வெளிநாடுகளில் வசிப்பவர்களுடன் நளினி பேச அனுமதி - கடிதம் தாக்கல் செய்ய அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
நளினி முருகன் வெளிநாடுகளில் வசிக்கும் சொந்தக்காரர்களுடன் பேச அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
சென்னை: வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் கைதிகள் இதற்கு முன் பேசியதற்கு முன்னுதாரணங்கள் இல்லாவிட்டால், நாம் அதை உருவாக்குவோம் என்று ஹைகோர்ட் நீதிபதிகள் கூறியுள்ளனர், நளினி முருகன் வெளிநாடுகளில் வசிக்கும் சொந்தக்காரர்களுடன் பேச அனுமதி கோரிய வழக்கில் மத்திய அரசை எதிர்மனுதாரராக சேர்த்துள்ள நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூலை 14ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் நளினி, முருகனை பேச அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், வெளியுறவு அமைச்சகத்தின் பதிலை எதிர்பார்த்துள்ளதாகவும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனின் தந்தை சமீபத்தில் காலமானார். இந்நிலையில், இலங்கையில் வசிக்கும் முருகனின் தாய் மற்றும் லண்டனில் வசிக்கும் தங்கையுடன் வாட்ஸ் ஆப் வீடியோ கால் மூலம் பேச முருகனுக்கும், நளினிக்கும் அனுமதியளிக்க உத்தரவிடக் கோரி நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பத்மா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், வீடியோ காலில் பேச அனைத்து கைதிகளுக்கும் அனுமதி வழங்கும் போது, நளினிக்கும், முருகனுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது... வெளிநாடு உறவினர்களுடன் பேச எந்த சட்டமும் தடை விதிக்கவில்லை. கொரோனா காலத்தில் கைதிகளை உறவினர்களுடன் பேச அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், வெளிநாடுகளில் வசிப்பவர்களிடம் பேச கூடாது என கூறவில்லை. கைதிகளை உறவினர்களுடன் பேச அனுமதிக்க சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், நளினி மற்றும் முருகனை வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுடன் பேச அனுமதிப்பது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், வெளியுறவு அமைச்சகத்தின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இதை ஏற்ற நீதிபதிகள், மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்தை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் கைதிகள் இதற்கு முன் பேசியதற்கு முன்னுதாரணங்கள் இல்லாவிட்டால், நாம் அதை உருவாக்குவோம் எனக் கூறி, மத்திய அரசை எதிர்மனுதாரராக சேர்த்து, விசாரணையை ஜூலை 14ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.