"புல்லட்டில் இருந்து தப்பித்த சென்னை".. தமிழ்நாடு வானிலையில் முக்கிய மாற்றம்! வல்லுனர்கள் வார்னிங்!
சென்னை: சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் வரும் நாட்களில் தமிழ்நாடு வானிலை குறித்து சென்னை ரெயின்ஸ் முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டு உள்ளது.
வடகிழக்கு பருவமழை உச்சம் தொட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் இன்றும் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று கணிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வானிலை
இந்த நிலையில் தமிழ்நாடு வானிலை குறித்து சென்னை ரெயின்ஸ் (chennairains.com) முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு மயிலாடுதுறை மற்றும் கடலூர் சுற்றுவட்டாரங்களில் மிக அதிக கனமழை பெய்துள்ளது. 2022 வடகிழக்கு பருவமழையின் முதல் உச்சம் என்று சொல்லும் அளவிற்கு மழை பெய்துள்ளது. டெல்டாவின் கடலோர பகுதிக்கு இடையே 12 மணி நேரமாக இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இந்த மழை பெய்தது. அதன்பின் இந்த மழை மேற்கு நோக்கி நகர்ந்தது.

சிதம்பரம்
இதனால் சிதம்பரத்தில் 31 செமீ மழை பெய்தது. 24 மணி நேரத்தில் சிதம்பரத்தில் இவ்வளவு மழை பெய்துள்ளது. சீர்காழியில் 44 செமீ மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை சீசனில் சமீப வருடங்களில் அங்கு பெய்த மிக கனமழைகளில் இதுவும் ஒன்று. இதில் ஆறுதல் அளிக்க கூடிய விஷயம் என்னவென்றால் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து, தமிழ்நாடு உள்மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது.

தென் மண்டலம்
தற்போதைய நிலையில் அரபிக்கடலில், தெற்கு பகுதியிலும் இந்த தாழ்வு பகுதி காணப்படுகிறது. அடுத்தடுத்து 12-24 மணி நேரத்தில் அரேபியன் கடலை நோக்கி மேலும் இது நகரும். இந்த வலிமை இழப்பு மற்றும் நகர்வு காரணமாக தமிழ்நாட்டில் மழை அளவு குறைந்து கொண்டே வரும். அடுத்த 24- 36 மணி நேரங்களிலும் மழை வெகுவாக குறையும். ஆனால் அதற்கு முன் தென் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நல்ல கனமழை பெய்யும்.

சென்னை
ராமநாதபுரம் , தூத்துக்குடி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களிலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை மழை பெய்யும். மழை பிரேக் எடுக்கும் முன் சிறிய அளவில் சென்னையில் ஆங்காங்கே மழை பெய்யும். சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் 15 செமீ மழை வரை கடந்த 3-4 நாட்களில் பெய்து உள்ளது. ஆனாலும் சென்னையின் சில பகுதிகளில் மழை பெய்யவில்லை.

தப்பித்த சென்னை
சரியாக சொல்ல வேண்டும் என்றால் புல்லட்டில் இருந்து தப்பித்தது போல சென்னை மிக தீவிர கனமழையில் இருந்து தப்பித்து உள்ளது. சனிக்கிழமை காலை பெய்தது போல மிக தீவிர கனமழை மட்டும் மாலை நேரத்திலும் பெய்து இருந்தால், சென்னையில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். ஆனால் அதில் இருந்து தப்பித்து விட்டோம். தற்போது இருக்கும் நிலவரப்படி தமிழ்நாடு மீண்டும் ஒரு முறை காற்றழுத்த தாழ்வு பகுதியை சந்திக்கலாம். அடுத்த 2 வாரங்களில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்புகள் உள்ளன, என்று சென்னை ரெயின் கணிப்பில் தெரிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications