ஆமா.. நம்மகிட்டதான் இரட்டை இலை இருக்கே.. டெபாசிட் போச்சு? தேனி நிர்வாகிகளிடம் கேட்ட எடப்பாடி
சென்னை: லோக்சபா தேர்தல் தொடர்பாக தொகுதி வாரியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று தேனி தொகுதி நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, தேனிக்கு பல திட்டங்களை செய்து கொடுத்தும் டெபாசிட் இழந்துள்ளோம். இரட்டை இலை நம்மிடம் இருக்கும் போது அங்கே யார் பிரபலம் என கேட்டதாக சொல்லப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பிறகு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலான லோக்சபா தேர்தலில் அக்கட்சி படு தோல்வியை சந்தித்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தோல்வியை தழுவின.

லோக்சபா தேர்தலில் சரியான கூட்டணி இல்லாதது.. கட்சியில் ஒருங்கிணைப்பு இல்லாதது என பல காரணங்கள் அதிமுக வட்டாரத்தில் சொல்லப்பட்டது. இந்நிலையில் லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நடந்து வருகிறது.
லோக்சபா தொகுதி நிர்வாகிகள் வாரியாக கடந்த 10 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை முதல்கட்ட கலந்துரையாடல் நடைபெற்றது. இதுவரையில் 7 நாட்கள் நடந்த கலந்துரையாடலில் 23 தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர். இந்த ஆலோசனையின் போது எடப்பாடி பல்வேறு ஆலோசனைகளையும் கூறினார்.
கூட்டணி குறித்து சரியான முடிவு எடுக்காதது தேர்தல் தோல்விக்கு காரணம் என்று பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடியிடம் கருத்து தெரிவித்தனர். 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க சரியான திட்டமிடல், தேர்தல் வியூகங்களை இப்போதே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்கள். இந்த நிலையில் 2-வது கட்ட கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. மீதமுள்ள 17 லோக்சபா தொகுதி நிர்வாகிகளை இன்று முதல் ஆகஸ்டு 5 ஆம் தேதி வரை சந்தித்து ஆலோசனை நடத்த எடபபாடி திட்டமிட்டுள்ளார்.
காலையில் தேனி லோக்சபா தொகுதி நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி கருத்துக்களை கேட்டறிந்தார். சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், இந்நாள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். அதிமுகவின் கோட்டையாக விளங்கும் தேனி தொகுதி தோல்விக்கு என்ன காரணம் என்பது பற்றி விவாதித்தார். அப்போது, தேனியில் நிறைய திட்டங்களை கொடுத்தும் டெபாசிட் இழந்துள்ளோம்.
இரட்டை இலையே நம்ம பக்கம் இருக்கும் போது அங்கே யார் பிரபலம் என நிர்வாகிகளிடம் எடப்பாடி கேட்டுள்ளார். தங்க தமிழ் செல்வன், டிடிவி தினகரன் போன்ற பிரபலங்ள் போட்டியிட்டதால் அதிமுக டெபாசிட் இழந்ததாக நிர்வாகிகள் பேசியதாவும் அதற்கு எடப்பாடி மேற்கண்டவாறு கேட்டதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும் பெரும்பாலான இடங்களில் கிளை செயலாளர்கள் நியமனம் முறைப்படுத்தப்படாமல் இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமியிடம் நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனை ஏற்றுக்கொண்ட எடப்பாடி இந்த பிரச்சினையை உடனடியாக களைய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் 2026 தேர்தலுக்கு தயாராகும் வகையில் தீவிரமாக உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications