Tamilnadu lockdown: பொங்கல் முடிஞ்சாச்சு.. சொந்த ஊர் போனவங்க சென்னை திரும்பியாச்சு.. அடுத்தது என்ன?
சென்னை: பொங்கல் பண்டிகை முடிஞ்சாச்சு, சொந்த ஊர் போனவங்களாம் சென்னை திரும்பியாச்சு.. இனி பேருந்து போக்குவரத்து குறித்து முக்கிய முடிவை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 23,989 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை இந்த மாத இறுதியில் பெரும் உச்சத்தை தொடும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த நிலையில் கடந்த 6ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு சற்று பலனளிப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
சென்னை
இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்காக சென்னையிலிருந்து வேலை நிமித்தமாக வந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். அவர்கள் எல்லாம் இன்றைய தினம் சென்னைக்கு திரும்பியுள்ளனர். அரசு ஊழியர்களுக்கு நாளை வரை விடுமுறை என்பதால் அவர்கள் எல்லாம் நாளை மாலையோ அல்லது புதன்கிழமையோ சென்னை திரும்ப வாய்ப்பிருக்கிறது.
வேகம்
இந்த வாரத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை சற்று கூடுதலாக இருக்கும் என்றே கணிக்கப்படுகிறது. இதை மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியனும் தெரிவித்திருந்தார். சென்னையில் மருத்துவமனைகளும் கடந்த 2-ஆவது அலையைக் காட்டிலும் சற்று வேகமாக நிரம்பி வருகிறது.
கேஸ்கள் உயர்வு
இதை கருத்தில் கொண்டு ஊரடங்கில் மேலும் சில கட்டுப்பாடுகளை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஏற்கெனவே போடப்பட்ட கட்டுப்பாடுகள் இந்த மாதம் ஜனவரி 31ஆம் தேதி வரை முடிவடைகிறது. மார்ச் , ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு கேஸ்கள் உயராத வண்ணம் கட்டுப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாம்.
Recommended Video
யோசனையில் முதல்வர்?
அதற்காக மொத்தமாக தமிழகத்தை இழுத்து மூடுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விருப்பமில்லையாம். அவ்வாறு செய்தால் ஏழை எளிய, நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் அவதியடையக் கூடாது என்பதில் முதல்வர் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். எனவே இந்த தொற்றை குறைக்க சிறந்த வழி, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பேருந்துகளை நிறுத்தலாமா என்ற யோசனையில் முதல்வர் உள்ளதாக தெரிகிறது. இல்லாவிட்டால் பேருந்துகளின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைக்கலாமா என்ற முடிவையும் அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது.