எல்லா கண்ணும்.. இந்த ஒரு பக்கம்தான்! அதிமுகவில் 5 நாளில் கிளைமேக்ஸ்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க!
சென்னை: அதிமுகவின் மா.செ.க்கள் கூட்டத்தை ரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாக அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 16-ந்தேதி நடக்கும் என எடப்பாடி பழனிச்சாமியால் அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் பல பிரச்சனைகள் முடிவிற்கு வரும் என்கிறார்கள். அதாவது அதிமுக பிரச்சனைகளுக்கு கிளைமேக்ஸ் வரும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்!
அவசர செயற்குழுவைக் கூட்ட வேண்டிய அவசரம் என்ன? என்பது குறித்துதான் அதிமுகவில் பேசுபொருளாகி வருகிறது. கிட்டத்தட்ட அதிமுகவில் பெரிய புயலை போல இந்த கூட்டம் மாறி உள்ளது. திமுக, பாஜக கட்சிகள் கூட இந்த செயற்குழுவை உன்னிப்பாக கவனிக்கின்றன. இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அணிச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டிருப்பதால் அதிமுகவின் செயற்குழு எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது.

எடப்பாடி செயற்குழு: இந்த நிலையில், கட்சியின் மா.செ.க்களுக்கு இன்று ஒரு உத்தரவை ஓரலாக பிறப்பித்திருக்கிறார் எடப்பாடி. அதாவது, மா.செ.க்களை தொடர்பு கொண்டு, "எந்த சூழலிலும் ஓபிஎஸ், தினகரன் இணைப்பு பத்தியோ, ஒன்றிணைய வேண்டும் என்பது பற்றியோ பேச்சை எடுக்கக்கூடாது " என அட்வைஸ் செய்திருக்கிறாராம் எடப்பாடி. அவரவர் மாவட்டத்தில் உள்ள செயற்குழு உறுப்பினர்களிடம் ஸ்ட்ரிக்டாக அறிவுறுத்துங்கள் என சொல்லியுள்ளார்.
அதற்கு, "கழக கட்டுப்பாட்டை மீறாத வகையில் நாங்கள் நடந்து கொள்ளலாம். ஆனா, தொண்டர்கள் நாங்கள் சொல்வதைக் கேட்க வேண்டுமே" என்று சந்தேகத்தை கிளப்பியிருக்கிறார்கள் மா.செ.க்கள் பலரும்.
செயற்குழுவில் ஒற்றுமையை பத்தி ஏன் பேசக்கூடாது ? என்ன காரணம் ? என விசாரித்த போது, "மணியான சீனியர்கள் உட்பட சிலர் சசிகலா, தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை இணைப்பதற்காக கட்சியை வலிமைப்படுத்த, 'கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் ' என இந்தமுறை அழுத்தமாக விவாதிக்கத் தயாராகியிருக்கிறார்களாம்.
எதிர்த்து பேசுவார்கள்: அதற்காக, மாவட்டத்தில் தங்களின் ஆதரவாளர்களாக இருக்கும் செயற்குழு உறுப்பினர்களிடம் க்ளாஸ் எடுத்து வருகின்றனர். அதாவது, செயற்குழு கூட்டத்தில் ஒன்றிணைவது பற்றி பேச்சை ஆரம்பியுங்கள் என தங்களின் ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். எடப்பாடிக்கு இது தெரிந்துள்ளது. இதனை அவர் ரசிக்கவில்லை. அதனால், அப்படி ஒரு விவாதம் செயற்குழுவில் எழக்கூடாது என்பதற்காகத்தான் மா.செ.க்களுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார் எடப்பாட. ஆனால், சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜெயிக்க வேண்டுமானால் கட்சி வலிமையாக வேண்டும் என தீர்க்கமாக இருக்கும் தொண்டர்கள், எடப்பாடியின் இந்த அட்வைஸ்களை ஏற்பார்களா எனத் தெரியவில்லை. மொத்தத்தில், செயற்குழுவில் நிறைய விவாதங்கள் உருவாகும் என்பதால் ரகளைகளுக்குப் பஞ்சம் இருக்காது" என்று விவரிக்கின்றனர்.
ரகளைகள் நடக்கும்: இதற்கிடையே, "வருடத்துக்கு ஒருமுறை செயற்குழு கூட்டப்பட வேண்டும்ங்கிறது தேர்தல் ஆணைய விதி. அதனால், மா.செ.க்கள் கூட்டத்தை ஏன் கூட்ட வேண்டும் ? செயற்குழு கூட்டமாகவே நடத்திடலாமே என சொல்லப்பட்டதால் தான் செயற்குழுவைக் கூட்டுகிறார் எடப்பாடி. கூட்டத்தில், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, போதைப் பொருள் நடமாட்டம், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுதல், விலைவாசி உயர்வு, பல்வேறு கட்டண உயர்வுகள் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சனைகளை மையமாக வைத்து திமுக அரசுக்கு எதிரான கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். மேலும், தேர்தல் பணிகளை திமுக அரசு முன்னெடுத்து வருவதால் அது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும். மற்றபடி வழக்கமான செயற்குழு தான் " என்றும் சுட்டிக்காட்டுகின்றனர் அதிமுக மா.செ.க்கள்.












Click it and Unblock the Notifications