இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவி யாருக்கு...? ஸ்டாலின் மனதில் உள்ள அந்த 2 நடிகர்கள்..!
சென்னை: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவருக்கான போட்டியில் இரண்டு முக்கிய நடிகர்கள் ஸ்டாலினின் பரிசீலனையில் உள்ளார்கள்.
இந்த பதவிக்கான ஆயுட்காலம் 3 ஆண்டுகள் என்பதால் தலைவர் பதவியை பிடித்துவிட இரண்டு நடிகர்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஒருவர் வெள்ளித்திரை சேர்ந்த குணசித்திர நடிகர் சந்திரசேகர் மற்றொருவர் சின்னத்திரை நடிகரான போஸ் வெங்கட்.

இயல் இசை
தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற பெயரில் 1955-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பானது கடந்த 1973-ம் ஆண்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமாக பெயர் மாற்றப்பட்டது. அரசு அமைப்பான இதன் மூலம் நலிவுற்ற கலைஞர்களுக்கு உதவித் தொகை வழங்குதல், ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகள் வழங்குதல், உட்பட இன்னும் சில பணிகள் செய்யப்படுகின்றன.

அதிமுக ஆட்சி
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக இசையமைப்பாளர் தேவாவை இரண்டுமுறை நியமித்தார் ஜெயலலிதா. அவரது பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து காலியாக உள்ள அந்த பதவியை கைப்பற்ற நடிகர்கள் சந்திரசேகர் மற்றும் போஸ் வெங்கட் ஆகியோர் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

சந்திரசேகர்
நடிகர் சந்திரசேகரை பொறுத்தவரை கடந்த 2016-2021-ம் ஆண்டு வரை சென்னை வேளச்சேரி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். அதுமட்டுமல்லாமல் கருணாநிதியின் தீவிர ஆதரவாளராக ஆரம்பம் காலம் தொடங்கி கடைசிகாலம் வரை விசுவாசமாக இருந்தவர். நடிகர்கள் டி.ராஜேந்திரன், நெப்போலியன், சரத்குமார், ராதாரவி, தியாகு என பலரும் திமுகவிலிருந்து வெளியேறிய போது அழைப்பு விடுத்தும், கொண்ட கொள்கை பிடிப்புடன் திமுகவிலேயே இருந்தவர்.

போஸ்வெங்கட்
இதேபோல் சின்னத்திரை நடிகர் போஸ் வெங்கட்டை பொறுத்தவரை தனது மாணவப் பருவத்தில் இருந்து உதயசூரியனுக்கு ஓட்டுக்கேட்டு வீதி வீதியாக அலைந்தவர். போஸ்வெங்கட்டின் குடும்பமே திமுக பாரம்பரியம் கொண்டது. அறந்தாங்கி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்று திருநாவுக்கரசர் அமைச்சராக இருந்த போது சிறுவயதிலேயே அவருக்கு எதிரான அரசியல் செய்தவர் போஸ் வெங்கட். இதுவரை இரண்டு முறை அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட சீட் கேட்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

நெருங்கிய வட்டம்
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷின் நெருங்கிய வட்டத்துக்குள் இருப்பதால் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக போஸ்வெங்கட் தான் நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது. இதனிடையே சீனியாரிட்டி அடிப்படையில் நடிகர் சந்திரசேகரும் இந்தப் பதவி தனக்கு வழங்கப்படும் என நம்பிக்கை கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications