தாம்பரம் லெவலே உயருது.. அந்த பிளாட்பாரம் எப்ப வருது தெரியுமா? சென்னையில் 10 ரயில்கள் மாற்றமாம்.. ஏன்
சென்னை: தாம்பரத்துக்கு புது பிளாட்பாரம் எப்போது ரெடியாகும் என்று பயணிகள் காத்திருக்கும் சூழலில், ஒரு முக்கியமான அறிவிப்பினை ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டிருக்கிறது.
தாம்பரம் வழியாக செல்லும் ரயில்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதற்கு ஏற்ப நடைமேடைகளின் எண்ணிக்கையை உயர்த்தும் விதமாக 12வது தண்டவாள வழித்தடம் அமைக்கும் பணி, துரிதமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் புறநகர் ரயில் சேவையின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புறநகர் ரயில்: சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களைவிட, அதிக பயணிகளை கையாளும் ரயில் நிலையமாக தாம்பரம் ரயில் நிலையம் கருதப்படுகிறது. அதேபோல, சென்னை புறநகர் ரயில்களுடன்இ, பல எக்ஸ்பிரஸ் ரயில்களும் தாம்பரம் வழியாகவே செல்கின்றன.
இந்த அளவுக்கு தாம்பரம் முக்கியத்துவம் பெற காரணம், ஒருகாலத்தில் புறநகர் பகுதியாக இருந்த தாம்பரம், தற்போது கிடுகிடுவென வளர்ச்சி பெற்றுவிட்டது. தொழிற்சாலைகளும், ஐடி கம்பெனிகளும் , ஷாப்பிங் மால்களும் பெருகி காணப்படுவதால், ஏராளமானோர் தாம்பரம் சுற்றுவட்டாரத்தில் வசித்து வருகிறார்கள்.
செங்கல்பட்டு: அந்தவகையில், தினசரி 2 லட்சம் பயணிகள் வரை தாம்பரம் ரயில் நிலையத்தை பயன்படுத்துகிறார்களாம். அதனால்தான், செங்கல்பட்டு செல்லும் பயணிகள் நலன் கருதி, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டுக்கு புறநகர் மின்சார ரயில்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன.
எனினும், பரபரப்பு நேரங்களில், ரயில்களுக்கு உரிய நேரத்தில் ப்ளாட்ஃபாரங்கள் தாம்பரத்தில் கிடைப்பதில்லை. அதனால்தான், புதிய தண்டவாளம் உருவாக்கும் பணிகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றன. வரும் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் இந்த பணிகளை முடிக்க முடிவாகியிருக்கிறது.
பெருத்த நம்பிக்கை: அந்தவகையில், ஒரு பிளாட்பாரம் கிடைத்தால், ரயில் நிலையம் வந்து செல்லும் ரயில்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடியும் என ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் தொடர்பாக இன்னொரு அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.. அதாவது, தாம்பரம் வழியாக இயக்கப்பட்டு வந்த 10 ரெயில்கள்,மாறாக அரக்கோணம்- செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் பணிமனை மற்றும் சிக்னல் மேம்பாட்டு பணிகள் காரணமாக, ரெயில் சேவையில் இப்படியொரு அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம்..
ரயில்வே நிர்வாகம்: இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், "வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை, 27 விரைவு ரெயில்கள் பல்வேறு இடங்களில் இருந்து இயக்கப்படுகிறது. அதன்படி, திருச்சி- பகத் கி கோத்தி, காரைக்கால்- லோக்மான்ய திலக், ராமேஸ்வரம்- அயோத்தியா, ராமேஸ்வரம் பனாரஸ் உள்ளிட்ட 10 ரெயில்கள் தாம்பரம் வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம்- நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அந்தியோதயா விரைவு ரெயில் சேவை இரு மார்க்கத்திலும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது... அதேபோல, பல்லவன் விரைவு ரெயில், வைகை எக்ஸ்பிரஸ், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ஆகியவை செங்கல்பட்டு வரை இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications