அதிமுகவும் கிடையாது.. திமுக கதவும் குளோஸ்.. கடைசியில் தேமுதிகவின் திட்டம் இதுதான்.. நடக்குமா?
லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடியாத நிலையில் என்ன செய்யலாம் என்பது குறித்து தேமுதிக தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடியாத நிலையில் என்ன செய்யலாம் என்பது குறித்து தேமுதிக தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.
தேமுதிக தற்போது மிக இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டு இருக்கிறது. தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்று மற்ற கட்சிகளுக்கு குழப்பம் இருந்தது போக, தற்போது தேமுதிக கட்சிக்கே அந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஆம் தேமுதிகவே தற்போது என்ன செய்வது யாருடன் பேச்சுவார்த்தையை நடத்துவது என்று தெரியாமல் பெரிய குழப்பத்தில் உள்ளது.
அதிமுகவின் பலவீன கூட்டணிதான்.. எங்களோட பலமே.. உற்சாகமாக சொல்கிறார் சோ.பா. மகன் ரெங்கநாதன்
கதவுகள் மூடப்பட்டது
திமுகவின் லோக்சபா கூட்டணி கதவுகள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டது. இனி திமுக தங்கள் கூட்டணியில் புதிதாக யாரையும் சேர்க்க வாய்ப்பில்லை. தேமுதிக கூட்டணி எல்லாம் திமுக தலைவர் ஸ்டாலினை தூக்கத்திலிருந்து எழுப்பிவிடும் அளவிற்கு முக்கியமான விஷயம் கிடையாது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியது கூட குறிப்பிடத்தக்கது.
அதிமுக முடிவு
இந்த நிலையில் அதிமுகவும் எப்போது வேண்டுமானாலும் கூட்டணி கதவை மூடலாம் என்றும் கூறுகிறார்கள்.
தேமுதிக 7 இடங்களை கேட்டு தற்போது 5 இடங்கள் வரை குறைந்து வந்துள்ளது. ஆனால் தேமுதிகவிற்கு வேறு போக்கிடம் இல்லாத காரணத்தால் தற்போது வெறும் 3 இடங்கள் மட்டுமே கொடுப்போம் என்று அதிமுக கைவிரித்து இருக்கிறது.
தேமுதிக என்ன
இந்த நிலையில்தான் தேமுதிக புதிய கூட்டணி அமைக்கும் முடிவில் இருப்பதாக கூறுகிறார்கள். அதன்படி திமுக, அதிமுக கூட்டணியில் இடம்பெறாத சிறிய கட்சிகளை வைத்து தேமுதிக கூட்டணி அமைக்க இருப்பதாக தெரிவிக்கிறார்கள். இதற்கான பேச்சுவார்த்தையை தேமுதிக எப்போது வேண்டுமானாலும் தொடங்கும் என்றும் கூறுகிறார்கள்.
கமல்ஹாசன் கூட்டணி
அதன்படி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க இருக்கிறது. இதற்கான ஆலோசனை இன்று நடக்க உள்ளது என்றும் சில செய்திகள் வருகிறது. கமல்ஹாசனும், தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவே இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த கூட்டணி கைகூடுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.