எம்ஜிஆர் கொடுத்த பட்டம்.. யார் இந்த "பயில்வான்" ரங்கநாதன்? போலீசாக விரும்பியவர் இப்படி பேசலாமா சார்?
சென்னை: சினிமா திரைப்படங்கள் பலவற்றில் நடித்திருந்தாலும் அண்மை காலங்களில் திரை பிரபலங்கள் குறித்த தனது சர்ச்சைக்குரிய கருத்துக்களால் பிரபலமாகி இருக்கும் பயில்வான் ரங்கநாதன் குறித்து இந்த பதிவில் காண்போம்.
80கள், 90களில் சினிமாக்களில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்கள், வில்லன் கதாப்பாத்திரங்களில் நடித்த பல துணை நடிகர்கள் இன்று காணாமல்போய்விட்டனர். ஆனால், இந்த தலைமுறையினர் மத்தியிலும் பிரபலமான முகமாக அறியப்படுபவர் பயில்வான் ரங்கநாதன். அதற்கு முக்கிய காரணம் அவர் யூடியூபில் பேசும் தகவல்கள். செய்தி சேனல்கள் வருவதற்கு முன்பாகவே நாளிதழ்கள், வார இதழ்களில் கிசுகிசு என்ற பக்கத்தில் நடிகர், நடிகைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி வந்தன.
இதற்கென்று தனி வாசகர் வட்டமும் இருந்தது. இன்று அந்த தகவல்கள் யூடியூப் சேனல்களிலும் இணையதளங்களிலும் வரத் தொடங்கிவிட்டன. தலைமுறைகள் கடந்தாலும் சினிமாக்கள் மற்றும் திரைக்கலைஞர்கள் குறித்த கிசுகிசுக்களுக்கு இருக்கும் மவுசு குறையாததை புரிந்துகொண்ட பயில்வான் ரங்கநாதன் பல்வேறு யூடியூப் சேனல்களிலும், தொலைக்காட்சிகளிலும் நடிகர் நடிகைகளின் அந்தரங்க தகவல்கள் குறித்தும் பேசி வருகிறார். இதற்காகவே அவர் கடும் விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறார்.

யார் இந்த பயில்வான் ரங்கநாதன்?
யூடியூபில் சர்ச்சை பேச்சாளராக அறியப்படும் பயில்வான் ரங்கநாதன் தூத்துக்குடி மாவட்டம் சிறுதொண்டநல்லூரை சேர்ந்தவர். 1944 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி பிறந்த பயில்வான் ரங்கநாதனுக்கு தற்போது 78 வயதாகிறது. பள்ளி, கல்லூரி படிப்புகளை தூத்துக்குடியிலேயே முடித்த அவருக்கு காவல்துறையில் சேர வேண்டும் என்பதே விருப்பமாம். பளுதூக்குதலில் ஆர்வம் கொண்ட பயில்வான், மிஸ்டர் சென்னை பட்டத்தை இளைஞராக இருந்தபோது பெற்று இருக்கிறார்.

எம்.ஜி.ஆர். கொடுத்த பயில்வான் பட்டம்
சென்னை வந்து பத்திரிகையாளராக பணியை தொடங்கிய பயில்வான் ரங்கநாதன் 1973 ஆம் ஆண்டு அரங்கேற்றம் படத்துக்காக விமர்சனம் எழுத் தொடங்கினார். பயில்வான் என்று அழைக்கப்படும் இவர் குத்துச்சண்டை, மல்யுத்த போட்டிகளில் வெற்றிபெற்றவர் கிடையாது. ஆனாலும் இவரது உடற்கட்டை பார்த்து முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பயில்வான் என்ற பட்டத்தை ரங்கநாதனுக்கு கொடுத்தாராம். அன்றிலிருந்து இவரது பெயருடன் பயில்வான் என்ற பட்டமும் ஒட்டிக்கொண்டது.

சினிமா நடிகர்
சினிமா பத்திரிகையாளராக பணிபுரிந்ததால் திரைபிரபலங்களுடன் நெருக்கம் ஏற்படவே பயில்வானுக்கு நடிகராகும் வாய்ப்பு தேடி வந்தது. 1983 ஆம் ஆண்டு வெளியான பாக்கியராஜின் முந்தானை முடிச்சு படத்தில் வைத்தியராக நடித்து சினிமாவில் அறிமுகம் கொடுத்த இவர், அண்மையில் வெளியான பெஸ்டி திரைப்படம் வரை பல படங்களில் நடித்து இருக்கிறார். ஆவாரம் பூ படத்தில் பட்டத்துக்கு ஏற்ப பயில்வானாகவும், ஜெய்ஹிந்த் படத்தில் போலீசாகவும் இவர் நடித்துள்ளார்.

போலீஸ் கதாப்பாத்திரம்
ஜெய் ஹிந்த் படத்தை தொடர்ந்து தெனாலி, வில்லன், பகவதி, எவனோ ஒருவன், பெஸ்டி ஆகிய பல படங்களில் போலீசாக நடித்து இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். தொடக்கத்தில் வில்லன் கதாப்பாத்திரங்களில் நடித்த இவர் பின்னர் நகைச்சுவை காட்சிகளில் சீரியசான கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். சின்ன பாப்பா பெரிய பாப்பா, சின்ன தம்பி, பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் பயில்வான் நடித்து இருக்கிறார்.

சர்ச்சை கருத்துக்கள்
சினிமாக்களில் நடித்தாலும் சினிமா பிரபலங்கள் குறித்து இவர் தெரிவிக்கும் கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. சில மாதங்கள் முன் நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ஆகியோர் பிரிவதாக அறிவித்தபோது பயில்வான் ரங்கநாதன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனுஷ், ஐஸ்வர்யா, அனிருத் உள்ளிட்டோர் குறித்து எல்லைமீறி முகம் சுளிக்கும் வகையில் அவர் சில தகவல்களை பகிர்ந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். பயில்வான் ரங்கநாதனை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் அப்போது வலுத்தன.

கடும் எதிர்ப்பு
இதேபோல் நடிகை ராதிகா சரத்குமார் குறித்தும் பயில்வான் ரங்கநாதன் ஒரு யூடியூப் சேனலில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்காக அவரை சென்னை கடற்கரையில் ராதிகா நேரிலேயே கடுமையாக திட்டியதாக செய்திகள் வெளியாகின. அண்மையில் வெளியான இரவின் நிகழ் படத்தில் நடித்த நடிகை ரேகா நாயர் குறித்து பேசியதற்காக, பயில்வான் ரங்கநாதனிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகளும் வெளியாகின. இதேபோல் பாடகி சுசித்ராவும் பயில்வான் ரங்கநாதனை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

ஆதாரமற்ற தகவல்கள்
பயில்வான் ரங்கநாதன் கூறும் திரைபிரபலங்கள் குறித்த பெரும்பாலான தனிப்பட்ட தகவல்கள் ஆதாரமற்ற கற்பனைக் கதைகள் என்றே பலரும் விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக ஆதாரம் கேட்டால், பெரும்பாலும் பேச்சை மாற்றுவதிலும், அல்லது ஊடகத்தில் வெளியான துணுக்கு செய்தியையுமே அவர் கொடுத்து வருகிறார். இதுபோன்ற தகவல்களை ஏன் பேசுகிறீர்கள் என்று கேட்டால் நடிகைகள் அணியும் ஆடைகள் குறித்து விமர்சித்து மக்கள் பார்ப்பதால் சொல்கிறேன் என்றே அவர் விளக்கமளிக்கிறார்.

பிற்போக்கு கருத்துக்கள்
பயில்வான் ரங்கநாதனின் சினிமா விமர்சனங்கள் பெரும்பாலும் பிற்போக்குத்தனத்தை ஊக்குவிப்பதாகவே இருப்பதாக திரைபிரபலங்களும், முற்போக்காளர்களும், பெண்ணியவாதிகளும் குற்றம்சாட்டுகின்றனர். யூடியூப் வீடியோக்கள் மட்டுமல்லாது, செய்தியாளர் சந்திப்புகளிலும் பயில்வான் ரங்கநாதன் எழுப்பும் கேள்விகளும் சினிமா பிரபலங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும்.

செய்தியாளர் சந்திப்புகள்
அண்மையில் சீதா ராமம் திரைப்படத்துக்கான செய்தியாளர் சந்திப்புக்கு வந்த துல்கர் சல்மானிடம், சீதா ராமனா? சீதா ராமமா? சீதா நாமமா? ராமம் என்றால் என்ன அர்த்தம் என்று எனக்கு தெரிஞ்சாகனும் என்று பயில்வான் கேட்டார். அது இயக்குநருக்குதான் தெரியும் என சொன்ன துல்கர் சல்மானிடம், தெரியாமலேயே நடித்துவிட்டீர்களா என்று சற்று அதிகாரமாக பயில்வான் கேட்டதால் அதிர்ச்சியடைந்தார். இதேபோல் கவுதம் மேனன் உள்ளிட்ட பலருடன் பயில்வான் ரங்கநாதன் செய்தியாளர்கள் சந்திப்பிலேயே வாக்குவாதம் செய்து இருக்கிறார்.

பத்திரிகையாளர் பயில்வான்
எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் பயில்வான் ரங்கநாதன், தனது கருத்துக்களை மாற்றிக்கொள்வதாக இல்லை. சினிமாவில் ரூ.10,000 சம்பாதிப்பதைவிட பத்திரிகையாளராக ரூ.1,000 சம்பாதிப்பேன் என்று கூறும் பயில்வான் ரங்கநாதன் நேர்மையான விமர்சகன் என்ற அடிப்படையில் நிம்மதியாக இருப்பதாக தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார். பத்திரிகை துறை மீது இத்தனை பற்று வைத்திருக்கும் அவர், பத்திரிகை தர்மத்தை கடைபிடித்து திரைப்பிரபலங்களையும் சக மனிதர்களாக மதித்து அவர்களின் அந்தரங்க தனிப்பட்ட வாழ்வில் தலையிடாமல் இருந்தால் அவர்களும் நிம்மதியாக இருப்பார்கள்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications