வீரமணிக்கு பதிலடி தந்தாரே காமாட்சிபுரி ஆதீனம்.. இப்ப அரசுக்கு புது கோரிக்கை.. "குண்டாசில் போடுங்க"
கோவை காமாட்சிபுரி ஆதீனம் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கையை வைத்துள்ளார்
சென்னை: மத நம்பிக்கையை தொடர்ந்து புண்படுத்துவோர் குறித்து காமாட்சிபுரி ஆதீனம் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
2022-ம் ஆண்டுக்கான பட்டினப் பிரவேச விழாவில் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச்செல்வது மனித உரிமையை மீறிய செயல் என்று புகார் எழுந்தது.
தருமபுரம் ஆதீனத்தைப் பல்லக்கில் தூக்கி, சில தினங்களுக்கு முன்பு சென்றனர். தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் செல்ல கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இதனை கண்டித்திருந்தார்.
மேளங்கள் முழங்க.. பல்லக்கில் வெற்றிகரமாக பவனி வந்த தருமபுரம் ஆதீனம்.. எந்த எதிர்ப்பும் இல்லை!
சங்கராச்சாரியார்
பெரியார் பேச்சைக் கேட்டு மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியே பல்லக்கை விட்டுக் கீழே இறங்கி நடந்து சென்றார். இடையில் கைவிடப்பட்ட பல்லக்கு பழக்கம் மீண்டும் ஏன்? திமுகவுக்கு எதிராக அரசியல் நடத்த எதிர்க்கட்சிகளுக்கு ஆயுதமாக இந்த விவகாரம் பார்க்கப்படுகிறது.. ரிக்ஷா இழுத்தோர் இப்போது ஆட்டோ ஓட்டுநர்களாக மாறியுள்ளனரே? என்று வீரமணி அப்போது காட்டமாக கூறியிருந்தார்.
வீரமணிக்கு பதில்
இதற்கு மூத்த ஆதீனங்களில் ஒருவரான காமாட்சிபுரி ஆதீனம் உடனடியாக பதிலளித்திருந்தார். "மனிதனை மனிதன் சுமப்பது தவறென நாங்களும் கூறுகிறோம், கடவுளாக இருக்கக்கூடிய குருவுக்கு பல்லக்கு தூக்கப்படுகிறது, ஆனால், சுமக்கிறார்கள் எனக்கூறக்கூடாது, பல்லக்கில் எழுந்தருளுகிறார் என்று சொல்ல வேண்டும் என வீரமணிக்கு பதில் தந்திருந்தார்.
ஆபாச வார்த்தை
இப்போது மத நம்பிக்கையை புண்படுத்துவோர் குறித்து அடுத்த விவகாரத்தை கொண்டு வந்துள்ளார் காமாசிபுரி ஆதீனம்.. காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் இதை பற்றி சொன்னதாவது: பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றான சிதம்பரம் நடராஜர் கோவில், உலகிலுள்ள சைவ பெருமக்களின் மூல ஸ்தானமாக திகழ்ந்து வருகிறது.. பல கோடிக்கணக்கான பக்தர்களின் மனதில் நிறைந்துள்ள நடராஜர் குறித்து, ஆபாச வார்த்தைகளால் ஒருவர் சித்தரித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
சிவனடியார்கள்
இது ஆதீன பெருமக்கள், சிவனடியார்கள், மடாதிபதிகள், பக்தர்களிடையே மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி வருகிறது.. தமிழகத்தில் இதுபோன்ற செயல்கள் அவ்வப்போது ஏற்பட்டு பெரும் பிரச்னைகளை உருவாக்குகின்றன... இதற்கு எதிராக ஹிந்துக்கள் போராட்டம் நடத்தினாலும் அதற்கு உரிய தீர்வு ஏற்படுவதில்லை... எனவே, மத நம்பிக்கையை புண்படுத்தும் இதுபோன்ற சமூக விரோதிகளை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க, அரசு நிரந்தர தீர்வு ஏற்படுத்துவது அவசியம்" என்று முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார்.