வீடுகளுக்கு வெளியே 'ரகசிய குறியீடு'.. கொள்ளை பீதியில் திண்டிவனம் மக்கள்.. விசாரித்தால் மேட்டரே வேற
சென்னை: வீடுகளுக்கு வெளியே குறியீடு வரைந்து வைத்த நேபாளம் நாட்டை சேர்ந்தவர்களால் திண்டிவனம் அருகே மக்கள் பீதியில் உறைந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வாட்ஸ்அப் வதந்திகளுக்கு அளவில்லாமல் போய்க் கொண்டு உள்ளது. அப்படித்தான் ஒரு வதந்தி, கொள்ளையர்களின் குறியீடு பற்றியது. குறிப்பிட்ட குறியீடு எழுதப்பட்டிருந்தால் அந்த வீட்டில் கொள்ளையிட வட மாநில கொள்ளையர்கள் திட்டமிட்டுள்ளதாக அர்த்தம் என்ற பெயரில் பல குறியீடுகள் வாட்ஸ்அப்பில் பரவி வருவதை நாம் அறிவோம்.
இப்படி ஒரு மெசேஜ் தீயாக பரவி வந்த நிலையில், தங்கள் வீடுகளுக்கு மேலேயே இப்படியான குறியீடு இருந்தால் அப்புறம் என்ன ஆகும்? மக்கள் பீதியில் உறைந்துவிட மாட்டார்களா என்ன?

திண்டிவனம் பகுதி
இப்படியான ஒரு சம்பவம் திண்டிவனம் காவல் எல்லைக்குட்பட்ட மகாத்மா காந்தி நகர், இந்திரா நகர், காந்திநகர், மற்றம் பிரம்மதேசம் எல்லைக்குட்பட்ட அண்ணா நகர், கோபாலபுரம், ஹவுசிங் போர்டு, போன்ற பகுதிகளில் நடந்துள்ளது. இரவு நேரங்களில் தங்கள் வீட்டுக்கு வெளியே மர்ம நபர்கள் ரகசிய குறியீடு போட்டுள்ளதை பார்த்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பீதியில் மக்கள்
இதுதொடர்பாக ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். பிறகு எதற்கும் போலீசுக்கே போய்விடலாம் என்று காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். வட மாநில கொள்ளையர் பீதியில் மக்கள் சிக்கி இருப்பதை உணர்ந்த காவல்துறை, உடனடி நடவடிக்கையை எடுத்தது. அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

வசூல்
அப்போது, விஜயகுமார் -23, சந்துரு 56, அஜய்குமார் 30, ஆகிய 3 பேர்தான் இப்படி குறியீடு வரைந்தது என்பது தெரியவந்தது. இவர்கள், நேபாளத்தை சேர்ந்தவர்கள். உனடியாக காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததனர் போலீசார். அப்போது அவர்கள் கூறிய தகவல் வித்தியாசமாக இருந்தது.
விஜயகுமார், நேபாளத்திலிருந்து புதியதாக கூர்கா வேலைக்கு வந்துள்ளதாகவும், அவருக்கு, அப்பகுதியில் வீடுகளில் பணம் கொடுத்த வீடு எது? பணம் கொடுக்காத வீடு எது , என அடையாளம் தெரியாததால் பணம் கொடுத்த வீட்டை அறிந்து கொள்வதற்காக என் மொழியில் எழுதினேன் எனவும், இனிமேல் எழுதமாட்டேன் மன்னிக்கவும் எனவும் கேட்டுக் கொண்டார்.

பதிவு செய்யப்பட்ட கைரேகை
இதையடுத்து அவருடைய பெயர், முகவரி, ஆதார் எண், தங்கியிருக்கும் இடம், ஆகியவற்றை பெற்றுக்கொண்டு அந்த மூவரின் கைரேகைகளை பதிவு செய்து கொண்டு, இவ்வாறு செய்யக்கூடாது என போலீசாரால் எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அக்குறியீட்டை அவர் பகலில் தான் எழுதினேன் என கூறினார்.












Click it and Unblock the Notifications