Dharmar: ஓபிஎஸ்ஸை தனிமரமாக்கியவர்! அதிமுகவில் ஒற்றை கோஷத்தின் ஆரம்ப புள்ளி! யார் இந்த தருமர்?
சென்னை: அதிமுக தலைமை கழகத்திற்கு சென்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டாரே ஓபிஎஸ் ஆதரவாளர் தருமர்! அவர் யார் என்பது தெரியுமா? இன்று தருமரால்தான் ஓபிஎஸ் தனித்து விடப்பட்டுள்ளார் என்ற பிளாஷ்பேக் குறித்து பார்ப்போம்.
"உங்க தர்மயுத்தத்தில் நாங்க இருக்கோம், நீங்கள் தயாராகுங்கள்"னு உசுப்பேற்றிவிட்டே ஓபிஎஸ்ஸை இன்று பலரும் தனிமரமாக்கிவிட்டனர். டிடிவி தினகரன், செங்கோட்டையன், வைத்திலிங்கம் உள்ளிட்டோரை ஓபிஎஸ் நம்பினார். ஆனால் அவர்கள் எல்லாம் இன்று அவரை கைவிட்டுவிட்டனர்.

இதற்கெல்லாம் மேல் அதனது தீவிர ஆதரவாளர் என ஓபிஎஸ் திடமாக நம்பிய தருமர் எம்பி, நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இது ஓபிஎஸ்ஸுக்கு கடும் அதிர்ச்சி.
இரட்டை தலைமை
காரணம்! அதிமுகவில் இரட்டை தலைமைகளாக ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிசாமியும் பதவியில் இருந்த போது 2022ஆம் ஆண்டு அதிமுகவுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவிகள் 2 காலியாக இருந்தனர். இந்த 2 சீட்டுகளுக்காக நிறைய பேர் இரு தலைவர்களையும் நெருக்கினர்.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ்ஸிடமும் , இபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ்ஸிடமும் தங்களுக்கே அந்த ராஜ்யசபா சீட்டை ஒதுக்கித் தருமாறு கேட்டனர். அப்போதுதான் தருமர் என்பவர் சீனுக்குள் வந்தார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
முட்டி மோதியவர்கள்
தமிழக ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் 2022-ஆம் ஆண்டு மே மாதத்துடன் முடிவடைந்தது. புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் அறிவிப்புகள் வெளியாகின. அப்போதைய சூழலில், அதிமுக சார்பில் இரண்டு இடங்களுக்குப் போட்டியிட வாய்ப்பிருந்தது.
அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தொடங்கி, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த பல முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் என பலர் ராஜ்யசபா வேட்பாளர் பதவிக்காகக் கட்சித் தலைமையிடம் கோரிக்கை வைத்தனர்.
தருமர் யார்
அப்போது, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பொறுப்பு வகித்தனர். ராஜ்யசபா பதவிக்கு ஜெயக்குமார், சி.வி. சண்முகம் ஆகிய இருவருக்கே ஆதரவு வலுத்தது. இவர்கள் இருவரும் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓபிஎஸ் மறுத்தார்
ஆனால், ஒருங்கிணைப்பாளராக பொறுப்பில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் இதை ஏற்க மறுத்தார். தனது ஆதரவாளர், அதுவும் எளிய பின்னணியில் இருந்து வந்தவர் ராஜ்யசபா உறுப்பினராக வேண்டுமென்றார். இறுதியில், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரில் ஆளுக்கு ஒரு வேட்பாளர் என்ற சமரச முடிவு எட்டப்பட்டது.
சிவி சண்முகம்
எடப்பாடி பழனிசாமி தரப்பில் சி.வி. சண்முகம், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தர்மர் என முடிவானது. ராமநாதபுரம் மாவட்ட அதிமுக ஒன்றியச் செயலாளராக இருந்த தர்மரின் பெயர், வேட்பாளர் பட்டியலில் வெளியான போது அதிமுக தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. ஏன் ராமநாதபுரம் மக்களுக்கே அதிர்ச்சிதான்!
மூத்த தலைவர்கள்
மூத்த தலைவர்கள் பலர் இருக்கையில், தனது ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி ஓ.பன்னீர்செல்வம் தர்மருக்கு பதவி பெற்றுத் தந்தது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இது ஓ.பி.எஸ். மீது எதிர்ப்பு அலை உருவாகி, அதிமுக பிளவுக்கு வலுவான முதல் புள்ளியாயிற்று.
ஆரம்பப் புள்ளி
முடிவெடுப்பதில் குழப்பம், தனித்தனி அறிக்கை, ஆதரவாளர் முழக்கம் என இரட்டைத் தலைமை சரிவராது என்பதை கட்சி உணர்ந்தது. இதுவே ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கும் சூழலை உருவாக்கியது. எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் ஏற்பட்ட மோதலுக்கு பல காரணங்கள் இருந்தாலும், தர்மரே மோதலின் தொடக்கப்புள்ளியாக அமைந்தார்.
வேதனை
அதே தர்மர் தற்போது எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று இணைந்துள்ளார். இதனால் ஓபிஎஸ் கடும் வேதனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. தன்னிடம் ஆதரவு கேட்டு பல ஆதாயங்களை அடையும் சிலர் இன்று நம்மை நட்டாற்றில் விட்டுவிட்டார்களே என தன்னிடம் உள்ள சொற்ப ஆதரவாளர்களிடம் ஓபிஎஸ் புலம்பி வருவதாக சொல்லப்படுகிறது. தருமரால்தான் ஓபிஎஸ்ஸுக்கு பிரச்சினை என்பது அனைவருக்கும் தெரிந்த போது, தருமருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அப்படியிருந்தும் ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பது எந்த விதத்தில் நியாயம் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் விமர்சனங்களை முன் வைக்கிறார்கள்.
இன்னும் தேர்தல் தேதி அறிவிக்காமலேயே இப்படி! அறிவித்துவிட்டால் எத்தனை அதிர்ச்சிகளை நாம் சந்திக்க வேண்டியிருக்குமோ என தெரியவில்லை.












Click it and Unblock the Notifications