மிஸ் ஆகும் 2 தொகுதி? திமுக கூட்டணியில் காங்கிரஸ்க்கு எந்தெந்த தொகுதிகள்.. ஒப்பந்தம் இன்று கையெழுத்து
சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 9 லோக்சபா தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று திமுக-காங்கிரஸ் இடையே கையெழுத்தாக உள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த முறை வென்ற 2 தொகுதிகள் இந்த முறை அக்கட்சிக்கு ஒதுக்கப்படாது என்று கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 9 லோக்சபா தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நாளை திமுக - காங்கிரஸ் இடையே கையெழுத்தாக உள்ளது. இந்நிலையில் தான் தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட உள்ள தொகுதிகளின் பட்டியல் குறித்த முக்கிய விபரம் வெளியாகி உள்ளது.

லோக்சபா தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது. இன்று பிற்பகல் 3 மணியளவில் தேர்தல் ஆணையம் தேதியை அறிவிக்க உள்ளதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது .அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வு, தொகுதி பங்கீட்டு என மும்முரம் காட்டி வருகின்றன. தேர்தல் தேதிக்கு முன்பாக பரபரப்பை எட்டிய தேர்தல் களம் இன்று முதல் ஹை ஸ்பீடில் பறக்க உள்ளது. பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலையே வெளியிட்டுள்ளன.
திமுக காங்கிரஸ் தொகுதி பங்கீடு: தமிழகத்தை பொறுத்தவரை வரும் லோக்சபா தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவ உள்ளது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. அதிமுக, பாஜகவை பொறுத்தமட்டில் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது முழுமையாக முடிவடையவில்லை. இழுபறி நீடித்து வருகிறது. மாறாக திமுக கூட்டணியில் கட்சிகளுடனான கூட்டணி பேச்சுவார்த்தை என்பது முடிவடைந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன.
திமுக கூட்டணியில் இன்னும் மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் 10 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது தமிழகத்தில் 9 லோக்சபா தொகுதிகளும், புதுச்சேரி தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது குறித்து இரு கட்சிகளும் தீவிர ஆலோசனை நடத்தின.
எந்தெந்த தொகுதிகள்: இந்த நிலையில், திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக உள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை போட்டியிட்ட 7 இடங்களை மீண்டும் வழங்க திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, கன்னியாகுமரி, விருதுநகர், ஆரணி, தேனி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் உள்ளிட்ட 7 தொகுதிகள் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
திருச்சி, கரூர் யாருக்கு?: அதேபோல் கடந்த முறை காங்கிரஸ் வென்ற திருச்சி, கரூர் தொகுதிகளுக்கு பதில் வேறு 2 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. அதன்படி திருச்சிக்கு பதில் மயிலாடுதுறையும், கரூருக்கு பதில் ஈரோடு தொகுதியையும் காங்கிரஸ் கட்சிக்கு வழங்க திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், திமுக- காங்கிரஸ் இடையே இன்று தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. தொகுதி ஒப்பந்தம் கையெழுத்த ஆன பிறகு வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்க திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications