"மறுபடியும் வருவியா.. எப்ப வருவே?".. ஏக்கத்துடன் காத்திருக்கும் சென்னை..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "மயிலே மயிலே.. உன் தோகை எங்கே..".. இந்தப் பாட்டை கேட்டிருக்கீங்களா.. எப்பக் கேட்டாலும் விசுக்குன்னு உடம்பு ஃபுல்லா ஒரு உணர்வு பரவும்.. அந்தப் பாட்டுக்கு இடையே ஒரு தண்டவாள "சீன்" வரும்.. மஞ்சுளா அந்தப் பக்கம் வருவாங்க.. இந்தப் பக்கம் நம்ம கார்த்தியோட அப்பா சிவக்குமார் வருவார்.. அப்பத்தான் எனக்கு "அந்த" ஞாபகம் வந்தது.

எனக்கு மட்டும் இல்லைங்க.. சென்னையைச் சேர்ந்த நிறையப் பேருக்கு "அந்த" ஞாபகம் வராமல் போகாது.. மறக்க கூடிய விஷயமாங்க அது.. எப்படி மறக்க முடியும்.. நினைக்காமல் இருக்க முடியுமா.. அந்த சத்தம் ஒன்று போதுமே.. உயிருக்குள் ஒரு உற்சாகத்தை உசுப்பி விட்டு ஓடுவதற்கு.

ஆனால் பாருங்க கொஞ்ச காலமாக "அதை"க் காணோம்.. சத்தமே இல்லை.. நிசப்தம் மட்டுமே.. அமைதியை இழுத்துப் போர்த்திக் கொண்டு கப்சிப்பென்று இருக்கும் "அதை"ப் பார்த்து நீண்ட பெருமூச்சுதான் விட முடிகிறது.. ஏக்கத்திலேயே மிச்ச காலமும் போய் விடுமோ என்று அத்தனை பேருக்கும் ஆதங்கம்.. ஆனால் எதுவுமே நம்ம கைல இல்லையே!

ரயிலே ரயிலே

ரயிலே ரயிலே

இப்படித்தான் மஞ்சுளா இன்னொரு பாட்டில் என்ன செய்வாங்கன்னா.. "ஹலோ மேட்டரை சொல்லப் போறியா.. இல்லை அடி வெளுக்கவா".. சரி சரி கோபப்படாதீங்க.. சொல்றேன் சொல்றேன்.. காதலர்கள்தான் மட்டும் கொஞ்சிக்குவாங்களா என்ன.. காதலுடன் நாம் பார்க்கும் எதையுமே கொஞ்சாமல் போக முடியுமா.. அல்லது ஏக்கப்படாமல்தான் கடந்து போய் விட முடியுமா.. அப்படித்தான் இந்த மேட்டரும்.. "சென்னை"யும், அதன் பெரும்பாலான மக்களின் காதலி அல்லது காதலனுமான "மின்சார ரயிலும்"தான் இந்த கதையின் நாயகர்கள்.

எங்களுக்கு அது உயிரு

எங்களுக்கு அது உயிரு

வெளியூர்க்காரர்களுக்குத்தான் அது மின்சார ரயில்.. சென்னைவாசிகள் பலருக்கும் அதுதான் சுவாசம்.. அதன் அனுபவமே தனிதான்.. ஆனால் அந்த காதலைப் பிரிந்து கிட்டத்தட்ட 6 மாதங்களாகி விட்டது.. மீண்டும் அந்த பயண சுகம் கிடைக்குமா என்றே தெரியாமல் குழப்ப நடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் சென்னைவாசிகள்.. ஸ்டேஷன்களைக் கடந்து செல்லும் பலரும்.. என்னப்பா நல்லாருக்கியா என்று மனதுக்குள் கேட்கத் தவறுவதில்லை. சென்னையின் ஒரு அங்கம் இன்று "மெளன ராகம்" பாடிக் கொண்டுள்ளது.

உறவுகள் தொடர் கதை

உறவுகள் தொடர் கதை

சென்னை ரயில்களில் தினசரி பயணித்தவர்களுக்குத்தான் அதன் ஆத்மார்த்தமான உறவு புரியும்.. உண்மையில் சென்னை ரயில்களுடனான உறவு மிகப் பெரியது.. அதிலும் நீண்ட காலம் பயணித்தவர்களுக்கு நிச்சயம் இந்த பிரேக் பெரிய கஷ்டம்தான்.. எதையோ இழந்தது போலத்தான் இருக்கிறது. பலருக்கு மனசளவில் அதைப் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒரு பேருவகை தரக் கூடிய நண்பன்தான் சென்னை ரயில். ரயிலில் ஏறி இடம் பிடித்து வாகாக ஜன்னலோரம் அமர்ந்து கொண்டால் போதும்.. நாம் இறங்கப் போகும் நிலையம் வரை ஒரு குட்டி உலகையே அந்த பெட்டியில் காண முடியும்.

மனிதரில் இத்தனை நிறங்களா

மனிதரில் இத்தனை நிறங்களா

கண் தெரியாத வியாபாரிகள், உடல் ஊனம் கொண்டோரின் பாடல்கள் (பெரும்பாலும் டிஎம்எஸ் பாட்டுதான்.. அம்மம்மா தம்பி என்று நம்பி.. அடிக்கடி கேட்கலாம்), பக்கத்தில் உட்கார்ந்தபடி ஊர்க் கதை உலகக் கதை பேசி அலசி காயப் போடும் சக பயணிகள், திடீரென நாசியை தொட்டுக் கொண்டு செல்லும் அடையாறு மற்றும் கூவத்தின் வாசம்.. சார் கொஞ்சம் தள்ளி உக்காருங்க... அவ்வளவு இடம் இருக்குல்ல என்று நான்கு பேரை நெக்கிக் கொண்டு உட்கார முயலும் ஐந்தாவது பயணி, தூக்கம் கண்ணைத் தட்டித் தடவினாலும் அதையும் தாண்டி அரைகுறையாக விழித்தபடி பக்கத்தில் இருப்பவன் என்ன பேசறான்னு கேட்க காதை நீட்டி ஒட்டுக் கேட்கும் சுபாவம்.. மின்சார ரயில்களின் இயல்பே தனிதான்.

இருண்டு போன உலகம்

இருண்டு போன உலகம்

"5 ரூபாய்தான் சார் வெறும் 5 ரூபாதான்.. உலகமே உங்க கையில்" என்று குட்டி அட்லஸ் புக்கை வைத்துக் கொண்டு டக் டக்கென வியாபாரம் பார்க்கும் அந்த வியாபாரிக்கு மின்சார ரயில்தான் முதலாளி. அந்த ரயிலை மட்டுமே நம்பி அவருக்காக ஒரு குடும்பமே காத்திருக்கும்.. ரயில் ஓடுனாதான் அந்த குடும்பத்தின் வண்டியும் ஓடும்.. அந்த வியாபாரிகளின் வாழ்க்கை இன்று இருண்டு போய்க் கிடக்கிறது. மாற்றுத் திறனாளிகள் பலருக்கும் மிகப் பெரிய நிவாரணம் இந்த ரயில்கள்தான். ஒவ்வொரு நாளும் எத்தனை எத்தனை பேர்.. இதில் பெரும்பாலானவர்கள் பிச்சை கேட்க மாட்டார்கள்.. மாறாக பாடுவார்கள்.. ஏதாவது கையில் கொண்டு வந்து விற்று அதில் சம்பாதிப்பார்கள்.. அவர்களின் நிலை இன்று கேள்விக்குறி.

எதையோ இழந்தது போல

எதையோ இழந்தது போல

அலுவலகத்திற்கும் வீட்டுக்கும் 30 கிலோமீட்டர், 40 கிலோமீட்டர் தூரம் இருந்தால் என்ன .. அதான் ரயில் இருக்கே என்று சந்தோஷத்துடன் தினந்தோறும் காலை ரயிலைப் பிடித்து சந்தோஷமாக பயணித்தபடி.. மாலையில் அதே ரயிலில் உற்சாகத்துடன் காதில் இயர்போனை மாட்டிக் கொண்டு மனசுக்குப் பிடிச்ச பாட்டுக்களைக் கேட்டபடி பயணித்து வந்த பல்லாயிரக்கணக்கானோருக்கு, தொழிலாளர்களுக்கு இன்று இந்த ரயிலின் தரிசனம் கிடைக்காமல் போய் வறண்டு போய்க் கிடக்கிறார்கள்.. என்னமோ ஒன்றை இழந்தது போன்ற உணர்வுதான் பலருக்கும். இப்படி ஒரு தவிப்பை இந்த ரயில் யாருக்குமே இத்தனை காலமாக கொடுத்ததே இல்லை.

கதவோர காற்றை உள் வாங்கி

கதவோர காற்றை உள் வாங்கி

காதலர்களுக்கும், இளைஞர்களுக்கும் இந்த ரயில் சொல்லித் தராத பாடமே இல்லை.. வெளியில் எங்கு சுற்றினாலும் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு ரயில் நிலையத்திற்குள் புகுந்து ரயிலில் ஏறி, எத்தனை சீட் காலியாக கிடந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், கதவுக்கு அருகில் போய் நின்று கொண்டு அப்படியே தலைமுடி பறக்க காற்றை உள்வாங்கிக் கொண்டு உற்சாகமாக பேசியபடி உடல் உரச நெருங்கி நின்று கைபிடித்து காதல் தவழ பயணிக்காவிட்டால் தூக்கம் வராது.. அப்படி ஒரு அற்புதமான உணர்வைக் கொடுக்கக் கூடியவை இந்த ரயில்கள். அவர்களையும் இன்று காய வைத்து விட்டன இந்த ரயில்கள்.

பெண்களின் உற்ற நண்பன்

பெண்களின் உற்ற நண்பன்

காலையில் அரக்கப் பறக்க வீட்டு அமளிகளுக்கு மத்தியில் அலுவலகம் போகும் பல பெண்களுக்கும் இந்த ரயில்கள் மிகப் பெரிய தோழன்.. பஸ்களில் கசக்கிப் பிழியும் கூட்டத்திடமிருந்து பல பெண்களைக் காப்பாற்றும் உற்ற நண்பன் இந்த ரயில்தான். வீட்டு டென்ஷன், ரயில் நிலையம் வரும் டென்ஷன் என எல்லா வகையான டென்ஷனும் ரயிலில் ஏறி இடம் பிடித்து அமர்ந்த அடுத்த சில நொடிகளில் அப்படியே மெல்லக் கரைந்து போகும். கண்ணைத் தழுவும் தூக்கம் எல்லா பயணிகளுக்கும் default. அதிலிருந்து யாருமே தப்ப முடியாது.. நின்று கொண்டு பயணித்தாலும் கூட தூக்கம் வந்தே தீரும். அத்தனை பரபரப்பையும், பதட்டத்தையும் மறந்து கொஞ்சம் நிம்மதி அடைந்து இறங்கப் போகும்போது புத்துணர்வுடன் இறக்கி விட்டு.. "ஹேப்பியா போய்ட்டு வா.. ஈவ்னிங் பார்ப்போம்" என்று அனுப்பி வைக்கும் அன்புத் தோழன் இந்த ரயில்.

மீண்டும் வருமா

மீண்டும் வருமா

எல்லாம் இல்லாமல் போய் விட்டது இந்த கொரோனாவால்.. ஒவ்வொருவரும் ஒருவிதமான ஏக்கத்துடன் தான் இருக்கிறார்கள் இந்த ரயில் இல்லாமல். அத்தனை சவுகரியமான ஒரு வாகனம் இந்த ரயில். சென்னை மக்களுக்கு மின்சார ரயில்கள் மட்டும் இல்லாமல் போனால் என்னாகும் என்பதை இந்த அன்லாக் காலம் மிகத் தெளிவாகவே புரிய வைத்து விட்டது. அத்தனை பாதிப்புகள்.. சிரமங்கள்.. இவையெல்லாவற்றையும் தாண்டி ரயில்கள் மீண்டும் ஓடினால்தான் உண்மையிலேயே சென்னைவாசிகளுக்கு இயல்பு நிலை திரும்பி வரும்.. அந்த அளவுக்கு இந்த ரயில்கள் முக்கியமானவை.. மீண்டும் ரயில் ஓடப் போகும் நாளுக்காக அத்தனை பேரும் காத்திருக்கிறார்கள்.. பார்க்கம்.. ஏக்கம் தீரும் நாள் விரைவில் வருமா என்பதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+