வடக்கில் செய்யப்பட்ட "டிரெண்ட்".. பெங்களூரிலிருந்து வந்த கும்பல்! கள்ளக்குறிச்சி மாஸ்டர்மைண்ட் யார்?
சென்னை: கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கலவரத்திற்கு பின் மூளையாக செயல்பட்டது யார்? இதற்காக திட்டம் போட்டுக்கொடுத்தது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் மாணவி மரணத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டம் கலவரத்தில் முடிந்தது. இந்த கலவரம் நாட்டையே உலுக்கி உள்ளது. கள்ளக்குறிச்சியில் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஹாஸ்டலில் தங்கி படித்த 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் கடந்த 12ம் தேதி பலியானார்.
இவரின் மரணத்தில் நிலவும் சந்தேகம்தான் அங்கு நடந்த கலவரத்திற்கு காரணம். இதையடுத்து தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதோடு மாணவியின் உடல் இரண்டாவது முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கேள்வி
ஹாஸ்டலில் மாடியில் இருந்து கீழே விழுந்து அந்த மாணவி மரணம் அடைந்தார். ஆனால் இது கொலையா, தற்கொலையா என்ற குழப்பம் நிலவி வருகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரம் எப்படி தொடங்கியது? யார் தொடங்கியது ? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் 100-200 என்ற எண்ணிக்கையில் வராமல் கிட்டத்தட்ட 3000 பேர் வந்து அங்கு கலவரம் செய்துள்ளனர். போஸ்டர்களை கையில் வைத்துக்கொண்டு, கம்புகள், கட்டைகளுடன் சரியான ஏற்பாட்டுடன் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.

வடக்கில் டிரெண்ட்
மிக முறையாக இந்த கலவரத்தை திட்டமிட்டு நடத்தி உள்ளனர். சாதாரண போராட்டத்தில் போலீஸ் தாக்குதல் நடத்தினால் அது கலவரம் ஆகும். ஆனால் கள்ளக்குறிச்சியில் போலீஸ் தாக்கும் முன்பே கலவரம் உருவாகி இருக்கிறது. இதற்காக ட்விட்டரில் கூட அழைப்பு விடுக்கப்படவில்லை. மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு ட்விட்டரில் டிரெண்ட் செய்யப்பட்டது. அதில் சில சர்ச்சைக்குரிய வடஇந்திய ஐடிக்கள், பேக் ஐடி போன்ற தோற்றம் கொண்ட ஐடிக்கள் போஸ்ட் செய்தன.

வாட்ஸ் ஆப்
தமிழ்நாட்டிற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் கூட இதில் ட்விட் செய்தனர். ஆனால் இதில் கலவரத்திற்காக அழைப்பு எதுவும் விடுக்கப்படவில்லை. மாணவி குறித்து மட்டுமே டிரெண்டு செய்யப்பட்டது. மற்றபடி வாட்ஸ் ஆப் மூலம் கலவரத்திற்கு திட்டமிடப்பட்டதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. இந்த கலவரம் வாட்ஸ் ஆப்பில் திட்டமிடப்பட்டதாக வெளியான செய்திகளை அடுத்து வாட்ஸ் ஆப் அட்மினை கைது செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டு உள்ளது.

கைதுகள்
போலீஸ் வட்டார தகவல்களின்படி, மொத்தம் 1500 பேர் பல்வேறு வாட்ஸ் ஆப் குழுக்களை தொடங்கி அதில் போராட்டம் செய்ய திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இதில் உள்ளூர் ஆட்கள் பலர் அடக்கம். அண்டை மாவட்டத்தை சேர்ந்த பலரும் அடக்கம் என்று கூறப்படுகிறது. வாட்ஸ் ஆப் குழுக்கள் தொடங்கப்பட்ட சில மணி நேரத்தில் போராட்டங்களை செய்ய முடிவு செய்துள்ளனர். தற்போது இதன் அட்மீன்களை கைது செய்யும் பணியை போலீசார் தரப்பு செய்து வருகிறது.

கும்பல் வந்தது
திருப்பூா் மாவட்டத்தை சேர்ந்த எம்.அருண்குமாா் (22), எஸ்.எஸ்.காலனியை சேர்ந்த டி.வெங்கடேஷ் (20) ஆகியோர் உட்பட வாட்ஸ் ஆப்பில் இது தொடர்பாக தகவல் அனுப்பிய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தமாக 350 பேர் இந்த கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். அதே சமயம் பெங்களூரிலிருந்தெல்லாம் கலவரம் செய்வதற்காக ஆட்கள் இறக்கப்பட்டதாகவும் தகவல் வருகின்றன. இவர்கள் எப்படி திரட்டப்பட்டனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

உளவுத்துறை சொதப்பியதா?
இது போன்ற பெரிய கலவரம், போராட்டம் நடக்கும் முன் அது உளவுத்துறைக்கு தெரியும். ஆனால் இந்த விவகாரத்தில் உளவுத்துறைக்கு அந்த விஷயம் தெரியாமல் போனதா? அல்லது தெரிந்தும் அது பெரிதாகாது என்று விட்டுவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. உளவுத்துறை இது தொடர்பாக முதல்வருக்கு முன் கூட்டியே அறிக்கை கொடுத்ததா? அல்லது முதல்வர் கொரோனா சிகிச்சையில் இருந்ததால் உளவுத்துறை தகவல்களை பாஸ் செய்ய தவறியதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கோர்ட் கோபம்
இதை கோர்ட்டும் கண்டித்துள்ளது கள்ளக்குறிச்சி கலவரம் கோபம் காரணமாக நடந்தது போல தெரியவில்லை திட்டமிட்டு செய்தது போல இருக்கிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உளவுத்துறை அறிக்கை எங்கே? கைது செய்தால் மட்டும் போதுமா? சமூக வலைத்தளங்களில் தனியாக விசாரணை நடத்துகிறார்கள். நீங்கள் அவர்களுக்கு எதிராக என்ன செய்தீர்கள்? இதை நினைத்தாலே வருத்தமாக இருக்கிறது. இந்த கலவரம் கோபம் காரணமாக நடந்தது போல தெரியவில்லை. திட்டமிட்டு செய்தது போல இருக்கிறது. இந்த கலவரம் திட்டமிட்டு செய்யப்பட்ட குற்றம். வாட்ஸ் அப் குரூப் அட்மினை கைது செய்ய தமிழக டிஜிபிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றம் இந்த விசாரணையை கண்காணிக்கும். இதில் எடுக்கப்படும் ஆக்சன் எதிர்காலத்தில் மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும், என்று நீதிபதி கூறியுள்ளார்.
Recommended Video

ஆக்சன் எடுக்கப்படலாம்
இதில் ஒரு பக்கம் வலதுசாரி மீதும், இன்னொரு பக்கம் இடதுசாரிகள் மீதும் புகார்கள் வைக்கப்படுகின்றன. பள்ளி நிர்வாகமே கூட கலவரத்தை தூண்டி ஆதாரங்களை அழித்து இருக்கலாம் என்றும் கூட வாதம் வைக்கப்படுகிறது. ஆனால் அப்படி எதற்குமான ஆதாரம் எதுவும் இல்லை. அப்படி இருக்கையில் இந்த கலவரத்தில் தொக்கி நிற்கும் ஒரே கேள்வி.. இந்த கூட்டத்தை கூட்டிய.. கலவரத்திற்கு ஏற்பாடு செய்த மாஸ்டர்மைன்ட் யார்? கோர்ட்டே இது திட்டமிட்டது போல இருக்கிறது என்று கூறி உள்ளது... அப்படி இந்த திட்டத்தை போட்டது யார்?












Click it and Unblock the Notifications