இனி டிராபிக் பிரச்சினைக்கு குட்பை.. வருகிறது "சென்னை எல்லை சாலை திட்டம்!" பிளான் என்ன! யாருக்கு பயன்
சென்னை: தலைநகர் சென்னையில் போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் என்பது முக்கிய பிரச்சினையாக மாறியுள்ள நிலையில், சென்னை எல்லை சாலை என்ற புதிய திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை கடந்த மாதம் அமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்தார். அதன் பின்னர், தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது.
சட்டசபையில் ஒவ்வொரு நாளும் துறை ரீதியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. நேற்று உயர்கல்வி, பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.

சட்டசபை
தினசரி துறை ரீதியாக மானியக் கோரிக்கைகளைத் தாக்கல் செய்யும் அமைச்சர்கள் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார்கள். அதன்படி இன்றைய தினம் நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக் கோரிக்கையும் நடக்கிறது. அதன்படி இன்று நடைபெற்ற சட்டசபை நிகழ்ச்சியில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியானது.

சென்னை போக்குவரத்து
தலைநகர் சென்னையில் ஒவ்வொரு நாளும் போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. பீக் ஹார் எனப்படும் நேரத்தில் வெளியே சென்றால் நிச்சயம் குறிப்பிட்ட நேரம் டிராபிக்கில் மாட்டிக் கொள்ளும் சூழலே நிலவி வருகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சியுடன் சேர்ந்து எடுத்து வருகிறது. இதற்காக மெட்ரோ திட்டம், மேம்பாலங்கள் என்று பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளன.

சென்னை எல்லை சாலை திட்டம்
இதனிடையே இப்போது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கச் சென்னை எல்லை சாலை என்ற புதிய திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாநகராட்சியின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் தமிழகத்தில் தென் பகுதியில் இருந்து வரும் வாகனங்களும் நேரடியாக எண்ணூர், காட்டுப்புள்ளி துறைமுகத்திற்குச் செல்லும் வகையில் இத்திடம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் வணிகம் மற்றும் தொழில் வளர்ச்சியை மேம்படும் என்றும் இதற்காகவே சென்னை எல்லை சாலை திட்டம் செயல்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

யாருக்கு பயன்
132.87 கிலோமீட்டர் தொலைவுக்கு ஆறு வழி இரட்டை பாதையாக இது அமைய உள்ளது. மேலும், இருபுறமும் இருவழி சர்வீஸ் சாலைகளும் அமைய உள்ளது. மொத்தம் ரூ. 15,626 கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த சாலை திட்டம் மூலம் பொதுத்துறை & தனியார் வாகனங்களைப் பயன்படுத்தும் மக்கள் பயன்படுத்துவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இது நகரில் போக்குவரத்து மற்றும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவுள்ளது.

டிராபிக் குறையும்
மேலும், இப்போது வரை இந்தத் திட்டத்திற்காக 550 கோடி செலவிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் மிக்கதாகவே காணப்படுகிறது. வணிக பயன்பாடு வாகனங்களும் நகர்ப்புறத்தில் செல்வதால் டிராபிக் பாதிப்பு மோசமாக இருக்கிறது. இந்த சென்னை எல்லை சாலை திட்டம் வந்தால், நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications