அப்பாவை பார்க்க வந்தபோது கண்ணீரோடு சொன்னீங்களே.. “நான் இருக்கேன் அண்ணே..” - எமோஷனலாக பேசிய ஸ்டாலின்!
சென்னை : கருணாநிதி உடல்நலம் குன்றி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது அவரைப் பார்க்க வைகோ வரும்போது நடந்தது பற்றி நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் அரசியல் வாழ்க்கையை விளக்கும் ஆவணப்படம் வெளியீட்டு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நீண்ட நெடிய அரசியல் பயணத்தை விவரிக்கும் வகையில் 'மாமனிதன் வைகோ' என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது.
'மாமனிதன் வைகோ' ஆவணப்படத்தை வெளியிட்டுப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "சத்யம் திரையரங்கில் பல சினிமாக்கள் திரையிடப்பட்டுள்ளன. அதில் வரும் ஹீரோ கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டவை. வைகோ ரியல் ஹீரோ" என்றார்.

குகைக்குச் சென்று சிங்கத்தைப் பார்த்தோம்
மேலும் பேசிய திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், "பொடா சட்டத்தில் கைதாகி வேலூர் சிறையில் இருந்தா வைகோ. அப்போது நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. மதிமுக திமுகவோடு கூட்டணி அமைத்திருந்தது. அப்போது கருணாநிதி, என்னையும், துரைமுருகனையும் அழைத்து, வேலூர் சிறையில் இருக்கும் வைகோவை சந்தித்து கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி வருமாறு அனுப்பி வைத்தார். சிறையில் போய் பார்த்தோம். சிங்கத்தை குகையில் சென்று சந்திப்பது என்று சொல்வார்களே அதுபோல் சென்றோம். குகையில் சிங்கம் போல் இருந்தார் வைகோ.

படித்துக் கூடப் பார்க்கல
கருணாநிதி சொல்லி அனுப்பினார் என்ற போது, படித்துக் கூட பார்க்காமயிலேயே, தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் வைகோ. அதெல்லாம் இப்போது நினைவுக்கு வருகிறது. திமுக சார்பில் எத்தனையோ மாநாடுகள் நடந்துள்ளன. திமுக மாநாடுகளில் அவர் பேச்சுக்கு பெரிய வரவேற்பு இருக்கும். பிரச்சாரக் கூட்டங்கள், மாநாடுகளில் உணவு நேரத்தில் தான் பேசுவார் வைகோ. அப்போது தான் கூட்டம் கலையாது. வைகோ பேசினால் யாரும் சாப்பிடக் கூட யாரும் எழுந்து போக மாட்டார்கள்.

போன் செய்வேன்
வைகோ திமுக மாநாடுகளில் ஒவ்வொரு முறை பேசி முடித்ததும் உடனடியாக நான் டெலிபோன் செய்வேன். ரொம்ப உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினீர்கள். எங்களுக்கெல்லாம் மெய்சிலிர்த்துப் போனது என நான் அவரிடம் பலமுறை போன் செய்து சொன்னது உண்டு. வைகோவின் 56 ஆண்டுகால அரசியல் வாழ்வைப் பேச நேரமில்லை, பேசினால் பேசிக்கொண்டே போகலாம். வைகோவின் அரசியல் பயணம் பலருக்கும் ஓர் எடுத்துக்காட்டு.

கறுப்புத் துண்டை பார்த்ததுமே
கருணாநிதி உடல்நலம் குன்றி கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருந்தபோது, அவரைப் பார்க்க வந்த வைகோவை, மாடிப்படி ஏறி உள்ளே வந்தபோதே கறுப்புத் துண்டை வைத்து கருணாநிதி அடையாளம் கண்டுகொண்டார். உடல் நலம் மிகவும் குன்றியதால் யாரையும் அடையாளம் காண முடியாமல் இருந்த நிலையிலும் வைகோவை அடையாளம் கண்டு கொண்டு, கையை நீட்டினார். கையைப் பிடித்துக்கொண்டு அண்ணன் வைகோ கண்ணீர் விட்டு அழுதார்.

நாட்டுக்கே முக்கியம் வைகோ
கருணாநிதியிடம், உங்களுக்கு நான் எப்படி பக்கபலமாக இருந்தேனோ அதுபோல், ஸ்டாலினுக்கும் இருப்பேன் என வைகோ கூறினார். அதேபோல், வைகோவுக்கு துணையாக நானும் இருப்பேன். அவரது உடல் நலன் எனக்கு மட்டும் இல்லை, இந்த நாட்டுக்கே முக்கியம். அதனால் தான் மக்களவைத் தேர்தலின்போது, அவர் போட்டியிட விரும்பினாரோ இல்லையோ, நானே அவரிடம் உரிமையோடு சொன்னேன்.

அண்ணே, நீங்க முக்கியம்
அண்ணே, உங்க உடல்நலன் எனக்கு ரொம்ப முக்கியம். அதைவிட இந்த நாட்டுக்கு முக்கியம். தேர்தல் முடிவு எப்படி வரும் என்று நமக்குத் தெரியாது. ஆனால், நீங்கள் நாடாளுமன்றம் செல்ல வேண்டும். தேர்தலில் போட்டியிடாமல் மாநிலங்களவை செல்லுங்கள் எனக் கூறினேன். என் விருப்பத்தை கேட்டு கொண்டதற்கு வைகோவிற்கு இப்போது நன்றி சொல்கிறேன்" என மு.க.ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications