"இருங்க.. சந்திக்க வரேன்".. சசிகலா சொன்ன வார்த்தை.. அலர்ட்டான எடப்பாடி பழனிசாமி.. நச் பிளான் ரெடி
எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் பிளானை முறியடிக்க யோசித்து வருகிறார்
சென்னை: அதிமுகவில் அடுத்தடுத்த பரபரப்புகள் தொற்றிக் கொண்டுள்ளன.. சசிகலாவின் எழுச்சி ஒருபக்கமும், அந்த எழுச்சியை வளரவிடாமல் தடுக்க முயலும் அதிமுகவின் நடவடிக்கைகள் மறுபுறமும் என கட்சிக்குள் அனலடித்து கொண்டிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமியை தன் பக்கம் கொண்டு வரும் அனைத்து முயற்சிகளையும் சசிகலா எடுத்து கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காகவே ஒரு டீமை அனுப்பி அவரிடம் மறைமுக பேச்சுவார்த்தையிலும் ஈடுபட வைத்து வருவதாகவும் தெரிகிறது.
மற்றொருபக்கம், ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து மோதல்களும், அதிருப்திகளும் அதிகமாகி கொண்டே வருகிறது..

எடப்பாடி பழனிசாமி
தன்னை வழக்கம்போல், கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி ஓரங்கட்டி விடுவாரோ, அதனால்தான் ஒற்றை தலைமை தான் வேண்டும் என்ற பேச்சை அவராகவே கட்சிக்குள் கிளப்பி விட்டு வருகிறாரோ? என்பன போன்ற சந்தேகங்கள் ஓபிஎஸ்ஸுக்கு நிறையவே எழுந்துள்ளதால்தான், சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் சேர்க்க வலியுறுத்தி, அவரது சொந்த மாவட்டமான தேனியில் தீர்மானம் நிறைவேற்ற செய்ததாக கிசுகிசுக்கப்பட்டது.

எடப்பாடி முடிவு
மேலும், இதேபோல தீர்மானங்களை பல்வேறு மாவட்டங்களிலும் நிறைவேற்றும்படி, மாவட்ட செயலாளர்களிடம் ஓபிஎஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.. இதை கேள்விப்பட்ட எடப்பாடி தரப்பும் பதிலுக்கு களமிறங்கியது.. "கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அணிவகுப்போம்" என்று மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றும்படி, எடப்பாடியின் ஆதரவாளர்கள், மாவட்ட செயலர்களிடம் சொல்கிறார்களாம்..

மா.செ.க்கள்
இப்படி 2 பேருமே மாறி மாறி சொல்வதால், இவர்களில் யார் பேச்சை கேட்பது என்ற குழப்பம் மாவட்ட செயலர்களுக்குள் ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் யாரை எதிர்ப்பது, யாரை ஏற்பது என்பது தெரியாமல் அமைதி காத்து வருவதாகவும் தகவல்கள் கசிகின்றன.. இதனிடையே, மாஜிக்கள் அடிக்கடி ரகசியமாக சந்தித்து பேசுவதும் தொடர்கிறது.. கடந்த வாரத்தில் 2 முறை இவர்கள் கூடி பேசியுள்ளதாக தெரிகிறது.. முக்கியமாக, வைத்திலிங்கம், செங்கோட்டையன், கேபி முனுசாமி, வேலுமணி, தங்கமணி ஆகியோர் ஓபிஎஸ்ஸுடன் சென்னையில் ரகசியமாக கூடி விவாதித்துள்ளனர்.

ஆதரவு
மற்றொரு பக்கம், சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்கள் அத்தனை பேரும் சென்னையில் அவசர ஆலோசனை ஒன்றை நடத்தி உள்ளனர்.. அதிமுகவின் அதிருப்தி நிர்வாகிகள் அனைவரும் எடப்பாடி தரப்புக்கு எதிராக ஒன்றுகூடி வருவதும் கட்சிக்குள் கலக்கத்தை தந்து வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான் அதிமுக ஒரு முக்கிய முடிவை தற்போது எடுத்துள்ளதாக தெரிகிறது... உட்கட்சி தேர்தலை உடனடியாக நடத்தி முடித்து, கட்சியின் பொதுக்குழுவை கூட்ட அதிமுக மேலிடம் திட்டமிட்டு வருகிறதாம்..

சசிகலா வருகை
இதற்கு காரணம், தென்மண்டலங்களுக்கு சுற்றுப்யணம் செய்த சசிகலா, அடுத்ததாக, தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில், வரும் 20ம் தேதி சசிகலா 2வது கட்ட சுற்றுப் பயணத்தை துவக்க உள்ளார்.. தன் கணவர் நடராஜனின் நினைவு தினத்தையொட்டி, 20ம் தேதி தஞ்சாவூர், விளார் கிராமத்திற்கு சென்று, அவரது நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி செலுத்த உள்ளார்.. அங்கிருந்து அப்படியே, ஏற்கனவே அவர் சொன்னபடி, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை கட்டாயம் சந்திக்கக்கூடும், இதனால் அதிமுகவின் கவனம் மொத்தமாக தன்மீது திரும்பும் என்று சசிகலா கணக்கு போட்டுள்ளாராம்.

கணக்கு
அதிலும், எடப்பாடி தொகுதியான சேலத்தில் சசிகலாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.. இதை முறியடிக்கதான், எடப்பாடி தரப்பு உட்கட்சி தேர்தல் என்ற அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது.. உட்கட்சி தேர்தலை இந்த மாதத்திற்குள் முடித்து, அடுத்த மாதம் பொதுக்குழுவை கூட்டிவிடலாம் என்பதே இரட்டை தலைமைகளின் தற்போதைய பிளானாக உள்ளதாம்.

அதிமுக முடிவு
''தொண்டர்கள் என்னை சந்திப்பார்கள்.,, பிள்ளைகளைச் சந்திக்க போகிறேன்" என்று சசிகலா தன்னுடைய அறிக்கையில் இந்த முறை சொல்லி இருந்ததும் இதற்கு மற்றொரு காரணம்.. இதனால் எந்த நேரமும் சசிகலா தங்களை நேரில் சந்திக்க வீட்டுக்கு வருவார், கண்டிப்பாக நலம் விசாரிப்பார் என்று அதிருப்தியாளர்கள் காத்து கிடக்கிறார்கள்.. மேலும், ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி இணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டு, அனைத்து கிராமங்களிலும், கிளை செயலர் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், பேரூராட்சி, ஒன்றிய, நகர, மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் மட்டும் இன்னும் நடத்தப்படாமல் உள்ளது..
Recommended Video

தேர்தல்
இதைதான் சசிகலாவின் சுற்றுப்பயண நேரத்தில் பயன்படுத்தி கொள்ளவும் அதிமுக யோசித்து வருகிறது.. ஒருவேளை சசிகலாவை வரவேற்க சென்றால், அவர்களையும் கட்சியில் இருந்து நீக்குவதுடன், அவர்களால் உட்கட்சி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற கடிவாளத்தையும் அதிமுக போடப்போகிறதாம்.. ஆக மொத்தம் சசிகலா வருகைக்கு செக் வைக்கும் வேலையில் அதிமுக மும்முரமாக இறங்கி உள்ளது..!












Click it and Unblock the Notifications