முடியல.. மாரிமுத்துவின் கடைசி வார்த்தை இதுதான்! டப்பிங்கில் என்ன நடந்தது? ஆடியோ என்ஜினீயர் உருக்கம்
சென்னை: தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து இன்று காலையில் டப்பிங் பேசியபோது மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் தான் டப்பிங் பேசியபோது அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி அவருடன் இருந்த ஆடியோ என்ஜினீயர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா இயக்குனரும், குணச்சித்திர நடிகராகவும் இருந்தவர் நடிகர் மாரிமுத்து. இவருக்கு வயது 57. தேனி மாவட்டத்தை சேர்ந்த இவர் சென்னையில் வசித்து வந்தார். ‛கண்ணும் கண்ணும்', 'புலிவால்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர் அதன் பிறகு நடிகரானார்.

குறிப்பாக 'பரியேறும் பெருமாள்' படத்தில் கதாநாயகி கயல் ஆனந்தியின் தந்தையாக நடித்தது அனைவரையும் கவர்ந்தது. சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதுதவிர சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரம் மூலம் அவர் அனைவரின் வீட்டிலும் ஒருவர் போல் மாறிவிட்டார். அவருக்கு சிறுவர்கள் முதல்வர் பெரியவர்கள் வரையிலான ரசிகர் பட்டாளம் அதிகரித்தது. சீரியல் பார்க்காத இளம்வயதினர் கூட மாரிமுத்துவின் டயலாக்கிற்கு ரசிகர்களாக மாறிப்போயினர். இதனால் அவர் பேசும் வசனங்கள், அது சார்ந்த மீம்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகின.
இந்நிலையில் தான் இன்று காலை சென்னையில் 'எதிர்நீச்சல்' சீரியலுக்காக டப்பிங் பேசியபோது மாரிமுத்து மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இன்று மாலை அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்கு செய்யப்பட உள்ளது. இந்நிலையில் தான் மாரிமுத்துவின் இறுதி நொடிகளில் நடந்தது என்ன? என்பது பற்றி திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக நடிகர் மாரிமுத்துவுடன் டப்பிங் பணியில் இருந்த ஆடியோ என்ஜினீயர் கார்த்திக் கூறியதாவது:
இன்று காலை 6.30 மணிக்கு டப்பிங் பணிக்காக மாரிமுத்து வந்தார். வரும்போது அவரிடம் எந்த பிரச்சனையும் இல்லை. உடல்சோர்வும் இல்லை. வழக்கமாக வருவது போல் தான் வந்தார். இதையடுத்து காலை 8 மணி வரை அவர் நன்றாக டப்பிங் பேசினார். 8 மணிக்கு பிறகு ‛எனக்கு முடியல. Suffocation ஆக இருக்கிறது. 10 நிமிடம் ரிலாக்ஸ் ஆக வேண்டும்' என்றார்.
‛ஓகே சார்' வெளியே ‛ரெஸ்ட்' எடுங்கள் என கூறினோம். அவர் வெளியே புறப்பட்டார். இதையடுத்து எதிர்நீச்சல் ‛கமலேஷ்' சார் டப்பிங் பேசுவதற்கான பணி தொடங்கியது. இந்த வேளையில் வெளியே வந்து பார்த்தபோது நடிகர் மாரிமுத்துவை காணவில்லை. இதுபற்றி விசாரித்தபோது தான் காரில் மருத்துவமனைக்கு சென்றது தெரியவந்தது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அவர் மரணமடைந்த செய்தி வெளியாகி அதிர்ச்சியை கொடுத்து இருந்தது'' என உருக்கமாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications