இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அப்போதே பதில் அளித்து இருந்தார். அதில், அண்ணாமலை எப்போது அமலாக்கத்துறை இயக்குநரா? அல்லது அவர் இணை இயக்குநரா?
ஒன்றிய அரசில் அவர் என்ன நிதி அமைச்சராக இருக்கிறாரா? அரவக்குறிச்சியில் தோல்வி அடைந்து ஓடினாரே.. அவர் தானே? என்ன பொறுப்பில் இருக்கிறார் அவர்? அந்த பக்கமே அவரை பார்க்க முடியவில்லையே? அமலாக்கத்துறை பற்றி அண்ணாமலை எப்படி பேச முடியும்?. தன்னிச்சையாக செயல்பட கூடிய அமலாக்கத்துறை பற்றி அண்ணாமலை எப்படி பேசலாம். அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவது வெட்ட வெளிச்சம் ஆகிறது.
ஆவணங்கள் இருந்தால் அண்ணாமலை கொடுக்கட்டும், பதில் சொல்கிறேன். மின்துறை மீதான அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு ஏற்க கூடியதாக இல்லை. மத்திய அரசு எவ்வளவு டாலருக்கு நிலக்கரி இறக்குமதி செய்ய கூறியுள்ளது என தெரிவிக்க வேண்டும். இதை பற்றித்தான் செய்தி போட வேண்டும். அமலாக்கத்துறை தனி பாடி. ஆனால் பாஜகவின் மாநில தலைவர் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எப்படி சொல்ல முடியும்? அவர்கள்தான் அமலாக்கத்துறையை கட்டப்படுத்துகிறார்களா?
அவருக்கு மூளை இருக்கிறதா? வேலை வெட்டி இல்லாதவர்களிடம் பேச முடியாது. எனக்கும் வேலை இருக்கிறது. உங்களுக்கும் வேலை இருக்கிறது. அவருக்கு வேலை இருக்கிறதா? மக்கள் நலனுக்காக பேச கூடிய தலைவர்களை பற்றி அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள் எதுவும் ஏற்புடையது அல்ல. அவரிடம் ஆவணம் இருந்தால் பேச சொல்லுங்கள். அண்ணாமலை வெற்று விளம்பரத்திற்காக பேச வேண்டாம். அமலாக்கத்துறையை ஒரு அரசியல் கட்சி எப்படி பயன்படுத்துகிறது அண்ணாமலை பேச்சில் தெரிகிறது, என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார்.
சொன்னது நடந்தது: இந்த நிலையில்தான் அண்ணாமலை சொன்னது போலவே தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு உள்ளார்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர்.
நேற்று 17 மணி நேரம் சோதனை முடிந்த பின் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றபோது நெஞ்சில் கைவைத்து வலிப்பதாக கூறி அவர் காரில் படுத்ததால் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்று இருக்கிறார்கள்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உள்ளது. நெஞ்சை பிடித்துக்கொண்டு காரில் படுத்துக்கொண்டு செந்தில் பாலாஜி அழுது இருக்கிறார். உடனே அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.












Click it and Unblock the Notifications