"நமது அம்மா" ஆபீசுக்கு திடீரென வந்த வளர்மதி.. "அலர்ட்டான" போலீஸ்.. கடைசியில்தான் ட்விஸ்டே!
சென்னை: அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்புள்ள இடங்களில் நேற்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.
சென்னையில், நமது அம்மா நாளிதழ் அலுவலகம் செயல்பட்டு வரும் இடத்திலும் இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில்தான் முன்னாள் அமைச்சர் வளர்மதி அங்கேயே வந்ததும், காவல்துறையினர் தடபுடலாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ததும் பின்னர் அது புஸ்வானமாக மாறிப் போனதும் இப்போது அதிமுக வட்டாரத்திலும், போலீஸ் வட்டாரத்திலும், பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

வேலுமணி தொடர்பான இடங்கள்
முன்னாள் அமைச்சர் வேலுமணிக்குச் சொந்தமான 53க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில், அதாவது, காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் சென்னை ஆழ்வார்பேட்டை ஆனந்தன் சாலையிலுள்ள கட்டிடமும் ஒன்றாகும். இந்த கட்டிடத்தில் தான் நமது அம்மா நாளிதழ் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

நமது அம்மா நாளிதழ்
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக இப்போது இதுதான் இருக்கிறது. நமது எம்ஜிஆர் நாளிதழ்தான் முன்பு அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக இருந்தது. ஆனால் ஜெயா டிவி மற்றும் நமது எம்ஜிஆர் நாளேடு ஆகியவற்றின் நிர்வாகம் சசிகலா தரப்பு கைகளில் இருப்பதால் நமது அம்மா என்ற நாளிதழ் அதிமுக தரப்பிலிருந்து தொடங்கப்பட்டு இருந்தது.

என்ன காரணம்
இந்த அலுவலகத்தில்தான் ரெய்டு நடந்துள்ளது. பொதுவாக ஊடக நிறுவனங்களில் அவ்வளவு எளிதாக சோதனைகள் நடத்தப்படுவது கிடையாது. அப்படி இருந்தும் இந்த சோதனை நடத்தப்படுவதற்கு ஒரு காரணம் இருந்தது. சென்னை மற்றும் கோவை மாநகரில் பொதுப்பணித்துறையின் கட்டுமானம் சார்ந்த பணிகளில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்ததாக தான் வேலுமணிக்கு எதிராக குற்றச்சாட்டு உள்ளது. இந்த பணிகளில் அதிகமாக ஈடுபட்டது கேசிபி என்ற நிறுவனம். இந்த நிறுவனம் நமது அம்மா நாளிதழ் அலுவலகம் செயல்பட்டு வரும் அதே கட்டிடத்தில் தான் இருக்கிறது. எனவே தான் அங்கு சோதனைகள் நடத்தப்பட்டு இருக்கின்றன.

வளர்மதியை பார்த்து அலர்ட்டான போலீஸ்
இந்த நிலையில்தான் முன்னாள் அமைச்சர் வளர்மதி சோதனை நடைபெற்ற இடத்துக்கு வருகை தந்துள்ளார். அவர் சென்னை அதிமுக வட்டாரத்தில் மிகவும் பிரபலமானவர். போராட்டங்களில் துணிந்து இறங்கி கோஷம் போடக் கூடியவர். எனவே வளர்மதியை பார்த்ததும் காவல்துறை அலர்ட் செய்யப்பட்டிருந்தது. உடனடியாக பேரிகாட் தடுப்பு அமைக்கப்பட்டு வளர்மதி என்ன செய்யப் போகிறார் என்று அனைத்து போலீசாரும் உற்றுநோக்கி கொண்டு இருந்தனர். இவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு நடுவே வளர்மதி அங்கு சென்று சேர்ந்ததும் நிலைமையை புரிந்து கொண்டார். உடனே அவராகவே சென்று போலீசாரிடம், நாங்கள் போராட வரவில்லை என்ன நடக்கிறது என்று பார்க்கத்தான் வந்தேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி சென்றுவிட்டார். இதையடுத்து காவல்துறையினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இந்த சம்பவம் தற்போது காவல்துறையினரிடமும், அதிமுக வட்டாரத்திலும் பேசி பகிரப்பட்டு வருகிறது.
Recommended Video

கோவை போராட்டம்
சோதனைகள்நடைபெற்றபோது பெரிய தலைவர்கள் யாரும் வீதிக்கு வந்து போராடவில்லை என்ற போதிலும் கூட, கோவை குனியமுத்தூரில் உள்ள வேலுமணியின் இல்லத்திற்கு வெளியே அதிமுக தொண்டர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் திரளாக வந்து போலீசாருக்கும் தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். சிலர் அங்கு வைத்திருந்த தடுப்புகளை அப்படியே அலேக்காக தூக்கி சென்று வேறு இடத்தில் கொண்டுசென்று வைத்தனர். இருப்பினும் பெரிய அளவுக்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் காவல்துறையினர் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து இருந்தனர்.

சென்னையிலும் போராட்டங்கள்
சென்னையிலும் எம்எல்ஏ விடுதியில் வேலுமணியிடம் விசாரணை நடந்தபோது, அதற்கு வெளியே அதிமுக தொண்டர்கள் குவிந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். ஆனால் அங்கும் பெரிய அளவுக்கு போராட்டம் செல்லாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். நமது அம்மா நாளிதழ் அலுவலகத்திற்கு வெளியே 10 போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர். அங்கு ஒரு சிலர் மட்டும் வருகை தந்து திரும்பி சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications