கொ.மு... கொ.பி... தமிழக அரசியலையும் விட்டுவைக்காத கொரோனா தாக்கம்
சென்னை: உலக அரசியல் தொடங்கி உள்ளூர் அரசியல் வரை இன்று ஆட்டிபடைத்து வருகிறது கொரோனா வைரஸ். பொருளாதாரம் மற்றும் மருத்துவத்துறைக்கு சற்றும் சளைக்காத வகையில் அரசியலிலும் அதன் தாக்கம் அபரிமிதமானதாக உள்ளது.
இதனிடையே தமிழக அரசியலில் கொரோனாவால் ஏற்பட்ட தாக்கம் பற்றி கூற வேண்டுமானால், மு.க.ஸ்டாலினை பிரதமரே அழைத்து பேசியது, டெல்லி ரிடர்ன் என்ற வார்த்தையால் ஒற்றுமையில் ஓட்டை விழுந்திருப்பது என பல விவகாரங்களை கூறலாம்.
பொதுவாக கூறவேண்டுமென்றால் தமிழக அரசியலை கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்கு பின் என இரண்டு வகையாக கூட பிரிக்கலாம்.

சுற்றுப்பயணம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பொறுத்தவரை எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் மிக தீவிரம் காட்டி வருகிறார்.இந்நிலையில் மார்ச் 29-ம் தேதி தமிழகம் தழுவிய அளவில் அவர் மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணம் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனாவின் கோரப்பிடி இன்னும் எத்தனை நாட்களுக்கு, மாதங்களுக்கு தொடரப்போகிறது எனத் தெரியாததால் புதிய சுற்றுப்பயணத் திட்டத்தையும் அவர் இன்னும் தயார் செய்யவில்லை. கொரோனா விவகாரம் மட்டும் இல்லையென்றால் இன்றைய தேதிக்கு குறைந்தது 10 மாவட்டங்களிலாவது மக்கள் சந்திப்பு பயணத்தை முடித்திருப்பார் ஸ்டாலின்.

உரசல்; விரிசல்
இதேபோல் துணை முதல்வர் ஓ.பி.எஸ். தரப்புக்கும் முதல்வர் தரப்புக்கும் கொரோனா விவகாரத்திற்கு பின்பு சற்று உரசலும், விரிசலும் அதிகரித்துள்ளது. துணை முதலமைச்சர் என்கிற முறையில் கொரோனா தொடர்பாக இதுவரை எந்த பேட்டிக்கும் ஓ.பி.எஸ். முன்னிறுத்தப்படாதது அவரது ஆதரவாளர்களை மீண்டும் கடுமையாக சினம்கொள்ளச் செய்துள்ளது. இதன் வெளிப்பாடு கொரோனா பதற்றம் தணிந்த பின்னர் நிச்சயம் எதிரொலிக்கும் என ஓ.பி.எஸ். வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

அதிசய அழைப்பு
மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பிரதமர் மோடியே அழைத்து நலம் விசாரித்ததோடு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் திமுகவின் ஆலோசனைகளை தெரிவியுங்கள் என கடந்த வாரம் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வு நடந்திருக்கிறது என்றால் அதற்கு கொரோனா வைரஸ் தாக்கமே காரணம். மத்திய அரசின் திட்டங்களை மு.க.ஸ்டாலின் மிக கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் அவரிடம் பிரதமரும், உள்துறை அமைச்சரும் தாங்களே அழைத்து பேசியது கொரோனாவால் அரசியலில் ஏற்பட்ட தாக்கங்களில் குறிப்பிடத்தக்கது.

வார்த்தை பிரயோகம்
தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து மத மக்களும் தாய்பிள்ளைகளாக பழகி மாமன், மச்சான் என மதமாச்சரியங்களை கடந்து ஒற்றுமை பேணி வந்த நிலையில், டெல்லி ரிடர்ன் என்ற வார்த்தை பிரயோகம் அதனை சீர்குலைத்துள்ளது. இதனிடையே ஏற்கனவே சி ஏ ஏ, என்.பி.ஆர்., என்.ஆர்.சி, போன்ற விவகாரத்தில் அதிமுக மீது இஸ்லாமியர்கள் அதிருப்தியில் இருந்த நிலையில், கொரோனா பிரஸ்மீட் விவகாரம் அதனை மேலும் சிக்கலாக்கி உள்ளது.

நல உதவிகள்
தமிழக அரசியலில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய மிக முக்கிய தாக்கத்தில் ஒன்று திமுகவுக்கு நற்பெயர் ஈட்டிக்கொடுத்தது. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு திமுகவினர் அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட பொருட்களை விநியோகம் செய்து வருகின்றனர். இது கொரோனாவுக்கு முன்பை காட்டிலும் கொரோனாவுக்கு பின்பு மக்கள் மத்தியில் திமுகவின் செல்வாக்கு அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. இதனை உளவுத்துறையும் அரசுக்கு குறிப்பு அனுப்ப தவறவில்லை.












Click it and Unblock the Notifications