இயற்கையே "வலிமையானது".. பொய்த்த கணிப்புகள்.. திணறிய வெதர் மாடல்ஸ்.. ஸ்தம்பித்த சென்னை.. என்ன காரணம்?
சென்னை: கடந்த 6 மணி நேரமாக பெய்து வரும் மழை காரணமாக மொத்த சென்னையும் ஸ்தம்பித்து போய் உள்ளது. சென்னை முழுக்க பல்வேறு பகுதிகளில் 200 மிமீக்கும் அதிகமாக மழை பெய்து அதிர்ச்சி அளித்து உள்ளது.
Recommended Video
கிழக்கு திசை காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் இன்றில் இருந்து ஜனவரி 1ம் தேதி இரவு வரை மழை பெய்யும் என்று முன்பே கணிக்கப்பட்டு இருந்தது. இந்த மழை விட்டு விட்டு பெய்யும், லேசானது முதல் கனமானது வரை மழை பெய்யும் என்றே கணிக்கப்பட்டது.
ஆனால் கணிப்புகளை புரட்டி போட்டு சென்னையில் எதிர்பார்த்ததை விட மிக மிக மோசமான பேய் மழை பெய்துள்ளது. அதிலும்.. இந்த செய்தியை எழுதும் வியாழன் இரவு 8.30 மணி வரை சென்னையில் மழை விடுவதற்கான சின்ன அறிகுறி கூட இல்லை. இன்னும் சென்னைக்கு மேல் மழை மேகங்கள் நின்று கொண்டு இருக்கின்றன.

ரெக்கார்ட்
சென்னையில் நகரத்தின் மையப்பகுதி தொடங்கி இசிஆர் வரை பல இடங்களில் இதுவரை 200 மிமீ அளவு மழை பெய்து ரெக்கார்ட் படைத்துள்ளது. மைலாப்பூர், எம்ஆர்சி நகர், மெரினா சாலை, நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் எல்லாம் 200 மிமீ மழையை தாண்டிவிட்டது. அதேபோல் ஆழ்வார்பேட்டை, மீனம்பாக்கம், வளசரவாக்கம், ஈசிஆர் சாலை முழுக்க மழை அளவு 100 மிமீ அளவை தாண்டிவிட்டது... ஆனால் இன்னும் மழை நிற்கவில்லை.

வெள்ளம்
இதனால் சென்னை சாலைகளில் மீண்டும் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் சாலைகளில் முட்டி அளவு தண்ணீர் தேங்கி மூழ்கி உள்ளன. தற்போது நிலவரப்படி போரூர், மதுரவாயல், பூந்தமல்லி, மதுரவாயல், குன்றத்தூர், வளசரவாக்கம், ஆவடி பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

டிராபிக் ஜாம்
சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சோழவரம், தாம்பரம், குரோம்பேட்டை, வேளச்சேரி, எழும்பூர், அண்ணா சாலை, வடபழனி, சைதாப்பேட்டை, நந்தம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், கோயம்பேடு, வடபழனி பகுதிகளில் லேசான மழையும் மழை, கோடம்பாக்கம், தி.நகர், நசரத்பேட்டை,மாங்காடு, மீனம்பாக்கம், கிண்டி பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. இங்கெல்லாம் மிக கடுமையான டிராஃபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது.

ரெட் அலர்ட்
தொடர் மழை காரணமாக 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யும் என்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்து 2 மணி நேரங்களுக்கு இடியுடன் கூடிய அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது..

பொய்யானது
இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம், சென்னையில் இப்படி ஒரு பேய் மழை பெய்ய போகிறது என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. தனியார், அரசு வானிலை மைய அமைப்புகள் யாரும் இதை கண்டிக்கவில்லை. 5 மிமீ முதல் 20 மிமீ மழை வரை மட்டுமே பெய்யலாம் என்று பலரும் சராசரியாக கணித்த நிலையில் இதுவரை மட்டும் 190மிமீக்கும் அதிகமாக மழை பெய்து உள்ளது.

வெதர்மேன்
இதை பற்றி தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூட.. என்னை மன்னித்துவிடுங்கள்.. 50 விதமான வெதர் மெம்பர் எதிலும் இவ்வளவு மழை பெய்வதற்கான அறிகுறியே தெரியவில்லை.கடந்த 15 வருடத்தில் இப்படி நடந்ததே இல்லை. 5 மிமீ மழை எதிர்ப்பார்த்து 50 மிமீ மழை பெய்து இருக்கிறது. ஆனால் எப்போதும் எங்கேயும் 200 மிமீ மழை பெய்தது இல்லை. சென்னையில் நடந்தது மிக மிக வினோதமான விஷயம் என்று குறிப்பிட்டுள்ளார்.

வானிலை மையம்
சென்னை வானிலை மையமும் மழையை கணிக்கவில்லை. ஸ்ரீஹரிகோட்டா, கடலூர் என்று பல ரேடார்கள் இருந்தும் கூட எந்த ரேடாரும் இந்த மழையை சரியாக பிக் செய்யவில்லை. இப்படி ஒரு மழை வெளுக்க போகிறது என்பதை எந்த வானிலை டேட்டா மாடல்களும் கணிக்க முடியாமல் தோல்வி அடைந்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று மட்டுமே சென்னை வானிலை மையம் கணித்து இருந்தது.

சென்னை ரெய்ன்ஸ்
இன்னொரு பிரபல வானிலை அமைப்பான சென்னை ரெய்ன்ஸ் அமைப்பும் இதுவரை பல முறை துல்லியமான கணிப்புகளை வெளியிட்டும் இந்த மழையை கணிக்க தவறி உள்ளது. இந்த தீவிர மழையை கணிக்க முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்கிறோம். எந்த வெதர் மாடலும் மழை இப்படி பெய்யும் என்று பிக் செய்யவே இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.

என்ன காரணம்?
இந்த தீவிர மழைக்கு பின் மேக வெடிப்பு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேக வெடிப்பு என்பது கனமான மழை நீரை கொண்ட மேகங்கள் ஒரே நொடியில் மொத்தமாக தண்ணீராக மாறும் நிலை ஆகும். அதாவது கனமான மழை நீர் கொண்ட மேகம் நமக்கு மேலே இருக்கிறது என்று வைத்துகொள்வோம். இதை சுற்றி குளிர்காற்று இருக்கும் போது, பூமியில் இருந்து மேலே செல்லும் வெப்ப காற்று இந்த குளிர் காற்றோடு உரசும். இந்த வெப்ப காற்றும், குளிர் காற்றும் இணைவதால் திடீரென condensation ஆகும். அதாவது வாயுப்பொருள் திடீர் திரவ பொருளாக மாறுவது ஆகும். இதனால் மழை கொண்ட மேகம் அப்படியே திரவமாக மாறி ஒரு நொடியில் மழையை கொட்டி தீர்க்கும்.

இனி இப்படித்தான்
ஆனால் இதுதான் உறுதியான காரணம் என்று சொல்ல முடியாது. இதற்கு காலநிலை மாற்றமும் ஒரு காரணம் ஆகும். உலகம் முழுக்க ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது. மீண்டும் சரி செய்யவே முடியாத தவறுகளை நாம் செய்து வருகிறோம். இது மனித குலத்திற்கான "கோட் ரெட்" எச்சரிக்கை மணி. உலகின் வெப்பநிலை அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயர போகிறது.

எச்சரிக்கை
இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். என்று கடந்த சில நாட்களுக்கு முன்தான் ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கை குறிப்பிட்டது. ஆம், காலநிலை மாற்றம் மிக மோசமான நிலையை அடைந்துவிட்டதாகவும், நாம் காலநிலை மாற்றத்தின் கோட் ரெட் காலத்தில் இருப்பதாகவும் இந்த ஆய்வு அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையின் இந்த திடீர் மழையும் இதன் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பு உள்ளது.

இயற்கையே வலிமை
மொத்தத்தில் இந்த மழை மூலம் இயற்கையே வலிமையானது.. இயற்கையே கணிக்க முடியாதது என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. பல கோடிகளில் செயற்கைகோள்கள், வானிலை கருவிகள், ரேடார்கள் நிறுவப்பட்டாலும் இயற்கை நினைத்துவிட்டால் கணிப்புகளை மிஞ்சி எதுவும் நடக்கும் என்பது மட்டும் உறுதியாகிறது.












Click it and Unblock the Notifications