NOTA என்றால் என்ன? அதை எப்போது பயன்படுத்த வேண்டும்? தெரிஞ்சுக்கோங்க மக்களே!
சென்னை: இன்று தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், நோட்டா என்கிற பட்டனும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருக்கிறது. நோட்டா என்றால் என்ன? அதை எப்போது பயன்படுத்த வேண்டும்? என்பது குறித்து பார்ப்போம்.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் சேர்த்து களத்தில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் இருக்கின்றனர். இதில, ஆண் வேட்பாளர்கள் 3,579, பெண் வேட்பாளர்கள் 443, மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என களம் இறங்கியிருக்கின்றனர்.

இத்தனை பேர் இருந்தாலும், நோட்டா என்கிற ஆப்ஷனை தேர்தல் ஆணையம் வைத்திருக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரைக் கூட வாக்காளருக்குப் பிடிக்கவில்லை என்றால், தனது அதிருப்தியைப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள ஒரு வாய்ப்புதான் நோட்டா.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் (EVM) கடைசிப் பட்டனாக, ஒரு கருப்பு நிறச் சின்னத்துடன் (மேலே பெருக்கல் குறி இடப்பட்ட வாக்குச் சீட்டு) இது அமைக்கப்பட்டிருக்கும்.
நோட்டாவை எப்போது பயன்படுத்த வேண்டும்?
ஒரு வாக்காளர் பின்வரும் சூழ்நிலைகளில் NOTA-வைப் பயன்படுத்தலாம். அதாவது, உங்கள் தொகுதியில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரும் மக்கள் பணி செய்யத் தகுதியற்றவர் என்று நீங்கள் கருதினாலோ, போட்டியிடும் வேட்பாளர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் அல்லது ஊழல் புகார்கள் இருந்து, அவர்களைத் தேர்ந்தெடுக்க நீங்கள் விரும்பவில்லை என்றாலோ, அரசியல் கட்சிகளின் கொள்கைகள் அல்லது அவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகள் உங்களுக்கு உடன்பாடாக இல்லாதபோதோ நோட்டாவை பயன்படுத்தலாம்.
யாருக்கும் ஓட்டுப் போட விருப்பமில்லை, ஆனால் என் ஓட்டை வேறொருவர் கள்ள ஓட்டாகப் போடக்கூடாது என்று நினைப்பவர்கள் நேரில் சென்று NOTA-வைப் பதிவு செய்யலாம்.
இந்திய சட்டப்படி, NOTA அதிக வாக்குகளைப் பெற்றாலும், அதற்கு அடுத்தபடியாக எந்த வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்றுள்ளாரோ அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். அதாவது, NOTA-வால் ஒரு தேர்தலை ரத்து செய்யவோ அல்லது மறுதேர்தல் நடத்தவோ முடியாது.
பிறகு ஏன் NOTA போட வேண்டும்?
ஒரு தொகுதியில் அதிக அளவில் NOTA பதிவானால், மக்கள் உங்கள் வேட்பாளர்களை நிராகரிக்கிறார்கள் என்ற செய்தி அரசியல் கட்சிகளுக்குத் தெளிவாகச் சென்றடையும். இது எதிர்காலத்தில் நல்ல வேட்பாளர்களை நிறுத்த அவர்களைத் தூண்டும். நோட்டா என்பது அரசியல் கட்சிகளுக்கான வார்னிங் போல.
ஓட்டுப் போடாமல் வீட்டில் இருப்பதை விட, நேரில் சென்று NOTA-வைப் பதிவு செய்வது ஒரு விழிப்புணர்வுள்ள குடிமகனின் அடையாளமாகும். எனவே நோட்டா என்பதை தேர்தல் ஆணையம் ஒரு ஆப்ஷனாக வைத்திருக்கிறது.














Click it and Unblock the Notifications