தீவிர புயலான அசானி.. அடுத்த 48 மணி நேரம் ரொம்ப முக்கியம்.. எந்தெந்த மாவட்டங்களில் மழை இருக்கு?
சென்னை: தீவிர புயலாக உள்ள அசானி புயல் காரணமாக, தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தொடங்கிய நிலையில், இது வரும் மே 28ஆம் தேதி வரை தொடர உள்ளது.
இதன் காரணமாக மாநிலத்தில் பல இடங்களில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

அசானி புயல்
இந்தச் சூழலில் வங்கக் கடல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. அந்தமான் கடல் பகுதியில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதைத் தொடர்ந்து அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு "அசானி" என்று பெயரிடப்பட்டுள்ளது.

எங்கே
நேற்று தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அசானி புயல் நேற்று (மே 8) மாலை தீவிர புயலாக வலுப்பெற்று, தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவியது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (மே 9) காலை அளவில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இப்போது இந்த புயல் மத்திய மேற்கு மற்றும் அதனை ஓட்டிய தென் கிழக்கு வங்கக் கடலில் புயல் மையம் கொண்டுள்ளது.

புதன் அதிகாலை கரையைக் கடக்கும்
கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 25 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் இந்த அசானி புயலின் கண் பகுதி, இன்று மதிய நிலவரப்படி சென்னையில் இருந்து 546 கிமீ தொலைவில். இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (மே 10) வட ஆந்திரா- ஒரிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவக் கூடும். அதன்பிறகு வடக்கு-வடகிழக்கு திசையில் ஒரிசா கடற்கரை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதியை நோக்கி நகரக் கூடும். இது அடுத்த 36 மணி நேரத்தில் படிப்படியாகப் புயலாக வலுவிழக்கக்கூடும். இந்தப் புயல் வரும் புதன்கிழமை அதிகாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழை
இதன் காரணமாக ஒரிசா கடலோர மாவட்டங்களில் நாளை முதல் 3 நாட்களுக்கு மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல வடகடலோர ஆந்திர பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் கணிசமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. புயல் நகரும் திசை, மற்றும் காற்றின் திசையில் ஏற்படும் மாற்றம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு
மேலும், இன்று (மே 9) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல நாளை (மே 10) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது மழை பெய்யக்கூடும்.












Click it and Unblock the Notifications