"புஸ்ஸ்ஸ்ஸ்".. மெதுவாக மறைந்து.. சென்னைக்கு மேலே வானிலையில் ஏற்பட்ட மாற்றம்.. வல்லுனர்கள் வார்னிங்
சென்னை: வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி வலிமை குறைந்து கொண்டே வருகிறது. இதனால் இன்று வானிலை எப்படி இருக்கும் என்று வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த மாதத்தின் முதல் 14 நாட்கள் மிக கனமழை பெய்தது. தமிழ்நாடு முழுக்க பரவலாக கனமழை பெய்து வந்தது.
முதல் 14 நாட்கள் பெய்த மழைக்கு பின் இரண்டு காரணங்கள் இருந்தன. முதல் மழைக்கு காரணம் - வளிமண்டல மேலடுக்கு சுழற்சி. இரண்டாவது மழைக்கு காரணம் காற்றழுத்த தாழ்வு பகுதி.
ஆக்ஷன் “ரெடி”.. வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்தில் 5 நாள் மழைக்கு வாய்ப்பு
முதல் வாரம்
இதில் முதல் மழை சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் வங்கக்கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஏற்பட்டது. இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி எதிர்பார்த்ததை விட அதிக மழையை கொடுத்தது. சென்னையில் முதல் வாரம் முழுக்க கனமழை பெய்ய இதுதான் காரணம். அதன்பின் இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஏற்பட்ட காற்று அப்படியே தென் மாவட்டங்களுக்கு சென்றது. இதனால் டெல்டா மற்றும் தெற்கு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. டெல்டா மாவட்டங்களிலும் எதிர்பார்த்ததை விட அதிக மழையை இது கொடுத்தது.
இரண்டாவது வாரம்
அதன்பின் இரண்டாவது வாரம் காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கை வடக்கு பகுதிக்கு அருகில் இருந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கனமழை பெய்தது. ஆனால் இது புயலாக மாறவில்லை. ஏனென்றால் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலத்திற்கு மிக அருகில் இருந்தது. அதன்பின் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இது மாறியது. உடனே இலங்கை அருகே இது கரையை கடந்தது. இதன் காரணமாகவும் சென்னையில் காட்டு மழை பெய்தது. சில மணி நேரங்களில் அதிக அளவு மழையை இது கொடுத்தது.
இந்த வாரம்
இந்த நிலையில்தான் கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் உருவானது. இது கனமழையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், பெரிதாக மழையை கொடுக்காமல் மறைந்து உள்ளது. இது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்திய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆகும். முதலில் இது வடக்கு சென்னையை நோக்கி செல்லுமா அல்லது டெல்டாவிற்கு செல்லுமா என்ற குழப்பம் இருந்தது. அதன்பின் வறண்ட காற்று காரணமாக இது வலிமை அடைவதில் சிக்கல் இருந்தது. வறண்ட காற்று இந்த தாழ்வு பகுதியை வலிமை அடைய விடாமல் தடுத்தது. பெரும் போராட்டத்திற்கு பின்புதான் இது தாழ்வு மண்டலமாகவே மாறியது.
வறண்ட காற்று
ஆனால் தாழ்வு மண்டலமாக மாறிய மறுநாளே வறண்ட காற்று காரணமாக இது வேகம் இழக்க தொடங்கியது. மிக மிக மெதுவாக நகர்ந்தது. சென்னை வடக்கு பகுதியை நோக்கி இந்த தாழ்வு மண்டலம் வந்தது. ஆனால் சென்னையை நெருங்கும் போது இது மேலும் வலிமை குறைந்தது. சென்னைக்கு அருகில் 150 கிமீ தொலைவில் இருக்கும் போது இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக, தாழ்வு மண்டலத்தில் இருந்து வலிமை குறைந்தது. இதனால் சென்னைக்கு பெய்ய வேண்டிய பெரும் மழையும் இல்லாமல் போனது. இதன் காரணமாக மழையில் இருந்து சென்னை தப்பித்தது.
என்ன நடந்தது
நேற்று பிற்பகல் சென்னையின் வான் பகுதிக்கு அருகில் தாழ்வு பகுதி வந்தது. அப்போது இது மேலும் வலிமை குறைந்தது. இதையடுத்து மாலை நேரம் முழுமையாக சென்னைக்கு அருகில் வந்தது. இதன் காரணமாக பெரிதாக சென்னையில் மழை எங்கும் பெய்யவில்லை. ஏற்கனவே இந்த தாழ்வு பகுதி அனுப்பிய குளிர்ந்த காற்று காரணமாக சென்னையில் குளிர்ச்சியான வானிலையே நிலவியது. இந்த நிலையில்தான் இன்று இந்த தாழ்வு பகுதி மேலும் வலிமை குறைந்துள்ளது. கிட்டத்தட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி போல வலிமை குறைந்து உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தாழ்வு மண்டலம்.. கிளைமேக்சில் திருந்தும் வில்லன் போல.. புஸ்ஸ்ஸ் என்று ஆகி ஏமாற்றம் அளித்துள்ளது.
மறைந்தது
அப்படியே லேசாக மறைந்து உள்ளது. இதனால் பெரிதாக மழை இனி பெய்யாது. பெங்களூரில் இதன் காரணமாக அனுப்பப்பட்ட காற்று மூலம் மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன. இது தொடர்பாக சென்னை ரெயின்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் மறைந்துவிட்டது. இதனால் தெற்கு கர்நாடகாவில் ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யலாம். ஏற்கனவே இது கொண்டு வந்த குளிர்ச்சியான காற்று காரணமாக வடக்கு தமிழ்நாட்டில் லேசான மழை பெய்யலாம்., என்று தெரிவித்து உள்ளது.