"எனது 8 வயதில் அப்பா பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்! அம்மாவால் நம்ப முடியவில்லை!" குஷ்பு பரபர
நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகச் சமீபத்தில் பொறுப்பேற்றார்.
சென்னை: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகச் சமீபத்தில் குஷ்பு பொறுப்பேற்றார். இதற்கிடையே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குஷ்பு, தனது சிறு வயது வாழ்க்கை குறித்து தனக்கு நேர்ந்த பிரச்சினைகள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.
குஷ்பு பல ஆண்டுகளாகவே தீவிர அரசியலில் இருந்து வருகிறார். கடந்த 2010இல் திமுகவில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய குஷ்பு, அதன் பிறகு 2014இல் காங்கிரஸில் இணைந்தார்.
சுமார் 6 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றிய அவர், அதன் பிறகு 2020இல் பாஜகவில் இணைந்தார். இவர் கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியிலும் போட்டியிட்டார்.

குஷ்பு
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த குஷ்பு சமீபத்தில் தான் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மம்தா குமாரி, டெலினா கோங்தூப் ஆகியோருடன் குஷ்புவும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டார். சமீபத்தில் தான் இவர் பதவியும் ஏற்றுக் கொண்டார். இது தொடர்பான படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். இதற்கிடையே 8 வயதிலேயே தந்தையால் பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.

8 வயதில் துஷ்பிரயோகம்
வி தி வுமன் நிகழ்ச்சியில் மோஜோ ஸ்டோரிக்காக குஷ்பு அளித்த பேட்டியில், "ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்பட்டால், அது குழந்தையின் வாழ்நாள் முழுவதும் வடுவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.. பெண்ணா பையனா என்பதில் பிரச்சினை இல்லை.. என் அம்மாவுக்கு மிகவும் மோசமான ஒரு திருமண வாழ்க்கையே இருந்தது. மனைவியை அடிப்பதும், குழந்தைகளை அடிப்பதும், தன் ஒரே மகளை பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்வதும் தன் பிறப்புரிமை என நினைத்துக் கொண்டிருந்தவர் தான் அவர். எனக்கு 8 வயதாகும் போது துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கினார்.

பயம்
அவருக்கு எதிராகத் துணிச்சலாக நான் பேசிய போது.. எனக்கு வயது 15.. நான் எனக்காக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம் வந்தது. எங்கு நான் ஏதாவது சொன்னால் எனது குடும்ப உறுப்பினர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவார்கள் என்ற அச்சம் எனக்கு இருந்தது. இதன் காரணமாகவே பல ஆண்டுகளாக நான் அமைதியாக இருந்தேன். நான் இதைச் சொன்னால் எனது அம்மாவே என்னை நம்ப மாட்டாரோ என்ற அச்சம் எனக்கு இருந்தது.

விட்டுச் சென்றார்
ஏனென்றால் அவரை பொறுத்தவரை என்ன நடந்தாலும் கணவர் தான் தெய்வம் என்ற மனப்பான்மையிலேயே இருந்தார். எனக்கு 15 வயதாகும் போது இனியும் தாங்க முடியாது என்று முடிவு செய்தேன். அவருக்கு எதிராகப் பேச ஆரம்பித்தேன். எனக்கு அப்போது 16 வயது கூட ஆகியிருக்காது.. அவர் எங்களை விட்டுச் சென்றார்.. அப்போது எங்களிடம் எதுவுமே இல்லை.. அப்போது அடுத்த வேலை உணவுக்கே நாங்கள் என்ன செய்வதென்று தெரியாத ஒரு நிலையிலேயே இருந்தேன்.

கஷ்டப்பட்டேன்
குழந்தைப் பருவம் எனக்கு மிக மிகக் கடினமான ஒன்றாகவே இருந்தது. குழந்தையாக இருந்த போது நான் பல பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறேன். ஒரு கட்டத்தில் எனக்குத் துணிச்சல் வந்தது.. என்ன நடந்தாலும் துணிச்சலாகப் போராட வேண்டும் என்ற மனப்பான்மை வந்தது" என்றார். குஷ்பு பாலிவுட் படமான தி பர்னிங் ட்ரெயின் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினாலும் கூட, தென்னிந்தியத் திரையுலகில் குறிப்பாகத் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அந்த பொறுப்பில் இருப்பார் என்று சொல்லப்படுகிறது. பதவியேற்ற போது அவர் தனது ட்விட்டரில், " எனது தலைவர் பிரதமர் நரேந்திர மோடியின் ஆசியோடு இந்த பெரிய பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார். மேலும், பெண்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் துணிச்சலாகச் சொல்ல வேண்டும் என்றும் அப்போது தான் நீதி கிடைக்கும் என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications