நீங்க நினைப்பதைவிட மோசம்.. நடிகை சமந்தாவுக்கு என்னாச்சு? மயோசிடிஸ் நோயால் இவ்வளவு ஆபத்தா
சென்னை: பிரபல நடிகை சமந்தா மயோசிடிஸ் எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டு இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அவரை பாதித்து இருக்கும் மயோசிடிஸ் நோய் பாதிப்பு பற்றி விரிவாக காண்போம்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கடந்த சில வாரங்களுக்கு முன் கையில் ட்ரிப்ஸ் ஏற்றியபடி டப்பிங் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டார்.
தான், மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக சமந்தா தெரிவித்தார். இந்த நிலையில் அவரது உடல் நிலையில் மோசமானதால் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

மயோசிடிஸ் என்றால் என்ன?
இந்த நிலையில் சமந்தாவை பாதித்து இருக்கும் மயோசிடிஸ் நோய் என்றால் என்ன என இணையத்தில் பலரும் தேடி வருகின்றனர். இந்த நோய் பன்னெடுங்காலமாக நம் மக்களை பாதித்து வருகிறது. தசை அழற்சி எனப்படும் இந்த நோய் பாதித்தால், தசையில் உள்ள செல்களை மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தி சிதைக்கும்.

பெண்களுக்கே ஆபத்து
இந்த மயோசிடிஸ் நோய் 2 வகைப்படுகிறது. தோலில் பாதிப்பை ஏற்படுத்தும் தசை அழற்சி நோய் டெர்மடோ மயோசிடிஸ் என்று அழைக்கப்படுகிறது. தோலில் பாதிப்பை ஏற்படுத்தாத தசை அழற்சி நோய் பாலி மயோசிடிஸ் என்று கூறப்படுகிறது. இந்த நோய் இரு பாலினத்தவருக்கும் வரும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும், ஆண்களைவிட பெண்களே இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

மழை காலங்கள்
தசை அழற்சி நோயை கவனிக்காமல் விட்டுவிட்டால் தசை செல்கள் நிரந்தரமாக அழிந்து இயல்பு வாழ்க்கையே முடங்கும் அபாயம் ஏற்படும். 1 லட்சம் பேரில் 22 பேரை தாக்கும் இந்த மயோசிடிஸ் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மழை காலம் மற்றும் குளிர் காலங்களில் இந்த நோயின் தாக்கம் கூடுதலாக இருக்கும்.

என்ன காரணம்
வைரஸ் தொற்றின் தாக்கம் காரணமாக இது ஏற்படலாம் என்று சில கூறுகிறார்கள். ஆனால், ஆய்வுப்பூர்வமாக இது நிரூபிக்கப்படவில்லை. இந்த மயோசிடிஸ் நோய் வருவதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

உயிருக்கே ஆபத்து
மயோசிடிஸ் பாதிப்பால் தசை பலவீனமாகி சாப்பிடும்போது சுவாசக் குழாய்க்குள் செல்லும் அபாயம் உள்ளது. இதனால் ஆஸ்பிரேசன் நிமோனியா ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. வெகு சிலருக்கு இதனால் புற்று நோயும் ஏற்படலாம். மேலும் ரத்த குழாயில் அழற்சி, நுரையீரல் பாதிப்பு, இதய பாதிப்புகள் ஏற்படலாம்.

அறிகுறிகள்
படுக்கையிலிருந்து எழுவதில் சிரமம், அமர்ந்தும் எழுவதில் சிரமம், நடப்பதில் சிரமம், காய்ச்சல், பசியின்மை, தசை வீக்கம், சாப்பிடும்போதும், தண்ணீர் அருந்தும்போதும் சிரமம் ஏற்படும். தோலில் சிவப்பு தடிப்புகள், தசை வலி, பேச்சில் சிரமம், இருமல், குரல் மாற்றம், மார்பில் சிவப்பு தடிப்புகள் ஆகியவை மயோசிடிஸ் நோயின் அறிகுறிகள்.

என்ன சிகிச்சை?
ஆனால் மக்களிடேயே மயோசிடிஸ் நோய் குறித்து அதிக விழிப்புணர்வு இல்லை. இதற்கு ஆரம்ப நிலையில் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். உடல்வலி என்று நினைத்து சாதாரணமாக இருந்துவிடுகிறார்கள் எனக்கூறும் மருத்துவர்கள், மூட்டு - இணைப்புத் திசு சிறப்பு நிபுணர்களின் கண்காணிப்புடன் மயோசிடிஸ் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற வேண்டும் என்கின்றனர்.

இலவச சிகிச்சை
தனியார் மருத்துவமனைகளில் மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை பெற வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்ய வேண்டும். இந்த நோய்க்காக ஐவி இம்யூனொக்ளோபிளின் எனப்படும் மருந்து நாள்தோறும் வழங்க வேண்டும். இதற்காக தினசரி ரூ.50,000 செலவாகும். ஆனால், அரசு மருத்துவமனைகளில் இந்த நோய்க்கு இலவச சிகிச்சையுடன் மருந்துகளும் இலவசமாக கிடைக்கின்றன.












Click it and Unblock the Notifications