ஏரியாவே விஜயகாந்த் கண்ட்ரோல் தான்.. உதவினு போன இல்லைனு சொல்லவே மாட்டார்! அண்டை வீட்டார் நெகிழ்ச்சி
சென்னை: மறைந்த கேப்டன் விஜயகாந்த் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரது விஜயகாந்த் வீட்டின் அக்கம் பக்கத்தில் இருப்போர் சொன்ன கருத்துகள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
கேப்டன் விஜயகாந்த் கடந்த சில காலமாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். சில நாட்களுக்கு முன்பு அவர் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட நிலையில், அவர் நிமோனியா பாதிப்பால் உயிரிழந்தார்.

அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள் பொதுமக்கள் எனப் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அக்கம் பக்கத்தினர்: இதற்கிடையே விஜயகாந்த் வீட்டின் அக்கம் பக்கத்தில் இருப்போர் விஜயகாந்த் குறித்து சில நெகிழ்ச்சி கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அவரது வீட்டின் அருகே இருக்கும் பெண் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "25 ஆண்டுகளாக நான் இங்கே இருக்கிறேன். அவரை போல ஒருவரை நான் பார்த்ததே இல்லை. நான் திருமணமே வேண்டாம் என்று இருந்தேன். விஜயகாந்த்திற்குப் பக்கத்து வீடு என்பதால் தான் திருமணத்திற்கே ஓகே சொன்னேன். இங்கே எந்த பிரச்சினையும் இருக்காது.
பிரச்சினை நடக்க அவர் விடவும் மாட்டார். எனக்கு விஜயகாந்த்தை அவ்வளவு பிடிக்கும். கேப்டன் பிரபாகரன் படத்தை நான் அத்தனை முறை பார்த்துள்ளேன். கவுண்டரில் சண்டை போட்டு டிக்கெட் வாங்கியுள்ளேன். அவர் இல்லை. போய்விட்டார் என்பதை நினைத்தாலே கஷ்டமாக இருக்கிறது. கவலையாக இருக்கிறது. என்னால் சாப்பிட கூட முடிவதில்லை. என்ன செய்றது என்றே தெரியவில்லை" என்று அவர் தெரிவித்தார்.
கம்பீர தோற்றம்: அதேபோல மற்றொரு நபர், "இங்குள்ள அனைவரும் அவரை அப்பா ஸ்தானத்திலேயே பார்த்தனர். அவரை போல ஒருவரைப் பார்த்ததே இல்லை. அந்த கம்பீர தோற்றம் யாருக்குத் தான் வரும். நாங்கள் கீழே பேட்மிண்டன் விளையாடிக் கொண்டு இருப்போம். அப்போது திடீரென கம்பீர குரலில், ஹேய் என்ன பண்றீங்க.. பார்த்து விளையாடுங்க என்பார். அந்த கம்பீர குரல் அப்படி இருக்கும்.
இந்த ஏரியாவில் சுற்றி நடப்பதைத் தொடர்ந்து கண்காணிப்பார். இது அவருடைய ஏரியா.. இங்கே தப்பு நடக்க வாய்ப்பே இல்லை. மொத்தமாக இந்த ஏரியா அவரது கண்டிரோலில் தான் இருந்தது என்று சொல்லலாம்" என்று அவர் தெரிவித்தார்.
எல்லாருக்கும் உதவுவார்: தொடர்ந்து பேசிய அவர், "யார் எங்கிருந்து வந்தாலும் சரி.. என்ன உதவி கேட்டாலும் சரி செய்வார். பள்ளிப் படிப்புக்குக் காசு இல்லை. கல்லூரி படிப்பிற்குக் காசு இல்லை என்றால் உடனடியாக உதவுவார். எல்லா உதவிகளையும் செய்வார். அவரை போல ஒருவரை மீண்டும் பார்க்கவே முடியாது. வார வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் விருந்து நடக்கும். அது திருவிழா போல இருக்கும். அவரை பார்க்க யார் வந்தாலும் சாப்பாடு போடுவார்.
நான் உட்பட யார் அவரை பார்க்கச் சென்றாலும் இல்லை எனச் சொல்ல மாட்டார். என்ன பிரச்சினை என்பதைப் பார்த்து அதைச் சரி செய்யவே முயல்வார். அவர் எங்களுடனும் நார்மலாகவே பேசுவார். நடிகர் என்று எந்தவொரு பந்தாவும் இருக்காது. சின்ன வயதில் நாங்கள் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தார். பார்த்து ஓட்டுங்கள் என்பார். இதெல்லாம் வேறு யாரிடமும் பார்க்க முடியாது" என்றார்.
பணத்தை அள்ளிக் கொடுப்பார்: மற்றொரு நபர் கூறுகையில், "அவரது பிறந்த நாள், திருமண நாள் என்று வந்துவிட்டால், வீட்டின் வாசலில் சேர் போட்டு அமர்ந்து கொள்வார். வாழ்த்து சொன்ன அனைவரும் வெறும் கையுடன் செல்லக் கூடாது என்பதற்காகப் பணத்தைக் கொடுத்து அனுப்புவார். இதை நானே பார்த்துள்ளேன். நான் பணத்தையும் வாங்கியுள்ளேன்" என்றார்.












Click it and Unblock the Notifications