"பெட்ரோல் குண்டு வீச்சு.." வந்து விழுந்த கேள்வி.. ஒரே வரியில் ஆளுநர் தமிழிசை பொளேர்.. என்ன சொன்னார்
சென்னை: தமிழ்நாட்டில் ஆளுநர் மாளிகைக்கு அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாகப் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்கு வெளியே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அந்த பெட்ரோல் குண்டு ஆளுநர் மாளிகைக்கு வெளியே விழுந்தது. இந்தச் சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெட்ரோல் குண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற ரவுடியை ஆளுநர் மாளிகைக்கு அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீசார் பிடித்தனர். விசாரணையில் அந்த நபர் சென்னை நந்தனம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத் என்பது தெரிய வந்தது.
ஆளுநர் தமிழிசை: கருக்கா வினோத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆளுநர் மாளிகைக்கு அருகே இதுபோல பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே இந்தச் சம்பவத்தைச் சுட்டிக் காட்டிய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பெட்ரோல் குண்டுக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன் என்று கூறியுள்ளார்.
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் மாளிகை ராஜ்நிவாஸ் உள்ள சாலையில் பொதுமக்கள் உள்ளே கூட செல்ல முடியாத அளவுக்கு இரும்பு தடுப்புகள் போடப்பட்டு இருந்தன. இதனால் பொதுமக்களால் அந்த சாலையைப் பயன்படுத்தவே முடியாத நிலை இருந்தது. இது அப்பகுதியைச் சேர்ந்த மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துவதாக இருந்தது. இந்த விவகாரத்தை அங்கு எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ், திமுக கட்சிகளும் எழுப்பின.
இரும்பு தடுப்புகள்: அதைத் தொடர்ந்து துணை நிலை ஆளுநர் மாளிகைக்கு முன்பு இருந்த இரும்பு தடுப்புகள் அகற்றப்பட்டன. இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இது குறித்து கருத்து தெரிவித்தார். இரும்பு தடுப்புகள் அகற்றப்பட்டதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், "இது என்ன கேள்வி.. இரும்பு தடுப்பு இருந்தால்.. ஏன் போடுகிறீர்கள் என கேட்குறீர்கள்.. எடுத்தால் அது குறித்தும் கேட்கிறீர்கள்..
எனக்கெல்லாம் யாராலும் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படாது. ஏதோ சிலர் வலியுறுத்தியதாலேயே இரும்பு தடுப்புகள் அகற்றப்பட்டதாகச் செய்திகள் வருகிறது.. ஆனால் அது உண்மை இல்லை. நான் இங்கே துணை நிலை ஆளுநராக வரும் முன்பு, இங்கே மூன்றடுக்கு பாதுகாப்பு தான் இருந்தது. ஆனால், நான் வந்ததும் நிலை மாறிவிட்டது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட மத்திய பாதுகாப்புப் படையினர் அனைவரும் ஏற்கனவே கிளம்பிச் சென்றுவிட்டனர்.
பெட்ரோல் குண்டுவீச்சு: அப்போதே நான் இரும்பு தடுப்புகளையும் அகற்றச் சொல்லிக் கேட்டேன். ஆனால், ஆளுநர் பாதுகாப்பில் பிரச்சினை வரும் என்று போலீசார் கேட்டுக் கொண்டதால் இரும்பு தடுப்புகள் அகற்றப்படாமல் இருந்தனர். ஆனால், நேற்றைய தினம் இதைக் கண்டிப்பாக அகற்றியே தீர வேண்டும் என்று சொன்னேன். அதன் பின்னரே இரும்பு தடுப்புகளை போலீசார் அகற்றினர். இதற்கு வேறு எந்த காரணமும் இல்லை.
இப்போ தான் இரும்பு தடுப்புகள் இல்லையேனு யாரும் பெட்ரோல் குண்டுகளை எல்லாம் போடாதீங்க.. ஆனால், அதுக்கெல்லாம் அஞ்சும் நபர் நான் இல்லை. நான் ஒன்னும் பெரிய ஆள் இல்லை. சாதாரண நபர் தான். எனக்கும் மற்றவர்களைப் போலச் சாதாரணமாக இறுக்க வேண்டும் என்றே ஆசை" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications