திருமாவளவனை சிக்க வைத்த கேஸ்.. 2002 மதமாற்ற தடை சட்டம் என்பது என்ன? அப்போது என்ன சொன்னார் ஜெயலலிதா?
சென்னை: 21 வருடங்களுக்கு முந்தைய வழக்கில் விசிக தலைவர் திருமாவளவன் மீது பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 2002 ஆம் ஆண்டில் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த மதமாற்ற தடை சட்டம் என்பது என்ன? அதை சட்டமன்றத்தில் கொண்டு வரும்போது ஜெயலலிதா என்ன சொன்னார் தெரியுமா?
மயிலாடுதுறையில் கடந்த 2003 ஆம் ஆண்டு, விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில், மதமாற்று தடைச் சட்டத்தை கண்டித்து நடைபெற்ற பேரணியில் கலவரம் வெடித்தது. இந்த கலவரம் தொடர்பான வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி எம்.பியுமான திருமாவளவன் ஆஜராகாமல் இருந்து வந்தார்.

திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்: இந்நிலையில் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர் விஜயகுமாரி உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கை ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
திருமாவளவன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததன் காரணமாகவும், வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக விசிக தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்யாததாலும் திருமாவளவனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திருமாவளவன் போலீசாரால் கைது செய்யப்படலாம்.
மதமாற்ற தடைச் சட்டம்: கடந்த 2002ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை ஜெயலலிதா தலைமையிலான அப்போதைய அதிமுக அரசு கொண்டு வந்தது. அக்டோபர் மாத இறுதியில் மத மாற்றத் தடைச் சட்ட மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் எந்த ஒரு மதத்தையோ அல்லது சிறுபான்மை இனத்தவரையோ மனதில் வைத்து கொண்டுவரப்படவில்லை. தாங்களாகவே விருப்பப்பட்டு மதம் மாற நினைப்பவர்கள் யாரையும் இந்தச் சட்டம் ஒன்றும் செய்யாது. வற்புறுத்தியும், ஆசை காட்டியும், ஏமாற்றியும் மதமாற்றம் செய்ய முயற்சிப்பவர்கள் மட்டுமே இந்தச் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுவார்கள் என அன்றைய முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்தார்.
திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்.. கலவர வழக்கில் மயிலாடுதுறை நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. அடுத்து கைது?
ஜெயலலிதா கொடுத்த விளக்கம்: 1981 ஆம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் சுமார் 800 தலித் மக்கள் வற்புறுத்தலின் பேரில் முஸ்லீம் மதத்திற்கு மாறினர். 1982 ஆம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய கலவரத்திற்கு மதமாற்ற முயற்சி தான் காரணம் என்றும் கண்டறியப்பட்டது.
1997 ஆம் ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மதமாற்ற சம்பவம் நடந்துள்ளது. விருதுநகர், தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஏராளமானோர் மதம் மாறப் போவதாக அறிவித்துள்ளனர். எனவே மதமாற்றத்தைத் தடை செய்வதன் அவசியம் குறித்து உணர்ந்தே தமிழக அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது எனத் தெரிவித்தார் ஜெயலலிதா.
கடுமையான எதிர்ப்பு: திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் அதிமுகவின் பெரும்பான்மை காரணமாக அந்தச் சட்டம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. மதமாற்ற தடைச் சட்டத்திற்கு எதிராக சிறுபான்மையின அமைப்புகள் குரல் கொடுத்தன.
தமிழக அரசின் மதமாற்றத் தடைச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி சிறுபான்மையின அமைப்புகள் அனைத்துக் கட்சி கண்டன மாநாடு நடத்தினர். இதில் கருணாநிதி உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.
போப் ஆண்டருக்கே பதிலடி கொடுத்த ஜெயலலிதா: 2003 ஆம் ஆண்டு ஜூன் மாதம், போப் ஆண்டவரே, கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை கண்டித்தபோது, போப் ஆண்டவருக்கு அதற்கு எந்தவிதமான அதிகாரமும் உரிமையும் கிடையாது என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்தார்.
சட்டம் ரத்து: எனினும், 2004 ஆம் ஆண்டு ஏப்ரலில் நடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி மொத்தமுள்ள 39 இடங்களையும் கைப்பற்றியது. அதிமுக ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. இந்த படுதோல்வியை தொடர்ந்து, கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை 2004 ஆண்டு மே மாதம், அவசரச் சட்டத்தின் வாயிலாக ரத்து செய்தார் ஜெயலலிதா.
பின்னர் 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தமிழ்நாடு கட்டாய மத மாற்றத் தடை (நீக்க) சட்ட முன் வடிவு தாக்கல் செய்யப்பட்டு 20016 மே 31 ஆம் தேதி அந்தச் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அதன் மூலம் தமிழகத்தில் கட்டாய மதமாற்றத் தடை சட்டம் முடிவுக்கு வந்தது.












Click it and Unblock the Notifications