மோடி வியூகத்திற்கு மரண அடி.. பாஜக தோல்விக்கு ‘மெயின்’ காரணம் இதான்.. விளக்கும் மூத்த பத்திரிகையாளர்!
சென்னை : கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக தோற்றதற்கு ஊழலோ, கமிஷனோ காரணம் அல்ல என்கிறார் மூத்த பத்திரிகையாளர் மணி. அரசே முன்னின்று வகுப்புவாத அரசியலை நடத்தியது. இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இதற்கெல்லாம் தக்க பதிலடியை கர்நாடக மக்கள் கொடுத்துள்ளனர் என அவர் கூறியுள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. தென் மாநிலங்களில் பாஜக நேரடியாக ஆட்சி செய்த ஒரே மாநிலமான கர்நாடகாவிலும் ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது பாஜக. இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்பட்டு வருகிறது. பாஜகவின் தோல்விக்கான காரணங்கள் அலசப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மணி பேசுகையில், "வடக்கிற்கு தெற்கு தான் வழிகாட்டும். 2024ல் வட இந்தியாவிலும் பாஜக விரட்டப்படும். இதுதான் இந்த தேர்தல் உணர்த்தும் பாடம். இதை வெறும் தேர்தல் வெற்றியாகப் பார்க்கக்கூடாது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தலில் ஆட்சி மாற்றங்கள் நடப்பது இயல்பு. ஆனால், இது அதையும் தாண்டிய ஒரு முடிவு. அரசே முன்னின்று வகுப்புவாத அரசியல், மதவாத அரசியலை நடத்தியது. சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இதற்கெல்லாம் தக்க பதிலடியை கர்நாடக மக்கள் கொடுத்துள்ளனர்.
ஒரு மாநில சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் தெருத்தெருவாக இறங்கி பிரச்சாரம் செய்ததை நான் பார்த்ததே இல்லை. ஆனால், அந்த லெவலுக்கு பிரதமரே இறங்கி பிரச்சாரம் செய்தார். இது கர்நாடகா பாஜகவின் தோல்வி இல்லை, நரேந்திர மோடியின் தோல்வி. ஒரு மாநில தேர்தலில் தோல்வியடைவதால் மத்தியில் பாஜகவுக்கு எந்த சிக்கலும் வரப்போவதில்லை. ஆனால், இவ்வளவு தூரம் பிரதமரே ரோடு ரோடாக பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவை என்ன?

எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோரின் பெயர்களைக் கூட சொல்லாமல் தான் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். எடியூரப்பாவால் தான் பாஜக அங்கு ஆட்சிக்கு வந்தது. ஆனால், அவரை இழிவு செய்தார்கள். எந்த டேட்டா கேட்டாலும் எங்களிடம் இல்லை எனச் சொல்கிறது மோடி அரசு. ஆனால், காங்கிரஸ் தன்னை 91 தடவை திட்டியிருக்கிறது என்பதை மட்டும் பிரதமர் மோடி சொல்கிறார். எனவே கர்நாடகா தோல்வி என்பது மோடிக்கு கிடைத்த தோல்வி.
40 சதவீத கமிஷனுக்காகவோ, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் காரணமாக மட்டுமல்ல, வகுப்புவாத அஜெண்டா காரணமாகவே பாஜக அரசு அகற்றப்பட்டுள்ளது. எடியூரப்பா மதவாத அரசியலை முன்னெடுக்க மறுத்ததன் காரணமாகவே அவரை மாற்றிவிட்டு பசவராஜ் பொம்மையை முதல்வராக்கியது பாஜக. பசவராஜ் பொம்மை ஓரளவுக்கு மதவாத அரசியலுக்கு பச்சைக்கொடி காட்டினார். ஆனால், களத்தில் அது பலன் தரவில்லை." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications