அண்ணாமலையை வளர்த்து விட்டதே எடப்பாடி பழனிசாமி தான்.. வெளியில் நடமாடமுடியாது.. புகழேந்தி ஆவேசம்
சென்னை: எடப்பாடி பழனிசாமியும் அண்ணாமலையும் நீண்ட நாளாகவே டிராமா செய்து கொண்டு இருக்கிறார்கள். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி சொல்ல வேண்டியதுதானே.. அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை என்று ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர் புகழேந்தி கூறினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், கூட்டணி கட்சியான அதிமுகவுக்கும் இடையே சமீப காலமாக கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன் தினம் ஆங்கில நாளிதழுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில், "தமிழகத்தின் பல்வேறு நிர்வாகங்கள் ஊழலில் திளைத்தது. முன்னாள் முதல்வர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். தமிழ்நாடு ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

அது ஊழலில் முதல் இடம் என்பதை என்னால் சொல்ல முடியும். அ.தி.மு.க. உடனான கூட்டணி முறிய வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, எங்கள் கட்சியை வலுப்படுத்த வேண்டும். ஒரு அரசியல் கட்சியின் இருப்பு என்பது ஆட்சிக்கு வருவதற்கு தானே தவிர, எப்போதும் கூட்டணியில் நீடிப்பதற்காக அல்ல" என்று கூறியிருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் இந்த பதில் அதிமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் பலரும் ஆவேசமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதிமுகவின் இரு அணிகளும் அண்ணாமலைக்கு எதிராக கடுமையான கருத்துக்களை முன்வைத்து வருகின்றன. முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று அண்ணாமலையை கடுமையாக சாடியிருந்தார். இந்த நிலையில், ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர் புகழேந்தி கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அண்ணாமலையை வளர்த்து விட்டவர் எடப்பாடி பழனிசாமிதான். இதே அண்ணாமலை, என்னுடைய மனைவி ஜெயலலிதாவைவிட ஆயிரம் மடங்கு உயர்ந்தவர் என பேசினார். அன்று கண்டித்து பேசியது நான் மட்டுமே. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என நேற்று இரவே ஓ பன்னீர் செல்வம் அண்ணாமலையை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அண்ணாமலைக்கு வயதும் போதாது, அனுபவமும் போதாது. மத்திய அரசு உள்ளது. பாதுகாப்பு உள்ளது என்ற தைரியத்தில் அது இதெல்லாம் பேசக்கூடாது. ஜெயலலிதாவை பேசிவிட்டு தமிழகத்தில் அரசியல் பேச வேண்டும் என்றால் அண்ணாமலை அதை மறந்து விட வேண்டும். வெளியிலே வர முடியாது. பெண்கள் துரத்தி துரத்தி அடிக்கிற காட்சியை தமிழகம் பார்க்கும். ஜெயலலிதாவை தமிழக மக்கள் தெய்வமாக பார்க்கிறார்கள்.
ஜெயலலிதாவை விமர்சிப்பதற்கு அண்ணாமலைக்கு என்ன யோக்கியதை உள்ளது. ஜெயலலிதாவை உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. எந்த அடிப்படையில் அவரை குற்றவாளி என அண்ணாமலை சொல்கிறார். அண்ணாமலை வெளியில் நடமாட முடியாது. இதை அரசியல் ரீதியாக சொல்கிறேன். அண்ணாமலை பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. எவ்வளவோ பேரை நாங்கள் அரசியலில் பார்த்து விட்டோம்.
என்ன பேச வெண்டும் என்ரு தெரிந்து அண்ணாமலை பேச வேண்டும். அண்ணாமலையை கர்நாடகாவில் யாருக்காவது தெரியுமா? அண்ணாமலையால் தான் கர்நாடகாவில் பெரும் தோல்வி கிடைத்தது. எடப்பாடி பழனிசாமியும் அண்ணாமலையும் நீண்ட நாளாகவே டிராமா செய்து கொண்டு இருக்கிறார்கள். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி சொல்ல வேண்டியதுதானே.. அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை. பாஜகவை தமிழகத்தில் இருந்து மூட்டை கட்ட வைத்துவிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications