ராமர் கோவில் கரசேவைக்கு ஜெயலலிதா ஆதரவு- கருணாநிதி, எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட ஆதாரங்கள் இவை!
சென்னை: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கரசேவைக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார் என்பது வரலாறு. இந்த வரலாற்று ஆதாரங்களை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, மற்றொரு முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் அவ்வப்போது வெளியிட்டிருக்கின்றனர்.
தமிழ்நாடு முதல்வராக ஜெயலலிதா முதல்வராக பதவி வகித்த காலத்தில்.. 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக பாபர் மசூதி- அயோத்தி ராமர் கோவில் கரசேவை தொடர்பாக நாடு முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது. அந்த தருணத்தில் மத்திய அரசு தேசிய ஒருமைப்பாட்டு மன்றத்தின் கூட்டத்தைக் கூட்டியது. இந்தக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, அயோத்தியில் ராமர் கோவில் கரசேவை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இருந்தார்.

இது தொடர்பாக 2008-ம் ஆண்டு செப்டம்பர் 3-ந் தேதி கருணாநிதி வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:
கருணாநிதி அறிக்கை: கேள்வி: கரசேவையை தான் ஆதரிக்கவே இல்லை என்றும், நீங்கள்தான் திரும்பத் திரும்ப ஜெயலலிதா கரசேவையை ஆதரித்ததாகக் கூறுகிறீர்கள் என்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை விடுத்திருக்கிறாரே?
கரசேவையை ஜெ. ஆதரித்து பேசினார்-கருணாநிதி
பதில்: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான கரசேவையை 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதியன்று தொடங்கப் போவதாக விஸ்வ இந்து பரிஷத் அறிவித்திருந்த நிலையில்- "மத்திய அரசு அதிலே என்ன செய்யப் போகிறது என்பதை 23.11.1992க்குள் உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டுமென்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதற்காக மத்திய அரசு தேசிய ஒருமைப்பாட்டு மன்றக்கூட்டத்தைக் கூட்டியது. அந்தக் கூட்டத்தை பாஜகவும், விஸ்வ இந்து பரிஷதும் புறக்கணித்தன. கரசேவையை மீண்டும் தொடங்குவதாக விஎச்பி அறிவித்ததையொட்டி, சட்டத்தின் மாட்சியையும் அரசியல் சாசனத்தின் கண்ணியத்தையும் காப்பாற்ற பொருத்தமான நடவடிக்கை எதையும் எடுக்க- அன்றைய பிரதமர் நரசிம்மராவுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
அன்று அதிமுக பாபர் மசூதி இடிப்புக்கு ஆதரவு சர்ச்சை.. இன்று ராமர் கோவில் விழாவுக்கு க்ரீன் சிக்னல்!
சிறுபான்மையினர் செய்வது தவறு- ஜெயலலிதா: அந்தக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா என்ன பேசினார் என்பதை 'தினமணி' நாளோடு (24.11.1992) அன்று வெளியிட்டிருந்தது. அதன் விவரம்: ''பெரும்பான்மையினராக உள்ளவர்கள் அனுபவிக்கும் உரிமைகளை அதே அளவில் சிறுபான்மையினராக உள்ள குடிமக்களும் அனுபவிக்கும் வகையில் நம்முடைய நடைமுறைகள் அமைய வேண்டும் என்ற பொறுப்பை நமது அரசியல் சட்டத்தின் மதச்சார்பற்ற தன்மை நமக்குத் தந்தள்ளது. அதே நேரத்தில் அரசியல் சட்டத்தின்படி பெரும்பான்மையினருக்குக் கிடைக்கும் சாதாரண உரிமைகளையும், சிறப்புரிமைகளையும் பாதிக்கும் வகையில் அரசியல், சரித்திர, சமூக அமைப்புகளின் பின்னணியில் தங்கள் நலன்களை முன்னிருத்தி செயல்படுவது சிறுபான்மையினருக்கு ஏற்றது அல்ல.
பெரும்பான்மை இந்து- ஜெயலலிதா: இந்த நாட்டில் பெரும்பான்மை வகுப்பு இந்துக்கள் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். அவர்கள் தங்களுடைய மதச்சார்பான லட்சியங்களை அரசியல் சட்டத்தின் குறிக்கோள்களுக்கு மாறுபடாத வகையில் அமைதியான வழியில் நிறைவேற்றிக் கொள்ள முயன்றால் அதனை அனுமதிக்க வேண்டும். பெரும்பான்மையினரும், அவர்களுடைய உரிமைகளை சிறுபான்மையினரைப் போல அனுபவிக்க அனுமதிக்க வேண்டும்.

அயோத்தியில் கரசேவை நடக்கவேண்டும்: அயோத்தி பிரச்சினையில் இதனைத் தொடர்புபடுத்தி குறிப்பாகக் கூற வேண்டுமென்றால், உத்தரப்பிரதேச அரசு கையகப்படுத்திய இடத்தில் இந்துக்கள் விரும்பியபடி கட்டுமானப் பணியை நிறைவேற்ற அனுமதிப்பதாகும். உத்தரப்பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணைகளும், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளும் ஒருவிதமான சட்டச் சூழலை உருவாக்கியிருப்பதை நான் அறிவேன். இந்தச் சூழலில் உத்தரப்பிரதேச அரசு கையகப்படுத்திய இடத்தில் கரசேவையோ அல்லது வேறுவித நடவடிக்கையோ மேற்கொள்வது கடினமாக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் கட்டுமானத்துக்குத் தடை இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொண்டால், கட்டுமானப் பணிக்குத் தடையாக உள்ள சட்டச் சிக்கல்களை அகற்றத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசும், உத்தரப்பிரதேச அரசும் மேற்கொண்டாக வேண்டும். சட்டச் சிக்கல் இருப்பதையே இந்தப் பிரச்சினையில் முடிவு எடுப்பதை ஒத்திப் போடுவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் கட்டுப்பட மறுக்கும் மக்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பை எதிர் கொள்வது ஒவ்வொரு நாளும் நகர நகர அரசுக்குப் பெரும் கடினமாக அமையும். எனவே கரசேவை நடைபெறுவதற்குப் பொருத்தமான சூழ்நிலையை உருவாக்கத் தேவையான முடிவை இந்த அமைப்பு எடுக்க வேண்டியுள்ளது. கரசேவையை அனுமதிக்கும்படி நீதிமன்றங்களை அணுக தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். மிகவும் சுருக்கமாக என்னுடைய வேண்டுகோளைத் தெரிவிக்கிறேன். உத்தரபிரதேச அரசு கையகப்படுத்திய இடத்தில் கரசேவை நடைபெறத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்''.இப்படியெல்லாம் கர சேவை பற்றி அதற்காகவே நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவிலே பேசியவர்தான் ஜெயலலிதா என கருணாநிதி அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
கரசேவை.. ஜெயலலிதா பெயரை இழுத்து.. எடப்பாடி பழனிச்சாமி கனவை சல்லி சல்லியாய் நொறுக்கிய முனுசாமி!
எடப்பாடியின் ராமர் கோவில் வாழ்த்து செய்தி: இதேபோல 1992 தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் ஜெயலலிதா பேசியது உண்மைதான் என முன்னாள் முதல்வரும் இந்நாளைய அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியும் உறுதி செய்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். 04.08.2020-ம் ஆண்டு நாளன்று தமிழ்நாடு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், " அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நடைபெற உள்ள பூமி பூஜை சிறப்பாக நடைபெறுவதற்கு எனது சார்பாகவும் தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன். 1992-ம் ஆண்டு நவம்பர் 23-ந் தேதியன்று நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜெயலலிதா, 'அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும்' என வலியுறுத்திப் பேசினார்கள். அதே சமயம் மசூதியும் அயோத்தியில் இருக்க வேண்டும் என விரும்பினார்கள்" என குறிப்பிட்டுள்ளார். இதனைத்தான் இன்று அதிமுக மூத்த தலைவர் கேபி முனுசாமியும் அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கான கரசேவைக்கு செல்ல கட்டளையிட்டவர் ஜெயலலிதா என்று சுட்டிக்காட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications