பிளானே இதுதான்.. ஸ்டிரைட்டா மேட்டருக்கு வந்த "தலைவர்".. குறுக்கே வந்த கதர் சீனியர்.. டெல்லி பரபரப்பு
ராஜ்யசபா சீட்டை பெற போகும் காங்கிரஸ் தலைவர் யாராக இருக்கும்
சென்னை: கிடைத்துள்ள ஒரே ஒரு ராஜ்யசபா சீட்டை பெறுவதற்காக, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர்.
தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது.. காலியாகும் 6 இடங்களுக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நாளை துவங்க உள்ள நிலையில், தேர்தல் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.
தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்ய 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை... அந்த வகையில் திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும்..
பெட்ரோல் கலால் வரியை உயர்த்தியது ரூ.26.77, குறைத்தது ரூ.14.50.. ஜோக் காட்றீங்களா? காங்கிரஸ் கண்டனம்
4 பேர் அறிவிப்பு
இதில், கூட்டணி கட்சிகளின் ஆதரவை அதிமுக சாமர்த்தியமாக பேசி பெற்று கொண்டுவிட்டது. எனினும், யார் வேட்பாளர் என்பதில் இன்னும் இழுபறியே உள்ளது.. திமுக சார்பில் தஞ்சை சு.கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், ஆர்.கிரிராஜன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுவிட்டனர்.. திமுக தனக்குள்ள 4 இடங்களில், ஒன்றை அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு வழங்க சம்மதித்துள்ளது..
ப சிதம்பரம்
ஆனால், எப்போதுமே உள்கட்சி பிரச்சனையில் கட்டி உருளும் தமிழக காங்கிரஸ் கட்சி, இந்த பிரச்சனையிலும் மல்லுக்கட்ட ஆரம்பித்துவிட்டது.. தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இந்த பதவிக்காக சோனியா, ராகுலிடம் அடம் பிடித்து கொண்டிருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு அவர், இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினையும் சந்தித்து பேசி இருந்தார்...
கார்த்தி சிதம்பரம்
காரணம், கடந்த முறை மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து எம்பி பதவிக்கு தேர்வான ப.சிதம்பரம், தமிழகத்தில் இருந்து தேர்வாக வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார்.. சிதம்பரத்துக்கு சீட் தருவதில் கட்சி மேலிடத்துக்கு விருப்பம்தான்.. இதற்கு காரணம், ப.சிதம்பரம் எம்பியாகும் பட்சத்தில், பாஜகவை நறுக்கென பாராளுமன்றத்தில் கேள்வி கேட்ககூடியவராக இருப்பார் என்று மேலிடம் நம்புகிறது.. அதைவிட முக்கியம், பாஜகவின் பொருளாதார கொள்கைக்கு காங்கிரஸ் சார்பில் சரியான பதிலடி கொடுக்க சிதம்பரத்தால் மட்டுமே முடியும் என்றும் கணக்கு போடுகிறது.
3 ஐடியாக்கள்
அதேசமயம், கார்த்தி சிதம்பரம் எம்பியாக இருப்பதால், சிதம்பரத்துக்கும் எம்பி சீட் தர வேண்டுமா? என்ற கேள்வியையும் கட்சிக்குள் சிலர் கேட்டு முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள். மற்றொருபக்கம் தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரியும் எம்பி பதவி கேட்டு வருகிறார்.. இதற்காக அவர் டெல்லிக்கே நேரடியாக சென்றுவிட்டார்.. எப்படியாவது சோனியாகாந்தியை சந்தித்து பேசி, இந்த சீட்டை வாங்கி, அதற்கான சில விளக்கத்தையும் அளிக்க ஐடியா செய்துள்ளாராம்.. அது மொத்தம் 3 ஐடியாவாம்..!
3 பிளான்கள்
"முதலாவதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருக்கும் இந்த 3 வருட காலமும், தனக்கு எதிராக யாரும் எந்த அதிருப்தியும் தெரிவிக்கவில்லை, எதிர்ப்பு கோஷ்டியினர் யாரும் தன்னை பதவி விலக சொல்லவில்லை.. இரண்டாவதாக, தமிழக காங்கிரசுக்கு 18 எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களை பெற்று தந்து, வெற்றியையும் தேடி தந்துள்ளேன்.. மூன்றாவதாக, 2019- எம்பி தேர்தலின்போது, தேர்தலில் போட்டியிடாமல், கையில் இருந்த எம்பி பதவியையும் தியாகம் செய்து, தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன்... இந்த 3 காரணங்களுக்காக தனக்கு எம்பி பதவி தர வேண்டும்" என்று சோனியாவிடம் கேட்க போகிறாராம்.
புது சிக்கல்
பாஜகவை சமாளிக்க சரியான நபராக ப.சிதம்பரம் உள்ளார்.. அழகிரியின் செயல்பாடுகளை பார்க்கும்போது, இவரும் சரியான நபராக உள்ளதால், மேலிடம் எக்கச்சக்கமாக குழம்பி போயுள்ளதாம்.. இதற்கிடையே சுதர்சன நாச்சியப்பன், இளங்கோவன், ஆகியோரும் மேல்சபை எம்பி பதவி கேட்டு வருகிறார்கள் என்றாலும், இன்னொரு புதுகுழப்பம் எழுந்துள்ளது..
தலித் வேட்பாளர்
தமிழகத்தில் இருந்து மேல்சபைக்கு காங்கிரஸ் சார்பில் தலித் வேட்பாளர்கள் யாருமே இதுவரை நிறுத்தப்படவில்லையாம்.. அதனால், தனக்கு அந்த வாய்ப்பு தர வேண்டும் என்று விஸ்வநாதன் கோரிக்கையை ஆரம்பித்துவிட்டார்.. இப்போதைக்கு 3 பேருமே முக்கியமானவர்களாக உள்ளதால், ராகுல் என்ன முடிவு எடுக்க போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. தமிழக தலைவர்கள் பலர் டெல்லியில் முகாமிட்டு உள்ளதால், தலைநகரமே பரபரப்பாக உள்ளது. எதுவானாலும் நாளை தெரிந்துவிடும்.. பார்ப்போம்..!