சுற்றி கூச்சல் போட்ட அதிமுக ஆட்கள்! கதவை இழுத்து அதிரடியாக சீல் வைத்த "சாய் வர்தினி".. யார் இவர்?
சென்னை: அதிமுக அலுவலகத்திற்கு வருவாய் துறை மூலம் சீல் வைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக அதிமுக அலுவலகம் வருவாய் துறை அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
Recommended Video
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழுவில் இன்று தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இன்று வந்தார்.
இந்த நிலையில் அதிமுக அலுவலகத்திற்கு வெளியே ஓபிஎஸ் - எடப்பாடி ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

மோதல் அபாயம்
இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகம் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி ஆதரவாளர்களும் அங்கு போராட்டம் செய்தனர். இதன் காரணமாக அங்கு இரண்டு தரப்பிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இரண்டு தரப்பும் மாறி மாறி கல் வீசி தாக்கிக்கொண்டனர். இதனால் அங்கு பெரும் கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார், போக்குவரத்து போலீசார் மற்றும் அதிரடி படை போலீசார் ஆகியோர் களமிறக்கப்பட்டனர்.

சீல் வாய்ப்பு
இதையடுத்து பாதுகாப்பு கருதி அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்க முடிவு எடுக்கப்பட்டது. அதிமுக அலுவலகம் வெளியே சட்ட ஒழுங்கு பிரச்சனை இருப்பதாலும், அதிமுக யாருக்கு சொந்தம் என்ற மோதல் இருப்பதாலும், ஒரே அடியாக பாதுகாப்பு கருதி அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்க முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் அங்கே வந்தனர். ஆனால் இவர்களை அனுமதிக்காமல் அதிமுக நிர்வாகிகள் கோஷம் எழுப்பினார்கள்.

கோஷம்
அதிமுக அலுவலகத்தை சீல் வைக்க கூடாது என்று கோஷம் எழுப்பி எடப்பாடி ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். வருவாய் துறை அலுவலர்களை தடுக்கும் விதமாக எடப்பாடி ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினார்கள். ஆனால் போலீசார் குவிக்கப்பட்டு வருவாய் துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. தென் சென்னை கோட்டாச்சியர் சாய் வர்தினிதான் சீல் வைக்க அதிமுக அலுவலகம் வந்தார்.

ஓபிஎஸ்
அவருடன் மயிலாப்பூர் வட்டாச்சியர் நந்தினி இருந்தார். இவர்களுக்கு தென் சென்னை காவல்துறை இணை ஆணையர் பிரபாகர் தலைமையில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. சாய் வர்தினி தலைமையில்தான் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இவர் தென் சென்னை கோட்டாச்சியர். உள்ளே வந்த சாய் வர்தினி அங்கு இருந்த ஓபிஎஸ்ஸை வெளியேறும் படி சொன்னார். பின்னர் மேல் மாடி சென்று அங்கு இருந்த நிர்வாகிகளை வெளியேற சொன்னார்.

சீல் வைத்த சாய் வர்தினி
அவர்கள் வெளியேற மறுத்த நிலையில், போலீசாரை அழைத்து அவர்களை வெளியேற்றும்படி சாய் வர்தினி கோரிக்கை விடுத்தார். இதையடுத்து போலீசார் மூலம் அதிமுக அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகள் எல்லோரும் வெளியேற்றப்பட்டனர். மேல் மாடிக்கு முதலில் சீல் வைக்கப்பட்டது. மேல் மாடி கதவுகளை இழுத்த சாய் வர்தினி சீல் வைத்தார். பின்னர் கீழ் கதவிற்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர். அதில் சாய் வர்தினி சீல் வைத்தார்.

சாலை முடக்கம்
இந்த நிலையில் வெளியே கேட்டும் சீல் வைக்கப்பட்டது. தற்போது அவ்வை சண்முகம் சாலையில் இருக்கும் அலுவலகம் மட்டுமின்றி.. அந்த சாலையும் மொத்தமாக முடக்கப்பட்டுள்ளது. இனி உள்ளே நிர்வாகிகள் யாரும் செல்ல முடியாது. ஏதாவது பைல்ஸ்களை எடுக்க வேண்டும் என்றாலும் கூட வருவாய் துறை அதிகாரிகளின் அனுமதி தேவை. ஆனால் வருவாய் துறை அதிகாரிகள் நிர்வாகிகளை யாரையும் அனுமதிக்க வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications