அந்த சில நிமிடங்கள்.. டக்கென ஆளுநரை தனது காரில் ஏறச் சொன்ன பிரதமர் மோடி.. உற்றுப் பார்க்கும் திமுக!
சென்னை : பிரதமர் மோடியும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும் ஒரே காரில் ஒன்றாகப் பயணித்தனர். விவேகானந்தர் இல்லம் முதல் ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளம் வரை தான் பயணித்த காரிலேயே ஆளுநரையும் அழைத்துச் சென்றார் மோடி. இந்த சில நிமிட பயணங்களில் முக்கியமான விஷயங்கள் பரிமாறப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். பின்னர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னை - கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்கி வைத்தார். இதையடுத்து விவேகானந்தர் இல்லத்துக்குச் சென்ற பிரதமர் மோடி ராமகிருஷ்ண மடத்தின் 125ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்றார்.
விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து அடையாறு கடற்படை தளத்துக்குப் புறப்பட்ட பிரதமர் மோடி தன்னுடைய காரில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியையும் அழைத்துச் சென்றார். பிரதமர் மோடியும், ஆளுநர் ஆர்.என்.ரவியும் ஒரே காரில் பயணித்தது கவனம் பெற்றது.

ஆளுநர் சர்ச்சை பேச்சு : ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராகப் பொறுப்பேற்றது முதலாகவே சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி வருகிறார். இதனால், திமுக அரசு - ஆளுநர் இடையே வெகு காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வெளிநாட்டு நிதி மூலம் தூண்டிவிடப்பட்டது என்று கூறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அனுப்பப்பட்ட மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் நிலுவையில் இருக்கும் நிலையில், மசோதாக்கள் நிலுவையில் இருந்தால் அது நிராகரிக்கப்பட்டது என அர்த்தம் எனத் தெரிவித்தார். ஆளுநரின் இந்தக் கருத்துகளுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. ஆளுநர் பேச்சைக் கண்டித்து 12ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

திமுக - ஆளுநர் மோதல் : மேலும், ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். இப்படியான சூழலில் பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ரவி ஆகியோரும் உடன் இருந்தனர்.
விவேகானந்தர் இல்லத்தில் ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி, ஆளுநர் ரவி ஆகியோர் பங்கேற்றனர். முதல்வர் சார்பாக, அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார். இந்த நிகழ்வில் சுமார் 15 நிமிடங்கள் உரையாற்றிய பிரதமர் அங்கிருந்து கார் மூலம் மீண்டும் அடையாறு கடற்படை தளத்துக்கு கார் மூலம் புறப்பட்டார்.

அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவியையும் தன்னுடன் காரில் அழைத்துச் சென்றார் பிரதமர் மோடி. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ள சூழலில், முதல்வர் ஸ்டாலின், ஆளுநரை திரும்பப் பெற பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய சூழலில் இருவரும் ஒரே காரில் பயணித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் பயணத்தின்போது பிரதமர் - ஆளுநர் இடையே முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications