சண்டை நிறுத்தம்! இந்திய ராணுவ ஜெனரலை பாகிஸ்தான் டிஜிஎம்ஓ அழைத்தது ஏன்?
சென்னை: இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட பாகிஸ்தான் ராணுவ ஜெனரல், இந்திய ராணுவ ஜெனரலை அழைத்தது ஏன் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து அதற்கு காரணமான தீவிரவாத முகாம்களை ஒட்டுமொத்தமாக அழித்தது. இதற்கு பாகிஸ்தான் கங்கணம் கட்டி கொண்டு பழித்தீர்க்க இந்தியா மீது டிரோன் தாக்குதலை செய்தது.

இதற்கு இந்தியா திறம்பட பதிலடி கொடுத்தது. இதனால் பாகிஸ்தானின் டிரோன்கள் எல்லாம் குறுவிகளை போல் நமது வான் பாதுகாப்பு கவசங்கள் அடித்து வீசின. எனினும் அடங்காத பாகிஸ்தான், மே 8, 9-ஆம் தேதி இரவு நேரங்களிலும் அதிகாலைகளிலும் எல்லையோர நகரங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது.
ஆனால் இந்தியாவின் பதிலடி தாக்குதலால் பாகிஸ்தானால் நின்று அடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்படியும் அணு ஆயுத போருக்கு செல்லலாமா என முடிவு செய்தது. பிறகு அப்படியே பல்டி அடித்து அது போன்ற முடிவுகளை எடுக்கவில்லை என பாகிஸ்தான் தெரிவித்தது.
அணு ஆயுத போர் வந்தால் பாகிஸ்தானுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதை எண்ணி உடனே அப்படி சொல்லவில்லை என சொல்லிவிட்டது. இந்த நிலையில் இன்று காலை கூட இந்திய எல்லையில் உள்ள குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. ஆனால் அதை சாதுர்யமாக இந்தியா எதிர்கொண்டு புஸ்வானமாக்கிவிட்டது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே சமாதானமாக செல்ல வேண்டும் என அமெரிக்கா, சீனா, சவுதி உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்திருந்தன. அதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு நாடுகள் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானின் ராணுவ ஜெனரல் (டிஜிஎம்ஓ) இன்று பிற்பகல் 3.35 மணிக்கு இந்திய ராணுவ ஜெனரலை அழைத்தார்.
அப்போது இந்திய நேரப்படி மாலை 5 மணி முதல் தரைவழி, வான்வழி, கடல் வழி தாக்குதலை நிறுத்த ஒப்புக் கொள்ளப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையேயான துப்பாக்கிச் சூடு, ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வது என ஒப்புக் கொள்ளப்பட்டது.
எனினும் இரு நாடுகளின் ராணுவ ஜெனரல்களும் வரும் 12 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என மிஸ்ரி தெரிவித்தார். இந்த விவகாரத்தில் ராணுவ ஜெனரலின் பணி என்ன என்பதை பார்க்கலாம். எதற்காக இரு நாடுகளின் ராணுவ ஜெனரல்கள் பேசினார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
ராணுவ செயல்பாடுகளை ஒருங்கிணைப்பது மேற்பார்வையிடுவது போன்ற கடமைகள் மூத்த அதிகாரியான ராணுவ ஜெனரலுக்கு உள்ளது. அவர் ராணுவ படை தளபதி அல்லது அவருக்கு நிகரான உயரதிகாரிக்கு ரிப்போர்ட் செய்வார். ராணுவ செயல்பாடுகளுக்கான வியூகங்களையும் திட்டங்களையும் ராணுவ ஜெனரல்தான் வகுத்து தருவார்.
அதாவது போர், பதிலடி தாக்குதல், அமைதியை நிலைநாட்டும் திட்டங்களின் போதும் இவர்தான் வியூகங்களை வகுப்பார். போர் புரியவும் படைகளை தயார் செய்வதும் இவர்தான். முப்படைகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம் செய்யும், ஒத்துழைப்பை ஏற்படுத்தும் அதிகாரியாகவும் இருந்து வருகிறார்.
அதே வேளையில் உளவுத் துறை அமைப்புகளுடனும் ஒருங்கிணைந்து செயல்படுகிறார். இந்தியாவை பொருத்தவரை ராணுவ ஜெனரல் என்பவர் பதற்றமான எல்லை விவகாரங்களை நிர்வகிக்கிறார். அதில் போர் நிறுத்தம், எல்லை தாண்டிய பதற்றங்களும் அடங்கும்.
போர் நிறுத்தம் என வரும் போது ராணுவ ஜெனரல்களுக்கு முதலில் தெரிவிப்பது ஏன் என்பதை பார்க்கலாம். பதற்றம், போர் உள்ளிட்ட சமயங்களில் முதலில் ராணுவ ஜெனரல்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ராணுவ செயல்பாடுகள், வியூக விவகாரங்களுக்காக அவர்கள்தான் தனிப்பட்ட முறையில் நியமிக்கப்பட்ட மூத்த அதிகாரிகள் ஆவர்.
பதற்றத்தை தணிப்பது, உடனடி பிரச்சினைகளை தீர்ப்பது, நோக்கங்களை தெளிவுப்படுத்துவது போன்றவற்றை முன்னெடுக்கும் பேச்சுக்களை நடத்துவதே இவர்களது பணியாகும். ராணுவ நடவடிக்கைகளின் தற்போதைய நிலை என்ன என்பது இவர்களுக்குத்தான் தெரியும்.
போர் நிறுத்தம் தேவைப்பட்டால் களத்தில் உள்ள கமாண்டர்களுக்கு கட்டளையிடும் அதிகாரம் இவர்களுக்கு உண்டு. இதனால்தான் இரு நாடுகளின் ராணுவ ஜெனரல்களும் முதலில் சந்தித்து பேசுகிறார்கள்.












Click it and Unblock the Notifications