இதெல்லாம்... தேர்தலில் ஆதரவாம்- எடப்பாடி பழனிசாமியை ஏமாற்றிய டுபாக்கூர் திரிணாமுல் காங்கிரஸ் கோஷ்டி!
சென்னை: லோக்சபா தேர்தலில் அண்ணா திமுகவுக்கு ஆதரவு தருவதாக என அக்கட்சியின் பொதுச்செயலாளரான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசியது போலி திரிணாமுல் காங்கிரஸ் கோஷ்டி என வெளியான தகவல் அதிமுகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.
லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு எதிராக உருவாக்கப்பட்டது "இந்தியா" கூட்டணி. இந்த கூட்டணியில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் தொகுதி உடன்பாடு ஏற்படாத நிலையிலும் கூட "இந்தியா" கூட்டணியில்தான் நீடிப்போம் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிலும் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தொடர்ந்து நல்ல நட்புறவில் இருந்து வருகிறார். ஆனால் திடீரென திரிணாமுல் காங்கிரஸின் தமிழ்நாடு பிரிவு என்ற பெயரில், லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு என அறிவித்ததுடன் திரிணாமுல் காங்கிரஸின் தமிழ்நாடு நிர்வாகிகள் என கூறிக் கொண்ட சிலர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தும் பேசியதாகவும் படத்துடன் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதனால் இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், திமுகவுடனான உறவை முறித்துக் கொண்டு தமிழ்நாட்டில் அதிமுகவை ஆதரிக்கிறது என்பது பேசுபொருளாகவும் மாறியது. இந்த செய்திகள் பரவிய அதே நேரத்தில் இன்னொரு திடுக்கிடும் தகவலும் சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவியது.
அதாவது தற்போது எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததாக சொல்கிற சோ கால்ட் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் 3 ஆண்டுகளுக்கு முன்னரே போலிகள் -டுபாக்கூர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவர்களாம். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி தங்களை தமிழ்நாடு நிர்வாகிகள் நியமித்திருப்பதாக போலி கடிதம் தயாரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள். தற்போது திரிணாமுல் காங்கிரஸின் தமிழ்நாடு தலைவராக டாக்டர் சபீதா இருந்து வருகிறார். AITC - Tamil Nadu & Pondicherry என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2021-ம் ஆண்டே தற்போது எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நிர்வாகிகள் போலியானவர்கள்; டுபாக்கூர்கள் என வெளியிடப்பட்ட அறிவிப்பும் இடம் பெற்றிருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ் பக்கத்தில்) இது தொடர்பாக இடம் பெற்ற விளக்கமும் அதில் இணைக்கப்பட்டுள்ளது.

3 ஆண்டுகளுக்கு முன்னரே திரிணாமுல் காங்கிரஸ் தலைமையால் டுபாக்கூர்கள்; போலியானவர்கள் என அறிவிக்கப்பட்ட நபர்கள் இப்போதும் தங்களை அக்கட்சியின் தமிழ்நாடு நிர்வாகிகள் எனக் கூறிக் கொண்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததும் லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு என செய்தி வெளியிட அனுமதித்ததும் எப்படி? என்பதுதான் இப்போது விவாதப் பொருளாகி இருக்கிறது.













Click it and Unblock the Notifications