லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட அரசு ஊழியர் எளிதில் தப்பிக்க என்ன காரணம்? காப்பாற்றும் சட்டப்பிரிவு
சென்னை: அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக கைதாகும் சம்பவங்கள் அதிகமாக உள்ளன. ஆனால் இவர்களில் பலர் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளது. இதற்கு காரணம் ஒரு சட்டப்பிரிவு தான். நேர்மையான அதிகாரிகள் அரசியல் பழிவாங்கலுக்கோ அல்லது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கோ ஆளாவதைத் தடுக்க உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது சட்டப்பிரிவு என்பது என்னவென்றால், லஞ்சம் வாங்கியதாக கைதாகும் அரசு ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்ய அரசின் அனுமதி தேவையாகும்.
லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஒரு அரசு ஊழியரை அதிகாரியை லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாகப் பிடித்து கைது செய்யும்போது, எந்தவித அரசு அனுமதியும் தேவையில்லை. அதனால் பெரும்பாலான லஞ்ச ஒழிப்பு வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளை பொறி வைத்து கையும் களவுமாக கைது செய்துவிடுகிறார்கள். அடுத்த 24 மணி நேரத்திற்குள் பணியிடை நீக்கமும் செய்யப்படுகிறார்.

அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு
ஆனால் லஞ்சம் வாங்கியதாக புகார் அளிக்கப்பட்ட அதிகாரி மீது புலன் விசாரணை தொடங்க வேண்டுமென்றால், குறிப்பாக அந்தக் குற்றம் அவரது அதிகாரப்பூர்வ முடிவுகள் அல்லது பரிந்துரைகள் தொடர்பானதாக இருக்கும் என்றால், விசாரணை தொடங்கும் முன் அரசின் முன் அனுமதி பெறப்பட வேண்டும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல.. மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் யாராக இருந்தாலும், எந்த மாநிலமாக இருந்தாலும் இதுதான் நடைமுறை.
பாதுகாப்பு அம்சம்
ஏனெனில் நேர்மையான அதிகாரிகள் அரசியல் பழிவாங்கலுக்கோ அல்லது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கோ ஆளாவதைத் தடுக்க வழங்கப்பட்ட பாதுகாப்பு அம்சமாக இருக்கிறது. அதேநேரம் அரசு ஊழியர்களை கைது செய்ய அனுமதி தேவையில்லை.. ஆனால் அதன்பிறகு வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அரசின் அனுமதி தேவையாகும். அதாவது லஞ்ச வழக்கில் சிக்கிய பின்னர் அவரது உயர் அதிகாரியின் அனுமதி வேண்டும்.
வழக்குத் தொடர அனுமதி தேவை
பொதுவாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், ஒரு அரசு ஊழியரை கைது செய்து, விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகை (Charge Sheet) தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டுமெனில், பிரிவு 19-ன் கீழ் சம்பந்தப்பட்ட அரசிடமிருந்து வழக்குத் தொடருவதற்கான அனுமதி பெறுவது கட்டாயம் ஆகும். இந்த அனுமதி இல்லாவிட்டால், நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது.
இந்த அனுமதியை வழங்க வேண்டிய அதிகாரம், குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியைப் பணியிலிருந்து நீக்குவதற்கு தகுதிவாய்ந்த அதிகாரியிடம் உள்ளது.
வழக்கு தொடர அனுமதி யார் தருவார்கள்
அதாவது வருவாய் துறை என்றால் சப் கலெக்டர் மற்றும் கலெக்டரிடம் மற்றும் வருவாய் துறை செயலாளரிடம் இருக்கும். காவல்துறை என்றால் டிஜிபி, ஐஜி, டிஐஜி, எஸ்பி, மாநகர கமிஷனர் ஆகியோரிடம் இருக்கும். பெரிய அதிகாரிகள் என்றால் மாநில முதல்வரின் அனுமதி வேண்டும். எந்த துறையாக இருந்தாலும் முதல்வர் அனுமதித்த பின்னர், அந்த துறையின் உயர் அதிகாரிகள் மீது வழக்கு தொடர முடியும். பொதுவாக சொல்வது என்றால் லஞ்சம் வாங்கும் போது உடனடி கைதுக்கு அனுமதி தேவையில்லை, ஆனால் அவர் மீது வழக்குத் தொடர அரசு அனுமதி தேவையாகும்.
கால தாமதம்
ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி, உயர் அதிகாரி 90 நாட்களுக்குள் வழக்குத் தொடர அனுமதி வழங்க வேண்டும். ஆனால், நடைமுறையில் இந்த அனுமதி வழங்கப்படாமல் பல கோப்புகள், பல மாதங்கள் முதல் பல ஆண்டுகள் வரை நிலுவையில் வைக்கப்படுவது தொடர்கிறது. அனுமதி தருவதற்கு தாமதம் ஏற்படுவதால், வழக்குத் தொடங்கும்போதே முக்கிய சாட்சிகள் கலைந்து போவது நடக்கிறது. சில இடங்களில் மிரட்டப்படுவதும், சமரசத்திற்கு போவது நடக்கிறது.. இதனால், லஞ்ச ஒழிப்புத்துறை சேகரித்த ஆதாரங்கள் வலுவிழந்து போவதும் நடக்கிறது.
மேல் அதிகாரியின் தலையீடு
குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி, மேல் அதிகாரிகளை சில நேரங்களில் 'கவனிப்பதன்' மூலம், வேண்டுமென்றே அனுமதி மறுக்கப்படவோ அல்லது தாமதப்படுத்தப்படவோ வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகப் பரவலாகக் குற்றச்சாட்டும். இதுவும் இந்தியாவின் ஊழல் தடுப்புச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைப்பதாக உள்ளது. இதனால் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது, அனுமதியே பெறப்படவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, குற்றப்பத்திரிகை தள்ளுபடி செய்யப்படுவதுண்டு.
ஜாமீன் மற்றும் பணி நீக்கம் குறித்த சிக்கல்கள் என்ன
அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றாலும், பல லஞ்ச வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எளிதில் ஜாமீன் பெற்றுவிடுகிறார்கள். இதனால், அவர்களுக்கு தண்டனை பற்றிய பயம் குறைந்துவிடுகிறது.
பொதுவாக, கைது செய்யப்பட்ட அரசு ஊழியர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். ஆனால், சில காலத்திற்குப் பிறகு, வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டால் அல்லது வேறு சில நிர்வாக காரணங்களுக்காக, அவர் மீண்டும் பணிக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவது தொடர்கிறது. இதனால், லஞ்சம் வாங்கியதற்கான கறையுடன் அவர் மீண்டும் அதே பதவியில் அமர்ந்து அதே தவறைச் செய்ய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
பயம் இல்லை
இது ஒருபுறம் எனில், லஞ்ச வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கும் விகிதம் குறைவாகவே இந்தியாவில் இருக்கிறது. ஒரு சிலரே தண்டனை பெறுவதால், மற்றவர்களுக்கு அச்சம் ஏற்படுவதில்லை . லஞ்சம் வாங்குபவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவது அல்லது அவமானப்படுத்தப்படுவது போன்ற ஒரு நிலை இதுவரை இந்தியாவில் இல்லை. இதுவும் ஊழல் தொடர்வதற்கு காரணமாக இருக்கிறது.
ஊழலை ஆதரிக்கும் கட்டமைப்பு
விரைவாக வேலை முடிய வேண்டுமென்றால் லஞ்சம் கொடுத்தே ஆக வேண்டும் என்ற ஒரு கட்டமைப்பு பல துறைகளில் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. லஞ்சம் கொடுப்பவர்களும், வாங்குபவர்களும் இதில் ஒரு அங்கமாகவே மாறிவிடுகிறார்கள். யாரோ ஒரு சிலர் தான் லஞ்சம் கேட்பாக புகாரே அளிக்கிறார்கள். மற்றவர்கள் கண்டு கொள்வது இல்லை..இதுவும் ஊழலுக்கு காரணமாக உள்ளது. அதேபோல் சில நேரங்களில் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் சில ஊழல்கள் நடைபெறுவதால், அவர்களும் பெரிய அளவில் கண்டுகொள்வது இல்லை என்ற குறைகள் உள்ளது.
லஞ்சம் வாங்குபவர்கள் திருந்துவதற்கு, வழக்குத் தொடர அனுமதி வழங்குவதில் உள்ள காலதாமதத்தை நீக்கி, காலக்கெடுவைக் கட்டாயமாக்கினால் மட்டுமே ஒரு பெரிய மாற்றம் ஏற்படும் என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். மேலும், தவறு செய்தவர்கள் உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டு, நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை பணியில் சேர அனுமதிக்கக் கூடாது என்ற வலுவான நிர்வாக முடிவுகள் தேவை என்ற கருத்தையும் சட்ட நிபுணர்கள் முன் வைக்கிறார்கள். அப்படி செய்யாத வரை லஞ்சமும், ஊழலும் குறையாது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications