திமுகவின் அடுத்த கட்ட மூவ் என்ன? தோல்வி குறித்து வெளிப்படையாக பேசிய உதயநிதி ஸ்டாலின்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியடைந்துள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்குகிறோம். அதை ஏற்றுக்கொள்கிறோம். திமுக பார்க்காத வெற்றியும் இல்லை. தோல்வியும் இல்லை என்று கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் புதிதாக களம் கண்ட விஜய் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளார். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணி 73 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

மக்கள் என்ன தீர்ப்பை கொடுத்து இருக்கிறார்களோ அதை ஏற்றுக்கொள்கிறோம். தலைவணங்குகிறோம். எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து கேள்வி கேட்கிறீர்கள். உங்கள் யூகத்திற்கு என்னால் பதிலளிக்க முடியாது. எங்கள் தலைவரும், பொதுச்செயலாளரும் இது குறித்து முடிவு செய்வார்கள்.
சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதன்படி நாங்கள் செயல்படுவோம். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி மக்கள் எனக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையை பெறும் வகையில் செயல்படுவேன். திமுக பார்க்காத வெற்றியும் இல்லை. தோல்வியும் இல்லை. தங்கள் கட்சிதான் வெற்றி பெறும் என்று எல்லோரும் விரும்புவார்கள்.
அதே போலத்தான் நாங்கள் விரும்பினோம். சிறப்பான பணிகளை செய்தோம். அதனால் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்த்தோம். மக்கள் முடிவு எடுத்து இருக்கிறார்கள். அதை ஏற்றுக்கொள்வோம். ஆனால் மக்களுக்காக எங்களின் கடமையை நாங்கள் செய்து கொண்டே இருப்போம். இளைஞர்களுக்கு இந்த முறை நிறைய வாய்ப்பு கொடுத்து இருக்கிறோம்.. வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
மக்கள் முடிவு எடுத்து இருக்கிறார்கள். ஆட்சி அமையும்போது என்னவென்று பார்ப்போம், ஏன் இவ்வளவு அவசரம்" என்றார். முன்னாள் அமைச்சர் பெரியகருப்பண் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறித்து செய்தியாளர்க்ள் கேட்டனர். இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "நீதிமன்றத்திற்கு போவது குறித்து தலைவர் ஆலோசனை நடத்தியிருக்கிறார். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications