"இரண்டு நாட்களில் நல்ல செய்தி.." லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்த கேள்வி.. சூசகமாக கமல் சொன்ன பதில்
சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் மநீம போட்டியிடும் என்ற தகவல் வெளியான நிலையில், இது குறித்து கமல் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
நமது நாட்டில் இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் ஆரம்பித்துவிட்டன.. கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை ஆரம்பித்துவிட்டது.

தேசியளவில் பாஜக தலைமையில் என்டிஏ கூட்டணி களமிறங்கும் நிலையில், அதை எதிர்த்து இந்தியா கூட்டணி போட்டியிடுகிறது. அதேநேரம் தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக இடையே தான் நேரடி போட்டி இருக்கும்.
கூட்டணி கணக்கு: இதில் அதிமுக தரப்பு தேர்தல் தேதி எல்லாம் அறிவிக்கட்டும். அதன் பிறகு கூட்டணி குறித்து அறிவிக்கிறோம் எனச் சொல்லி வருகிறார்கள். அதேநேரம் மறுபுறம் திமுக கூட்டணி ஏற்கனவே தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்துவிட்டார்கள்,. கடந்த காலங்களில் தேர்தல்களில் தனித்துக் களமிறங்கிய கமல் இந்த முறை திமுக கூட்டணியில் இணையலாம் எனக் கூறப்பட்டது. இருப்பினும், திமுக மக்கள் நீதி மய்யம் இடையே இதுவரை பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை.
இதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே நல்ல நட்பு இருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என கூறப்பட்டது. கடந்த சில நாட்களாகவே இது குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கிடையே இது குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் விளக்கமளித்துள்ளார்.
கமல்: அமெரிக்காவில் இருந்து சென்னைக்குத் திரும்பிய கமல் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தக் லைஃப் திரைப்படத்தின் முன்னேற்பாடு பணிகளுக்காக அமெரிக்கா சென்றிருந்தேன். அந்த பணிகளை முடித்துவிட்டு இப்போது தான் திரும்புகிறேன். இன்னும் இரண்டு நாட்களில் நல்ல செய்தியுடன் உங்களைச் சந்திக்கிறேன். இப்போதைக்கு அதுதான் செய்தி.. நான் எந்த செய்தியையும் கொண்டு வரவில்லை. அனைவரிடமும் ஆலோசித்துவிட்டு அடுத்த இரண்டு நாட்களில் உங்களைச் சந்தித்து இது குறித்து விளக்குவேன்" என்றார்.
நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்த கேள்விக்கு, அது நன்றாக நடந்து வருவதாகத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், "லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது.. இரண்டு நாட்களில் அனைத்தையும் விளக்கமாகச் சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
ஏன் இரண்டு நாட்கள்: மக்கள் நீதி மய்யத்தின் 7ஆவது தொடக்க விழா 21ஆம் தேதி நடக்கிறது. அந்த கூட்டத்திற்குப் பிறகு லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாகக் கமல் தனது கட்சி நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்துகிறார். அதன் பிறகு கூட்டணி குறித்த முடிவை அவர் எடுப்பார் என்று தெரிகிறது. இதன் காரணமாகவே இன்னும் இரண்டு நாட்களில் கூட்டணி குறித்து முடிவு எடுத்து அறிவிப்பதாகக் கமல் கூறியிருக்கிறார்.
மேலும், இந்த லோக்சபா தேர்தலில் கமல் நேரடியாகப் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் சென்னை, கோவை, மதுரை, ராமநாதபுரம் தொகுதிகளில் எதாவது ஒன்றில் அவர் போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், தேர்தல் நெருங்கும் போதே கள நிலவரத்தைப் பொறுத்து கமல் போட்டியிடும் தொகுதி முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications