விவேக்கின் அஸ்தியை வைத்து குடும்பத்தினர் செய்த காரியம்... நெகிழ்ந்து போன ரசிகர்கள்
சென்னை: நடிகர் விவேக் ஏப்ரல் 17 ம் தேதி அதிகாலை மாரடைப்பால் காலமானார். விவேக்கின் இந்த திடீர் மரணம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள அவரின் கோடான கோடி தமிழ் ரசிகர்களையும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியது.
விவேக்கின் இதயத்தில் இடது புற ரத்த குழாயில் 100 சதவீதம் அடைப்பு இருந்தது. இதனால் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார் என டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும், விவேக்கின் மரணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்தனர்.

சொந்த ஊரில் விவேக்கின் அஸ்தி
பிரபலங்கள், ரசிகர்கள் அதிக அளவில் திரண்டு விவேக்கின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். ஏப்ரல் 17 ம் தேதி மாலையே, அரசு மரியாதையுடன் விவேக்கின் உடல், விருகம்பாக்கம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தற்போது விவேக்கின் அஸ்தி, மதுரை அருகில் உள்ள அவரது சொந்த ஊரான பெருங்கோட்டூருக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

அஸ்தி தூவிய இடத்தில் மரக்கன்று
விவேக்கின் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் பெருங்கோட்டூரில் விவேக்கின் அஸ்திக்கு நடத்தப்பட்ட பூஜையில் கலந்து கொண்டுள்ளனர். பிறகு அந்த அஸ்தியை உள்ளூரில் உள்ள நிலம் ஒன்றில் தூவி, அங்கு மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.

மூச்சுள்ளவரை விவேக்கின் நினைவு
விவேக் தனது வாழ்நாளில் 33 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டுள்ளார். அதனால் அவரது அஸ்தி தூவப்பட்ட மண்ணில், அவரது நினைவாக மரக்கன்றுகளை குடும்பத்தினர் நட்டுள்ளனர். இது பற்றி அவரது உறவினர்கள் கூறுகையில், ஒவ்வொருவரின் மூச்சு உள்ளவரை அவர்களுடன் விவேக்கின் நினைவு கலந்திருக்கும் என்றனர்.

விவேக் குடும்பத்திற்கு பாராட்டு
விவேக்கின் நினைவாக ரசிகர்கள் பலர் மரக்கன்றுகளை நட்டு வரும் வேளையில், அவரது குடும்பத்தினரின் மிக பொருத்தமான இந்த செயல் மிகப் பெரிய அளவில் பாராட்டை பெற்றுள்ளது. ரசிகர்கள் பலர் விவேக்கின் குடும்பத்தினர்களுக்கு நெகிழ்ச்சியுடன் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications