எகிறியடிக்கும் தங்கம்..ஒரேநாளில் 2 முறை விலை உயர்வு..பட்ஜெட்டை எதிர்பார்த்த மக்களுக்கு பேரதிர்ச்சி
சென்னை: மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்ப்பட்ட நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் குறையும் என்று கூறப்பட்ட நிலையில் எகிறியடிக்க தொடங்கி உள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை 2 முறை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு அதிர்ச்சியாகி உள்ளனர். அதோடு தங்கம் விலை குறைக்கும் வகையிலான அறிவிப்பு வரும் என கூறிய நகை வியாபாரிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் மீண்டும் தங்கத்தின் விலை என்பது எகிற தொடங்கியது. தற்போது முதல் முறையாக வரலாற்றில் இல்லாத வகையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்பது ரூ.60 ஆயிரத்தை கடந்து சென்றுள்ளது.

சென்னையை பொறுத்தவரை இன்று காலையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 வரை அதிகரித்தது. இதனால் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ 61,960 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7,745 க்கு விற்பனையாகிறது.
இது தங்கம் வாங்கும் மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தான் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த முறை மத்திய பட்ஜெட்டின்போது தங்கத்தின் மீதான இறக்குமதி குறைக்கப்பட்டது. இதனால் ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.4 ஆயிரம் வரை குறைந்தது.
இதனால் இந்த முறையும் அதுபோன்ற ஜாக்பாட் அறிவிப்பு வெளியாகுமா? என்று நகை பிரியர்கள் ஆர்வமாக எதிர்பார்த்தனர். ஆனால் அப்படியான அறிவிப்பு எதுவும் வரவில்லை. இதனால் தங்க நகை விலை என்பது 2 வது முறையாக எகிறியடிக்க தொடங்கியது. பட்ஜெட் தாக்கல் முடிவடைந்த பிறகு 2வது முறையாக தங்கம் கிடுகிடுவென அதிகரித்தது.
மத்திய பட்ஜெட் எதிரொலியால் சென்னையில் இன்று 2வது முறையாக தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. காலையில் சவரனுக்கு ரூ.120 உயர்ந்த தங்கம் மதியத்துக்கு மேல் 2வது முறையாக சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது. இதனால் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு சவரன் தங்கம் ரூ.62,320க்கு விற்பனையானது. அதேபோல் ஒரு கிராம் ஆபரண தங்கம் என்பது ரூ.7,790 உயர்ந்து விற்பனையானது. இது நகை வாங்க நினைக்கும் மக்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது.
முன்னதாக தமிழ்நாடு தங்கம் மற்றும் வைர வியபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தங்கம் விலை குறைப்புக்கான நடவடிக்கை என்பது பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.
இதுபற்றி அவர், ‛‛கடந்த 2014 பட்ஜெட்டின்போது தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதம் என்ற அளவில் இருந்தது. அதனை 9 சதவீதமாக குறைத்து 6 சதவீதம் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி என்பது 6 சதவீதத்தில் இருந்து 4 அல்லது 3 சதவீதம் குறைக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
இது நடக்கும் பட்சத்தில் கிராமுக்கு ரூ.150 வரை விலை குறையும். இந்த வரி குறைப்பின் பலன் நேரடியாக நுகர்வோரை சென்று சேரும். நாங்களும் இதனை தான் எதிர்பார்க்கிறோம்'' என்றார். ஆனால் அவரது நம்பிக்கை கைக்கொடுக்கவில்லை. மாறாக தங்கம் விலை மீண்டும் எகிறியடிக்க தொடங்கி உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications