தேர்தல் பறக்கும் படையிடம் பணத்திற்கு கணக்கு காட்ட பொதுமக்கள் என்ன என்ன சான்று வைத்திருக்க வேண்டும்?
சென்னை: தேர்தல் பறக்கும் படை சோதனை செய்யும் போது கையில் 50000க்கு மேல் ரொக்க பணம் இருந்தால், கணக்கு காட்ட பொது மக்கள் என்ன என்ன சான்று வைத்திருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தேர்தல் விதிமுறை என்ன: ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம் மற்றும் ரூ.10,000- க்கு மேல் பரிசுப் பொருட்கள் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும்/ இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கை நாள் எண். ECI/PN/23/2024 நாள் 16.03.2024-ல் இந்திய பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து (16.03.2024) தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின் படி, "பாரபட்சமற்ற ஆரோக்கியமான, அமைதியான முறையில் தேர்தல் நடத்திடவும், தேர்தல் நேரத்தில் முறையற்ற வகையில் பணம் பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் அளித்து பொதுமக்களை தவறான வழியில் ஓட்டு அளிக்க தூண்டுவதனை தடுத்திடும் பொருட்டும், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பறக்கும்படை மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, ரூ.50,000-க்கு மேல் ரொக்கப்பணம் மற்றும் மதுபாட்டில்கள், போதைப்பொருட்கள், சுவரொட்டிகள், பதாகைகள், பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை வாகனங்களிலோ, பிற வகைகளிலோ எடுத்துச் செல்லும் நேர்வுகளில் மேற்படி குழுக்களால் ஆய்வின் பொழுது வாக்காளர்களைக் கவரும் வகையில் கொண்டு செல்வது உறுதி செய்யப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும்.
எனவே, ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம் மற்றும் ரூ.10,000- க்கு மேல் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லும் போது பொதுமக்கள், வணிகர்கள் அதற்கான உரிய ஆதார ஆவணங்களுடன் கொண்டு செல்லவேண்டும். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் மேற்கண்ட இனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேற்படி பறிமுதல் செய்யப்பட்ட இனங்களுக்கான நபர்கள் உரிய ஆதார ஆவணங்களை மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள அறை எண்: 186-இல் உள்ள மேல்முறையீட்டு அலுவலரான திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்களிடம் மேல்முறையீடு செய்யலாம்.
பறிமுதல் செய்யப்படும் பொழுது காவல் துறையினரால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட இனங்களில் நீதிமன்ற உத்தரவிற்கு பின்னரே உரிய வழிமுறைகளை பின்பற்றி பணம், பொருட்கள் திரும்ப வழங்கப்படும். எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மேற்சொன்ன விதிமுறைகளை தவறாமல் பின்பற்றிட வேண்டும்" என்று தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.
பொதுவாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள காலம் வரை ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம் மற்றும் ரூ.10,000- க்கு மேல் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படும்.. அந்த வகையில் இந்த விதிமுறை தேர்தல் நடைபெற உள்ள ஏப்ரல் 19ம்தேதி வரை மட்டுமல்ல.. ஜூன் 4ம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்தில் வாகன சோதனை தீவிரமாக நடந்து வருகிறது.. சென்னையில் இருந்து வெளியூர் செல்வோர் கையில் 50000க்கும் மேல் ரொக்கமாக எடுத்து சென்றால் அதற்கு உரிய ஆவணங்களை காண்பிக்க வேண்டும்.. இல்லாவிட்டால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்வார்கள். அதேபோல் ஒரு வாகனத்தில் ஒவ்வொருவரும் 49500 என்று 6 பேர் எடுத்து செல்லலாமா என்று கேட்டால் அதுவும் சாத்தியம் இல்லை.. ஒரு வாகனத்தில் செல்வோர் 50000 வரை தான் எடுத்து செல்ல முடியும்..
ஒரு வேளை உங்கள் கையில் 2 லட்சம் இருக்கிறது.. அல்லது 5லட்சம் ரூபாய் இருக்கிறது.. அல்லது 10 லட்சம் இருக்கிறது என்றால் அந்த பணம் எப்படி வந்தது என்பதற்கான ஆவணங்கள் இருக்க வேண்டும். ஒரு வேளை தேவைக்காக ஏடிஎம்மில் நீங்கள் பணம் எடுத்து வைத்திருந்தால், எவ்வளவு பணம் எடுத்தீர்களோ அதற்கான ரசிது இருக்க வேண்டும். அல்லது அதற்கான எஸ்எம்எஸ் இருக்க வேண்டும்.. அந்த பணம் எதற்காக கொண்டு செல்கிறீர்கள் என்பதையும் பார்ப்பார்கள்.. சொத்து விற்ற பணம் என்றால், அதற்கான ஆவணங்களை காட்ட வேண்டும். அதேபோல் கடையில் வசூலான பணம் என்றால் அதற்கான பில் ஆவணங்களை காட்ட வேண்டும். நிலம் வாங்க போறீங்க அல்லது தங்கம் வாங்க போகிறீர்கள் என்றால், அந்த பணம் எப்படி வந்தது.. எப்படி சேர்த்தீர்கள் என்பதற்கான ஆவணங்களை காட்டவேண்டும்.. இல்லை என்றால் வங்கியில் கட்டி டிஜிட்டலாக பணத்தை எடுத்து செல்லுங்கள். டிஜிட்டலாக பணத்தை எடுத்து செல்வதே இப்போதைய சூழலுக்கு நல்லது.. இல்லாவிட்டால் தேவையற்ற மனஉளைச்சல் ஏற்படும்...












Click it and Unblock the Notifications