தேர்தலுக்கு பிறகு முக்கிய கட்சிகளின் மனநிலை என்னவா இருக்கு தெரியுமா?
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள சூழலில், மொத்தமாக 85.15% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. தமிழக அரசியல் வரலாற்றில் 80% மேல் வாக்குப்பதிவு நடந்திருக்கிறது. இந்த நிலையில் முக்கிய கட்சிகளின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துவிட்டது. மொத்தமாக 85.15% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. கடந்த தேர்தலைவிடவும் வாக்கு சதவிகிதம் அதிகமாகிருந்தாலும், வாக்கு எண்ணிக்கையில் 20 லட்சம் வாக்குகள் வரை மட்டுமே அதிகரித்துள்ளது. கடந்த 35 நாட்களுக்கும் மேலாக தீவிர பிரச்சாரங்களில் இருந்த கட்சிகள், தற்போது ஓய்வுக்கு சென்றுள்ளன.

அரசியல் கட்சிகளின் மனநிலை
தேர்தலுக்கு பின் திமுக, அதிமுக, நாதக மற்றும் தவெக உள்ளிட்ட கட்சிகள் என்ன மனநிலையில் இருக்கின்றன என்பதை பார்க்கலாம். அதில் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், சாதனை அளவில் வாக்களித்து, ஜனநாயகத்தைப் பாதுகாத்திடும் கடமையைத் தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் சரிவர ஆற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
திமுக மனநிலை
ஒரு தலைமுறைக்கான தேர்தல் இது என்ற நினைப்பே இந்த உந்துதலுக்குக் காரணமாக இருக்க முடியும். தமிழ்நாடு வாக்களித்துவிட்டது, மே 4 தமிழ்நாடு வெல்லும்! என்று பதிவிட்டுள்ளார். இதுதான் திமுகவினரின் மனநிலையாகவும் இருக்கிறது. பெருவாரியான வெற்றியை பெற்று மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
அதிமுக மனநிலை
வாக்குப்பதிவிற்கு பின் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கூட இதுவரை எந்த கருத்தையோ, அறிக்கையையோ, பதிவையோ வெளியிடவில்லை. தமிழ்நாட்டில் வரலாற்று வாக்குப்பதிவு நடந்திருக்கும் போது, அதிமுக சைலண்ட் மோடில் இருக்கிறது. சோசியல் மீடியாவிலும் அதிமுகவினர் மனநிலை தலைமையை போல் அமைதியாகவே உள்ளது. இதனால் தவெக எந்தக் கட்சியின் வாக்குகளை பிரிக்கும் என்பதை கணிக்க முடியாமல், அதிமுக அமைதி காப்பதாக பார்க்கப்படுகிறது.
பாஜக மனநிலை
பாஜகவில் நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டது மற்றும் கள ஆய்வு மேற்கொண்டதை மட்டுமே கடைசி பதிவாக எழுதி இருக்கின்றனர். கடந்த முறையை காட்டிலும் கூடுதல் தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்று பாஜகவினர் பலரும் தொடர்ச்சியாக பேசி வருகின்றனர். ஆனால் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் கப்சிப் மோடில் உள்ளனர்.
தவெக மனநிலை
நேற்று வாக்குப்பதிவு தொடங்கிய போதே தவெகவிடம் ஒருவித பதற்றமான மனநிலை காணப்பட்டது. தவெக தலைவர் விஜய் ஒரு பக்கம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். போக்குவரத்து பிரச்சனைகள், கள்ள ஓட்டு போட்டதாக புகார்கள், திமுகவினருடன் மோதல் என்று தவெக பரபரப்பாக இயங்கி வருகிறது. சோசியல் மீடியாவில் தவெகவின் வாய்ஸ் அதிகமாக இருந்தாலும், களத்தில் பதற்றமாக இருப்பதாகவே தெரிகிறது.
நாதக எதிர்பார்ப்பு
விஜய்யின் அரசியல் வருகையால் முதலில் பதற்றம் அடைந்ததே நாதக தான். இதன் காரணமாகவே விஜய்யை சீமான் தொடர்ந்து எதிர்த்தார். இதன் காரணமாகவே நாதக இம்முறை வாக்கு சதவிகிதத்தை கடந்து, வெற்றி பெற வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகின்றனர். அதிலும் சீமான் சட்டசபை செல்ல வேண்டும் என்பதற்காக போராடினர். இதனால் வாக்கு சதவிகிதத்தை கடந்து சீமான் காரைக்குடியில் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பே நாதகவின் மனநிலையாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications