தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் பதவி ஏற்பது எப்போது.. பரபரப்பு தகவல்
சென்னை: தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் வரும் செப்டம்பர் 8ம் தேதி பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
2014ம் ஆண்டு தமிழக பாஜக துணை தலைவராக இருந்தார் தமிழிசை சௌந்திரராஜன். அப்போது பாஜக மாநில தலைவராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றதால் தமிழிசை சௌந்திரராஜன் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

கடந்த 5 ஆண்டுகளாக பாஜக தலைவராக செயல்பட்டு வந்த தமிழிசை சௌந்திரராஜனை மத்திய அரசு தெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்துள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மருத்துவராக இருந்த தமிழிசை, தற்போது ஆளுநராக உயர்ந்துள்ளார். ஆளுநர் பதவியில் நியமனம் செய்யப்பட்ட காரணத்தால் அவர் பாஜக கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளையும் ராஜினாமா செய்தார்.
ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து வரும் 5ம் தேதி தமிழிசை டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அங்கு தலைவர்களை சந்திக்கும் அவர், வரும் 7ம் தேதி தமிழகம் திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகு 8ம் தேதி தெலுங்கானா செல்லும் தமிழிசை சவுந்திரராஜன் அன்றே ஆளுநராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வமான எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி கடந்த 2014 ம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்து வருகிறது.












Click it and Unblock the Notifications