2 சர்வதேச விருதுகள், கொடூரர்களுக்கு என்கவுண்டர், திருந்தியவர்களுக்கு தாயுள்ளம்.. அவர்தான் திரிபாதி
Recommended Video
சென்னை: தமிழகத்தின், சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு விஷயத்தில் கடும் நடவடிக்கை எடுக்க கூடியவர் என்று பெயர் பெற்றவர் இவர்.
தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில், தமிழக தலைமைச் செயலாளராக கே.சண்முகமும், சட்டம்-ஒழுங்கு பிரிவு டிஜிபியாக திரிபாதியும் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது, சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவராக இருக்கும், திரிபாதி, சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

திருச்சி கமிஷனர்
ஒடிசா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட திரிபாதி, டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், பட்டப்படிப்பு, முடித்து, முனைவர் பட்டத்திற்கு பிறகு பேராசிரியராக தேர்வானவர். தனது மூன்றாவது முயற்சியில், 1985ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றார். திருச்சி மாநகராட்சி போலீஸ் கமிஷனராகத்தான் முதன் முதலாக இவர் பணிக்கு அமர்த்தப்பட்டார்.

அதிரடி திட்டங்கள்
திருச்சியில் பதவியேற்றதுமே, அதிரடி திட்டங்களை அமல்படுத்தினார் திரிபாதி. குடிசைகளை தத்தெடுப்பது, புகார் பெட்டி திட்டங்கள் போன்றவை, இவருக்கு இன்றும் கூட நற்பெயர் ஈட்டித் தரும் திட்டங்களாகும். தமிழகத்தில் இதுவரை 9 மாவட்டங்களில் எஸ்பியாக பதவி வகித்த அனுபவம் உள்ளவர்.

சென்னையில் என்கவுண்டர்கள்
2013ம் ஆண்டு, அதிமுக ஆட்சியின்போது, சென்னை போலீஸ் கமிஷனராக அவர், பதவி வகித்துள்ளார். வேளச்சேரி வங்கி கொள்ளையர்கள் 5 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டது இவர் கமிஷனராக பதவி வகித்தபோதுதான். பிரபல ரவுடி வீரமணி என்கவுண்டரிலும் திரிபாதி முக்கிய பங்கு வகித்ததாக சொல்லப்படுவதுண்டு.

அன்பு முகம்
சிபிசிஐடி ஐஜி, பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி, சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபியாகவும் திரிபாதி பதவி வகித்த அனுபவம் உள்ளவர். கொடூரர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க துணியும் திரிபாதி, குற்றம் புரிந்தோர் திருந்தவும் நல் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து அன்பு காட்டியவர். சிறைத்துறை தலைவராக திரிபாதி பதவி வகித்தபோது, கைதிகளுக்கு சமூக அந்தஸ்து பெற்றுத் தர முயற்சி செய்தார். சிறையில் சமூக கல்லூரி அமைத்தார். கைதிகளை தத்தெடுக்கும் திட்டம் கொண்டு வந்தார்.

இரு சர்வதேச விருதுகள்
இரு சர்வதேச விருதுகள் பெற்ற முதல் காவல்துறை அதிகாரி என்ற பெருமையும் திரிபாதிக்கு உண்டு. ஸ்காட்லாந்து, பொது நிர்வாகம்-நிர்வாகம் காமன்வெல்த் சங்கத்தின், தங்கப் பதக்கம், வாஷிங்டன் சர்வதேச காவல்த்துறை சங்கத்தின், சமூக காவலர் விருது ஆகியவற்றை பெற்ற ஒரே இந்திய போலீஸ் அதிகாரி திரிபாதி மட்டுமே. தமிழக டிஜிபியாக திரிபாதி பதவிக்கு வந்துள்ள நிலையில், இனிமேல் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மேம்படும் என்று பலரும், நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications