கச்சத்தீவு.. அவதூறு பரப்பும் மோடி அருணாச்சலில் சீனா ஊடுருவல் பற்றி வாய் திறப்பாரா? கனிமொழி அட்டாக்!
சென்னை: கச்சத்தீவு பிரச்சனையில் தமிழ்நாட்டின் வாக்குகளுக்காக அவதூறு பரப்புகிற பிரதமர் மோடி, அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் சீனா ஊடுருவியிருப்பது பற்றி வாய் திறப்பாரா என திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி கேள்வி எழுப்பி உள்ளார்.
லோக்சபா தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும் நிலையில் திடீரென கச்சத்தீவு பிரச்சனையை 'தேசிய' பிரச்சனையாக்கி இருக்கிறது பாஜக. 50 ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றதாக கூறி பிரதமர் மோடி முதல் மத்திய அமைச்சர்கள் வரை அடுத்தடுத்து கச்சத்தீவு குறித்து பேசி வருகின்றனர்.

கச்சத்தீவு பிரச்சனையை பாஜக கையில் எடுத்திருப்பதற்கு காங்கிரஸ், திமுக தரப்பு பதிலடி தந்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.
1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்? 2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்? 3. பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா? திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே... என கேள்வி எழுப்பி இருந்தார்.

திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி திமுக வேட்பாளருமான கனிமொழி எம்பி தமது சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் இது பற்றி பதிவிட்டுள்ளதாவது: அருணாச்சல பிரதேசத்தின் பெயரை மாற்றும் அளவிற்கு நம் நாட்டிற்குள் சீனாவை ஊடுருவ, ஒன்றிய பாஜக அரசு அனுமதித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. தங்களின் ஆதாயத்திற்காக, நாட்டின் பாதுகாப்பை அடமானம் வைத்துவிட்டதா பாஜக? தமிழ்நாட்டில் வாக்குக்காக அவதூறுகளைப் பரப்பும் பிரதமர் மோடி, சீன எல்லை பிரச்சனை குறித்து எப்போது வாய்திறப்பார்? . இவ்வாறு கனிமொழி எம்பி கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications