அரசு பள்ளியின் ஆன்மீக நிகழ்ச்சி? மகாவிஷ்ணுவுக்கு அனுமதி அளித்தது ஏன்! தலைமை ஆசிரியை பரபர
சென்னை: அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் மகா விஷ்ணு என்பவர் பிற்போக்குத்தனமான கருத்துகளைக் கூறியது சர்ச்சையான நிலையில், இந்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரசுப் பள்ளியில் ஆன்மீக நிகழ்ச்சிக்கு எப்படி அனுமதி அளிக்கலாம் எனப் பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் நேற்றைய தினம் மகா விஷ்ணு என்பவர் மாணவ- மாணவிகளிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசிய கருத்துகள் சர்ச்சையானது.

மாணவ மாணவிகளிடம் அவர் ஆன்மீகம், பாவ புண்ணியம் குறித்து எல்லாம் பேசியதாகத் தெரிகிறது. நம்மை மீறி ஒரு சக்தி இருக்கிறது, யோக தீட்சை தருகிறேன் என்றெல்லாம் அவர் பேசியதாகத் தெரிகிறது.
சர்ச்சை: மேலும், முன் ஜென்மத்தில் செய்த பாவம் காரணமாகவே ஏழையாக மாற்றுத்திறனாளிகளாகப் பிறப்பதாகவும் எல்லாம் அவர் கூறியது சர்ச்சையானது. அங்கிருந்த அனைத்து ஆசிரியர்களும் இதைக் கேட்டு அமைதியாக இருந்த நிலையில், தமிழ் ஆசிரியரான சங்கர் என்பவர் மட்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். பள்ளியில் வந்து மறு பிறவி, பாவ புண்ணியம் குறித்தெல்லாம் ஏன் பேசுகிறீர்கள் என அவர் கேள்வி எழுப்பினர். அப்போது மகா விஷ்ணு அத்துமீறி வாக்குவாதம் செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
இருப்பினும், மகா விஷ்ணு தனது பேச்சை தொடர்ந்தார். "ஆசிரியர்கள் இத்தனை காலம் சொல்லித் தராததை நான் சொல்லித் தருகிறேன்.. நியாயப்படி நீங்கள் நன்றி சொல்ல வேண்டும். ஆனால், வாக்குவாதம் செய்கிறீர்கள்" என்றெல்லாம் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பரவி நிலையில், இது மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது.
கேள்வி: அரசுப் பள்ளிகளில் எப்படி இதுபோன்ற நிகழ்ச்சிகளை எப்படி அனுமதிக்கலாம் என்று கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர். இதற்கிடையே அதே பள்ளியில் இன்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அன்பில் மகேஷ், இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இதற்கிடையே சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அதேநேரம் அரசுப் பள்ளியில் ஆன்மீக நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது எப்படி என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இது பெரிய சர்ச்சையான நிலையில், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரே இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
பதில்: மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் நிகழ்ச்சியாகவே இது நடத்தப்பட்டதாகத் தெரிவித்த அவர், இது ஆன்மீக நிகழ்ச்சி இல்லை என்று திட்டவட்டமாகக் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இது விழிப்புணர்வு நிகழ்ச்சி தான்.. அது ஆன்மீக நிகழ்ச்சி இல்லை.. பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சியாகவே அதை நடத்தினோம்" என்றார்.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், பள்ளிக்கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் முதற்கட்ட நடவடிக்கையாக அசோக் நகர் பள்ளியின் தலைமை ஆசிரியர், திருவள்ளூர் கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், துறை ரீதியான விசாரணையைப் பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வரும் நிலையில், போலீசாரும் பள்ளி மற்றும் மகாவிஷ்ணுவுக்கு நடத்தி வரும் அறக்கட்டளையில் விசாரணை நடத்தி வருகின்றனர்












Click it and Unblock the Notifications